கேரள தலைமைச் செயலகத்தில் பயங்கர மோதல்: காரணம் சாண்டி, சரிதா மீம்ஸ் பிளக்ஸ் போர்டுகள்
திருவனந்தபுரம்: கேரள தலைமைச் செயலகம் முன்பு முதல்வர் உம்மன் சாண்டியையும், தொழில் அதிபர் சரிதா நாயரையும் கிண்டல் செய்து வைக்கப்பட்ட பிளக்ஸ் போர்டுகளால் ஐக்கிய ஜனநாயக முன்னணியினருக்கும், இடது ஜனநாயக முன்னணியினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
சோலார் பேனல் மோசடி வழக்கின் முக்கிய குற்றவாளியான தொழில் அதிபர் சரிதா நாயர் முதல்வர் உம்மன் சாண்டிக்கு ரூ.1.90 கோடி லஞ்சம் அளித்ததாக தெரிவித்துள்ளார். மேலும் அரசியல் தலைவர்கள் சிலர் தன்னை உடல் மற்றும் மன ரீதியாக பயன்படுத்திக் கொண்டதாக தெரிவித்துள்ளார்.
அதற்கான ஆதாரங்களை அவர் மோசடி வழக்கு குறித்து விசாரிக்கும் நீதிபதி சிவராஜன் கமிஷன் முன்பு அளித்துள்ளார். இந்நிலையில் கேரள தலைமைச் செயலகம் முன்பு சாண்டியும், சரிதாவும் ஜோடி போட்டு இருப்பது போன்ற பிளக்ஸ் போர்டுகளை இடது ஜனநாயக முன்னணி ஆதரவு தொழிலாளர் அமைப்புகள் வைத்தன.
மேலும் மலையாள படம் ஒன்றின் போஸ்டர் போன்றே சாண்டி, சரிதாவின் புகைப்படங்களை வைத்து மீம்ஸ் போஸ்டரும் வைத்திருந்தனர். இதை பார்த்த ஐக்கிய ஜனநாயக முன்னணி ஆதரவு அமைப்பினர் இடது ஜனநாயக முன்னணி ஆதரவு தொழிலாளர் அமைப்பினருடன் மோதினர்.
போலீசார் வந்து அவர்களை விலக்கிவிட்டதுடன் அனைத்து பிளக்ஸ் போர்டுகளையும் அகற்றினர்.
இதற்கிடையே தனது பெயரை லட்சுமி நாயர் என்று மாற்றி 2013ம் ஆண்டு கெசட்டில் பதிவு செய்துவிட்டதாக சரிதா நாயர் தெரிவித்துள்ளார். மக்கள் யாரும் தன்னை அடையாளம் காணக் கூடாது என்பதற்காக அவர் பெயர் மாற்றம் செய்ததாக கூறப்படுகிறது.