18-18-18-18... 19-19-19-19.. கடைசியில் தினகரனையும் கலாய்க்க ஆரம்பிச்சுட்டீங்களாய்யா!
டிடிவி தினகரன் மற்றும் ஆதரவாளர்கள் குறித்த வடிவேலு மீம்ஸ் வைரலாகி வருகிறது.
சென்னை: கடைசியில டிடிவி தினகரனையும், கூட இருக்கும் ஆதரவாளர்களையும் வடிவேலு காமெடி வரை கொண்டு வந்து விட்டு விட்டார்கள் நம்ம ஜனங்க!
18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டது சரிதான் என்று தீர்ப்பு வந்துள்ளதால், இந்த 18 பேரும் அவங்கவங்க தொகுதியில் இனி எம்எல்ஏக்களாக செயல்பட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
பல தியாகங்கள்
"தகுதி நீக்கம் செய்யப்பட்டவர்களை வைத்தே அதே தொகுதியில் போட்டியிடுவேன் என்றும், பல தியாகங்களை செய்துவிட்டு 18 பேரும் எங்களுடன் இருக்கிறார்கள்" என்றும் டிடிவி தினகரன் சொல்கிறார்.
எவ்வளவு அழுகிறார்களோ
ஆனால் உண்மையிலேயே இவர்கள் அனைவரும் உள்ளுக்குள் எவ்வளவு அழுது கொண்டிருக்கிறார்களோ நமக்கு தெரியாது. தங்களை நம்பி லட்சக்கணக்கான மக்கள் ஓட்டு போட்டு தேர்ந்தெடுத்தும், தொகுதி பக்கம் போக முடியாத நிலையில் இருந்தனர். அவர்களின் கேள்விக்கு பதில் சொல்ல முடியாத நிலையிலும் இருந்தார்கள். தீர்ப்பு சாதகமாக வந்தால் தொகுதி பக்கம் போய் எல்லாத்தையும் சரிக்கட்டி விடலாம் என்று பார்த்தார்கள். ஆனால் அதுவும் முடியவில்லை.
இது எப்படி சாத்தியம்?
இப்போது தீர்ப்பை எதிர்த்து உச்ச உச்சநீதிமன்றத்திலும் மேல் முறையீடு செய்துள்ளனர். மேல்முறையீடும் செய்துவிட்டு இடைத்தேர்தலிலும் போட்டியிடுவோம் என்று அமமுக தலைமை சொல்கிறது. இது எப்படி சாத்தியமோ தெரியவில்லை. மேல்முறையீடு வழக்கு இருக்கும்போது எப்படி இடைத்தேர்தல் நடத்தப்படும் என்பது அமமுக தலைமை மட்டுமே அறிந்த உண்மை போலும். அப்படிப்பார்த்தாலும் இதிலும் சறுக்கல்தான் 18 பேருக்கு கிடைக்கும் போல உள்ளது.
மீம்ஸ் வைரல்
இப்படி தினகரனை நம்பி பின்னால் போனதையும், தற்போது மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் ஆதரவாளர்கள் தரப்பு தவிப்பது வடிவேலு காமெடிவரை சென்றுவிட்டது. நேற்று தீர்ப்பு வந்ததிலிருந்தே ஒரு வடிவேலு மீம்ஸ் ஒன்று வைரலாகி வருகிறது. 'ஆசை' படத்தில் வரும் ஜோக் ஒன்றினை வைத்து இந்த மீம் உலா வருகிறது. அந்த மீம் இதோ:
வடிவேலு: டேய்... நம்ம ஊர் கணக்கு வாத்தியார் பையன்
நண்பர்கள்: லூசு...
வடிவேலு... ஆங்.. அவன் பண்ண விஷயம் தெரியமா?
நண்பர்கள்: என்னப்பா?
வடிவேலு: அவங்க வீட்டு கொல்லப்பக்கத்துல ஒரு கிணறு இருக்கு இல்ல... அதை எட்டிப்பார்த்துக்கிட்டே 18, 18, 18,18 18, 18, 18,18-ன்னே புலம்பிக்கிட்டு இருந்தான். திடீர்னு அந்த பக்கமா வந்த ஒரு ஐயர்.. "ஏன்டா அம்பி, என்ன கிணற பாத்துண்டே 18, 18, 18,18, 18, 18, 18,18-னு புலம்பிண்டு இருக்கியே, அப்படி என்ன கிணத்துல இருக்குன்னு சொல்லிக்கிட்டே எட்டி பாத்தாரு. இவரு என்ன பண்ணாரு தெரியுமா?"
நண்பர்கள்: அப்பறம்?
வடிவேலு: ஐயரோட டிக்கியில விட்டான் ஒரு எத்து... உடனே இவன் 19, 19, 19, 19, 19, 19, 19, 19-ன்னு எண்ண ஆரம்பிச்சான். இதுல இருந்து என்ன தெரியுது? 19 பேரை உள்ளே தள்ளி விட்டிருக்கான்"
இப்படி ஒரு மீம்ஸ் இணையத்தில் பறந்த பறந்து வருகிறது... அவை ஷேர் செய்யப்பட்டு கமெண்ட்டுகளும் குவிந்து வருகின்றன.
உண்மையிலேயே 18 பேரின் நிலைமை என்ன ஆகுமோ தெரியவில்லைதான்!!