"மெடிக்கல் மிராக்கிள்" 100 வருடத்திற்கு முன்பு "ஃப்ளூ".. இப்போது கொரோனா.. தப்பி மீண்ட சூப்பர் தாத்தா
ரோம்: உண்மையிலேயே மெய் சிலிர்க்க வைக்கிறது இந்த 101 வயது தாத்தாவின் கதை. இத்தாலிக்காரரான இவர் கொரோனாவைரஸ் பாதிப்பிலிருந்து மீண்டு வந்து அதிசயிக்க வைத்துள்ளார்.
Recommended Video
ஆனால் இதை விட முக்கியமான சமாச்சாரம் என்னென்னா, இத்தாலியை முன்பு ஆட்டிப் படைத்த மிகக் கொடிய ப்ளூ வைரஸ் பரவலிலும் போது கூட இவர் தப்பிப் பிழைத்தவராம். இப்போது 2வது முறையாக ஒரு கொள்ளை நோயிலிருந்து இவர் விடுபட்டுள்ளது உண்மையிலேயே "மெடிக்கல் மிராக்கிள்"தான்.
கொரோனாவைரஸ் பாதிப்புக்கு கடுமையான உயிர்ச் சேதத்தை கண்டு வருகிறது இத்தாலி. சீனாவைத் தாண்டி போய் விட்டது உயிரிழப்பு. கிட்டத்தட்ட 10 ஆயிரத்தை நெருங்கி வருகிறது பலியானோர் எண்ணிக்கை. இது சீனாவை விட 3 மடங்கு அதிகமாகும்.
பலி எண்ணிக்கை
இத்தாலியின் அனைத்துப் பகுதிகளுமே கொரோனாவைரஸால் கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளன. கொத்துக் கொத்தாக மக்கள் செத்துக் கொண்டுள்ளனர். என்ன செய்வது என்று தெரியாமல் விழி பிதுங்கி நிற்கிறது இத்தாலி. 60 வயதுக்கு மேற்பட்டோர்தான் அதிக அளவில் பலியாகியுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் அங்கிருந்து ஒரு ஹேப்பி நியூஸ் வந்துள்ளது.
101 வயது
101 வயதான பி என்று மட்டும் அடையாளம் காட்டப்பட்டுள்ள ஒரு முதியவர் கொரானா பாதிப்பிலிருந்து மீண்டு வந்துள்ளார். அவர் இந்த வயதில் மீண்டு வந்தது ஒரு பெரிய அதிசயம் என்றால் அவர் இதற்கு முன்பு இதேபோல ஒரு கண்டத்தில் சிக்கி தப்பியவர் என்பதை கேட்டால் மயக்கமே வருகிறது நமக்கு. உண்மையிலேயே கெட்டியான தாத்தாதான். அதாவது 1918ம் ஆண்டு ஸ்பானிஷ் ஃப்ளூ என்ற பெரும் கொள்ளை நோய் இத்தாலியை ஆட்கொண்டது.
துணை மேயர்
பலரும் அதில் சிக்கி உயிரிழந்தனர். ஆனால் அந்த கொடும் கொள்ளை நோயில் சிக்காமல் தப்பிப் பிழைத்தவர்தான் இந்த தாத்தா. இந்த தாத்தாவின் சொந்த ஊரானது கடலோர நகரமான ரிமினி ஆகும். இவர் குறித்து அந்த நகர துணை மேயர் குளோரியா லிசி கூறுகையில், " மிஸ்டர் பி 1919ம் ஆண்டு பிறந்தவர். அதாவது ஸ்பானிஷ் ஃப்ளூ நமது நாட்டை சூறையாடிக் கொண்டிருந்தபோது பிறந்தவர் இவர். 1918ம் ஆண்டு ஜனவரியில் தொடங்கி 1920ம் ஆண்டு டிசம்பர் வரை இத்தாலியை சூறையாடியது இந்த ஸ்பானிஷ் ஃப்ளூ.
அறிவிப்பு
உலகம் முழுவதும் இந்த கொள்ளை நோய்க்கு 5 கோடி பேர் உயிரிழந்தனர். ஆனால் அதை விட பெரிய கொள்ளை நோயாக தற்போதைய கொரோனாவைரஸ் கருதப்படுகிறது. ஆனால் ஸ்பானிஷ் ஃப்ளூ பாதிப்பிலிருந்து சிக்கித் தப்பிய இந்த தாத்தா தற்போது கொரோனாவைரஸ் பாதிப்பிலிருந்தும் மீண்டிருப்பது அனைவருக்குமே பெரும் நம்பிக்கையைக் கொடுத்துள்ளது. இதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறேன்" என்றார்.
தாத்தா
இந்த தாத்தா ஒரு வாரத்திற்கு முன்பு ரிமினியில் உள்ள ஆஸ்பிடல் இன்பெர்மி டி ரிமினியில் அனுமதிக்கப்பட்டார். இவர்தான் கொரோனாவைரஸ் பாதிப்புக்குள்ளான அதிக வயதுடையவர் என்ற "சாதனை"யும் படைத்தார். ஆனால் சிந்தாமல் சிதறாமல் என்று சொல்வார்களே அது போல பத்திரமாக மீண்டு வந்துள்ளார் இந்த தாத்தா!. இது டாக்டர்களுக்கு மட்டுமல்லாமல் இத்தாலி மக்களுக்குமே கூட பெரும் நம்பிக்கையைக் கொடுத்துள்ளது.
நல்லா இருங்க..
"வயதான அனைவருமே கொரோனாவைரஸ் பாதித்தால் இறந்து விடுவார்கள் என்ற பொதுக் கருத்தை, அச்சத்தை நீக்குவதாக இது அமைந்துள்ளது. பாதிப்புக்குள்ளான ஒவ்வொருவரும் நம்பிக்கையுடன் இருக்க வேண்டும். மிஸ்டர் பி மீண்டு வந்திருப்பது மிகப் பெரிய சந்தோஷமான செய்தி. இதே சந்தோஷம், நம்பிக்கை மக்களுக்கும் வேண்டும். நிச்சயம் இதிலிருந்து மீண்டு வருவோம்" என்று டாக்டர்கள் கூறியுள்ளனர். லவ்யூ தாத்தா.. இன்னும் நல்லா இருங்க.. நீங்க மீண்டு வந்திருப்பது அனைவரையும் நம்பிக்கை கொள்ள வைத்திருக்கிறது என்றுதான் சொல்லத் தோன்றுகிறது!
காய்ச்சல்
உலகையே உலுக்கிய இந்த ஸ்பானிஷ் ஃப்ளூ காய்ச்சலுக்கு நமது மகாத்மா காந்தியே கூட சிக்கி அவதிப்பட்டார். இந்த காய்ச்சல் என்னை ரொம்ப கஷ்டப்படுத்துகிறது என்று அவர் கூறியதாக ஆவணங்கள் உள்ளன. இந்தியாவில் மட்டும் கிட்டத்தட்ட 2 கோடி பேர் இந்த காய்ச்சலில் சிக்கி இறந்ததாக கூறப்படுகிறது. இப்படிப்பட்ட காய்ச்சலில் சிக்காமல் தப்பி மீண்ட இந்த தாத்தாதான் தற்போது இன்னொரு பெரும் கொள்ளை நோயில் சிக்கி மீண்டுள்ளார். சிலிர்க்க வைக்கிறது இவரது கதை.!