வண்டியிலயா போறீங்க.. பர்ஸ் பத்திரம், ஜாக்கிரதையா போங்க!
Recommended Video
சென்னை: "சார்.. சார்.. அந்த பக்கம் போகாதீங்க... அங்க டிராபிக் போலீஸ் புடிக்கிறாங்க" என்று யாராவது எச்சரித்தால், இன்று அவர்தான் நமக்கு கண்கண்ட தெய்வம். மோட்டார் வாகன சட்டத்திருத்தம் அமலுக்கு வந்ததில் இருந்து நாடே அல்லோலகல்லோலப்படுகிறது.
ஹெல்மெட் இல்லாதவர்களும், லைசன்ஸ் இல்லாதவர்களும் ஏதோ எதிரி நாட்டில் உளவு பார்க்கப் போற ஜேம்ஸ் பாண்ட் மாதிரி ஆகிவிட்டார்கள். அக்கம்பக்கம் பார்த்து எந்த டிராபிக் கான்ஸ்டபிளிடமும் சிக்காமல் வீடு போய் சேர்வதை சாதனை போல் ஆக்கிவிட்டார்கள்.
மச்சான், நான் சேஃபா வந்துட்டேன், நீ சேஃபா போயிட்டியா என்று சுனாமியில் தப்பியவர்கள் போல் மெசேஜ் அனுப்பி விசாரித்துக் கொள்கிறார்கள். மார்க்கிற்கு இந்த விஷயம் தெரிந்தால் ஃபேஸ்புக்கில் சீக்கிரம் இதற்கென பிரத்யேகமாக Reached safely ஆப்ஷனை ஆரம்பித்துவிடுவார்.
காரணம்.., கணிசமாக உயர்த்தப்பட்டிருக்கும் அபராதத் தொகை. மிஞ்சி மிஞ்சி போனால் டிராபிக் போலீசிடம் 100 ரூபாய் வெட்டிவிட்டு நடையை கட்டியவர்களிடம், எடு 10 ஆயிரம் ரூபாயை என்றால் ஹார்ட் அட்டாக் வரத்தானே செய்யும். சமீபத்தில் அசோக் யாதவ் என்ற டிரக் டிரைவரிடம் அதிகபட்சமாக ரூ.86500 அபராதம் போட்டிருக்கிறார்கள். அம்மாடியோவ்.., அப்படி என்ன ஆவணம் அவரிடம் இல்லை என்று நீங்கள் கேட்டால், அவரிடம் எந்த ஆவணமும் இல்லை என்பதுதான் பதில்.
I wore my helmet, took my vehicle papers which includes Vehicle RC, Insurance etc.., to a traffic constable. 👮
— श्रीMurali🇮🇳 (@mayamadhava) September 8, 2019
He checked it but asked where is the vehicle. I told him if everything is fine I will go home & bring it..😂😂#TrafficFine #TrafficRules
ஒடிசாவின் சம்பல்பூர் மாவட்டத்தில் ஒய்யாரமா வண்டியை ஓட்டிக்கிட்டு வந்திருக்காரு நம்ம பார்ட்டி. அதிகாலை 2 மணிக்கு மடக்கி ஆவணத்தை காட்டுன்னு கேட்டிருக்காங்க. நம்மாள் கிட்ட டிரைவிங் லைசென்ஸ் கூட இல்லை. ஓவர்லோடுக்கு ஒரு ரூ 56 ஆயிரம், லைசென்ஸ் இல்லாம ஓட்டினதுக்கு ஒரு ரூ. 5000, சரியான டைமென்ஷனில் சரக்கு ஏற்றாமல் போனதற்காக ரூ 20 ஆயிரம் என வரிசையாக தீட்டி ரூ.86500க்கு பில் கொடுத்திருக்காங்க. பதறி கதறி இருக்கு நம்ம பார்ட்டி. கடைசியா, கொஞ்சம் டிஸ்கவுண்ட் போட்டு ரூ 70 ஆயிரம் வாங்கிட்டுதான் வண்டியை விட்டிருக்காங்க.
இதாவது பரவாயில்லை. சட்டப்படி நடவடிக்கை எடுத்திருக்காங்க, சரிதானே என்று சொல்லலாம். ஹெல்மெட் இல்லாம வண்டி ஓட்டியிருக்கீங்க, அதனால ரூ500 அபராதம் கட்டிட்டு போங்க என்று ஆக்ராவை சேர்ந்த பியூஷ் என்பவருக்கு மொபைலில் மெசேஜ் வந்திருக்கு. இதைப் பார்த்ததும் அவர் பேயறஞ்ச மாதிரி ஆயிட்டாரு. ஏன்னா, அவர் ஓட்டிட்டு போனது கார். இவங்களை இன்னைக்கு உண்டு, இல்லைன்னு ஆக்கிருவோம்னு ஹெல்மெட் போட்டுகிட்டு, காரை ஓட்டிகிட்டு ஜபர்தஸ்தா அவங்க ஊர் டிராபிக் போலீஸ் ஆபிசுக்கு போயிருக்காரு. ஆனால் அவங்க இதுக்கெல்லாம் அசரவே இல்லை. இ-சலான் போடும்போது வண்டி நம்பரை தப்பா டைப் பண்ணிட்டிருப்பாங்க. இது மாதிரி நிறைய கம்ப்ளையண்ட் வருது, நீங்க போயிட்டு வாங்கன்னு கூலா சொல்லிட்டாங்களாம்.
இப்படி இந்தியா முழுக்க வளைச்சு வளைச்சு அபராதம் வாங்கிறதுனால, திருப்பதி உண்டியலை திருப்பிக் கொட்டின மாதிரி, பயங்கர வசூலாம். இடுக்கண் வருங்கால் நகுக என்பதை சிறப்பாக கடைப்பிடிக்கும் நம்ம ஆட்கள் இதற்கும் மீம்ஸ் போட்டு, கலாய் வீடியோ போட்டு சமூக வலைதளங்களில் பின்னி பெடலெடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக ஹெல்மெட்டை ஒருவர் வாடகைக்குவிடும் வீடியோ செம வைரலாக ஓடிக் கொண்டிருக்கிறது.
இதுதவிர வழக்கமான சமூக வலைதளப் போராளிகள், சரியா ரோடு போடாத அரசுக்கு என்ன அபராதம் என்றெல்லாம் ஒரு பக்கம் கேள்வி எழுப்பிக் கொண்டிருக்கிறார்கள். இப்படி ஆயிரம் கேள்வி கேட்டாலும், சட்டப்படி போலீஸ் கேட்கும் போது காட்ட வேண்டிய ஆவணத்தை காட்டலைன்னா, கட்ட வேண்டியதை கட்டித்தான் ஆகணும். உஷாரா இருங்க, அவ்வளவுதான் சொல்ல முடியும்.