ஆடி மாசம் துணிக்கு தள்ளுபடி தர மாதிரி.. புரட்டாசில கறிக்கு தள்ளுபடி தந்தா நல்லா இருக்கும்ல!
புரட்டாசி மாதம் என்பதால் ஞாயிற்றுக்கிழமை அசைவம் எடுக்காத ஆதங்கத்தை மீம்ஸ் போட்டு சமூகவலைதளங்களில் புலம்பி வருகின்றனர் நெட்டிசன்கள்.
சென்னை: ஞாயிற்றுக்கிழமை என்றாலே அசைவ உணவுக்கு என ஒதுக்கி விட்ட உணர்வுப் பிரியர்கள், புரட்டாசி மாதம் என்பதால் மதியம் சாம்பாரும், ரசமும் சாப்பிட்ட ஆதங்கத்தை சமூகவலைதளங்களில் மீம்ஸ்களாக வெளிப்படுத்தி வருகின்றனர்.
அசைவப் பிரியர்களைப் பொருத்தவரை, பிரிக்க முடியாதது என்றால் ஞாயிற்றுக்கிழமையும், அசைவ உணவும் தான். ஞாயிற்றுக்கிழமைகளில் காலையில் இட்லிக்கு தொட்டுக் கொள்வதில் ஆரம்பித்து, இரவில் கிரேவி செய்த சட்டியில் சாதத்தைப் போட்டு பிசைந்து சாப்பிட்டால்தான், அந்த நாளே அவர்களுக்கு நிறைவானதாய் அமையும். அப்படி நாடி, நரம்புகளில் எல்லாம் அசைவ உணவு ருசி ஊறியவர்களை, புரட்டாசி என நாக்கைக் கட்டி வைக்கச் சொன்னால் முடியுமா என்ன?
புரட்டாசி சனி விரதம்: சனியால் ஏற்படும் சங்கடங்கள் நீங்கும்..ஏழுமலையானை வழிபட்டால் என்னென்ன நன்மைகள்
ஆனால், ஒவ்வொரு வீட்டிற்கும் என தனித்தனி சட்டதிட்டம் உள்ளதே.. அதை மீற முடியுமா? 'நாக்கு பத்திரம்..' என தங்களுக்குத் தாங்களே சொல்லிக் கொண்டாலும், மீனுக்குப் பதில் வாழைக்காய் வறுவல், சிக்கன் 65க்குப் பதில் காளான் 65 என காய்ந்து கிடக்கும் நாக்கிற்கு, ஏதோ தங்களால் ஆன அளவிற்கு மசாலா வாசனையைப் பூசி சமாதானப் படுத்திக் கொள்கின்றனர் அசைவப் பிரியர்கள்.
இருந்தாலும் தங்களது ஆதங்கத்தை மீம்ஸ் போட்டு புலம்ப மறக்கவில்லை. சமூகவலைதளங்களில், 'இன்னைக்கு உங்க வீட்ல மட்டுமா சாம்பார், எங்க வீட்லயும் தான்..' என மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகின்றனர்.
இதோ அப்படியாக சமூகவலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வரும் சில நகைச்சுவையான மீம்ஸ்கள் உங்களுக்காக...