ஊரே ஒன்று கூடி கழுவி ஊற்றினாலும்.. சற்றும் கவலைப்படாத சசிகலா ஆதரவாளர்கள்!
ஊரே கூடி சசிகலா முதல்வராவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தாலும் கூட அவரது ஆதரவாளர்கள் சற்றும் கவலைப்படாமல் உள்ளனர்.
சென்னை: தமிழகம் முழுவதும் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த தமிழ் மக்களும் மிகக் கடுமையான எதிர்ப்புகளையும் கண்டனங்களையும், ஆட்சேபனைகளையும், கோபங்களையும் சமூக வலைதளம் மூலமாகவும் இன்ன பிற ஊடகங்கள் மூலமாகவும் தீவிரமாக வெளிப்படுத்தி வந்தாலும் கூட சசிகலா தரப்பு சற்றும் அதைப் பொருட்படுத்தவில்லை. தனது வேலையை அது பாட்டுக்குப் பார்த்துக் கொண்டுதான் உள்ளது.
சசிகலா எப்போது முதல்வராகப் பதவியேற்பார். அவரிடம் எப்படி அமைச்சர் பதவியைப் பெறுவது என்பதில்தான் சசிகலா ஆதரவாளர்கள் படு தீவிரமாக உள்ளனர். மக்கள் தங்களை கழுவி கழுவி ஊற்றுவது குறித்து அவர்கள் கவலைப்பட்டதாகவே தெரியவில்லை.
யாரைப் பிடித்தால் அமைச்சர் பதவி கிடைக்கும், எவ்வளவு கொடுக்க வேண்டியிருக்கும் என்ற கவலையில்தான் பலரும் சசிகலா குடும்பத்தினரைச் சுற்றிச் சுற்றி வருகின்றனராம். மறுபக்கம் நடராஜன் தலைமையில் ஒரு டீம், அமைச்சர்கள் பட்டியலை தயாரிப்பதில் தீவிரமாக உள்ளதாம்.
சென்னையில் மன்னார்குடி
கிட்டத்தட்ட சசிகலா குடும்பத்தின் முக்கிய உறவுகள் அனைத்தும் சென்னைக்கு வந்து விட்டதாம். இன்று பதவியேற்பு விழா நடைபெறும். இதற்குத்தானே ஆசைப்பட்டோம், கண் குளிர கண்டு விட வேண்டும் நம் "முதல்வர் சசிகலாவை" என்ற பேரானந்தத்தில் மிதந்து கொண்டிருந்தனர் சசிகலா உறவினர்கள். ஆனால் அந்த ஆசையில் ஆளுநர் குண்டைத் தூக்கிப் போட்டு விட்டார்.
நம்பிக்கையுடன் காத்திருப்பு
சசிகலாவால் இன்று பதவி ஏற்க முடியாத நிலை ஏற்பட்டு விட்ட போதிலும் கூட உறவினர்கள் சற்றும் துவண்டு போய் விடவில்லையாம். எப்படியும் சசிகலா முதல்வராவது உறுதி. அதை யாராலும் மாற்ற முடியாது என்ற நம்பிக்கையில் அவர்கள் உள்ளனராம். மறுபக்கம் சசிகலா அமைச்சரவை குறித்த தடபுடல் ஆலோசனைகளும் தீயாக ஓடிக் கொண்டுள்ளதாம்.
யாரை தூக்கலாம்.. யாரை ஆக்கலாம்
யாரை அமைச்சராக்கலாம், யாரைத் தூக்கலாம் என்ற பேச்சுக்கள் படு ஜரூராக ஓடிக் கொண்டுள்ளதாம். அதேசமயம், எங்களுக்கு அமைச்சர் பதவி கொடுங்க என்று கூறி பணப் பெட்டிகளுடன் பல புள்ளிகள் சசிகலா குடும்பத்தினரை சுற்றி சுற்றி வருகினறனராம். எவ்வளவு கொட்டிக் கொடுக்கவும் அவர்கள் தயாராக உள்ளனராம். நான்கு ஆண்டுகளுக்குள் வட்டியும் முதலுமாக அள்ளிக் கொள்ளலாம் என்ற நம்பிக்கைதான் இதற்குக் காரணமாம்.
நல்லா திட்டுங்கோ!
ஆனால் ஊரே ஒன்று கூடி இவர்களை சமூக வலைதளங்களிலும், இன்ன பிற தளங்களிலும் கழுவிக் கழுவி ஊற்றிக் கொண்டிருக்கிறது. சமூக வலைதளங்களைத் திறந்தாலே அர்ச்சனை நெடி காரசாரமாக உள்ளது. பலரும் விதம் விதமாக சசிகலா குடும்பத்தினரை கடுமையாக விமர்சித்துக் கொண்டுள்ளனர். எதிர்ப்புகள் நாலாபுறமும் புயல் போல தாக்கிக் கொண்டிருக்கிறது.
கவலையே இல்லை!
இந்த எதிர்ப்புகள் எல்லாம் சசிகலாவையோ அல்லது அவரது குடும்பத்தினரையோ சற்றும் பாதிக்கவில்லை, உரைக்கவில்லை என்பதே நிதர்சனமாக உள்ளது. அவர்களது வேலையில் அவர்கள் படு தீவிரமாக மும்முரமாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.