2021 புத்தாண்டு தீர்மானங்கள்.. தோட்டம் போடுங்க.. பூத்துக் குலுங்கட்டும்!
சென்னை: இதோ 2021 நெருங்கி விட்டது. நம்மையெல்லாம் நொறுக்கிப் போட்ட 2020ஐ விரட்டி விட்டு, 2021க்கு வரவேற்பு கொடுக்கத் தயாராவோம்.
இந்த புது வருடத்தில் நாம் ஒரு தீர்மானம் போடலாம்.. இப்போதெல்லாம் மாடித் தோட்டம் என்பது பேஷனாகி விட்டது.
நாம் அதை Passion ஆக எடுத்துக் கொண்டு களத்தில் இறங்கலாம். மாடித் தோட்டம் மணக்கட்டும்.. காய்கறிகள், பழங்கள் பூத்துக் குலுங்கட்டும்.. இதனால் பல நன்மைகள் உண்டு.
மாடித் தோட்டம்
ஒவ்வொருவரும் ஆரோக்கியமாக வாழ்வதற்கு காய்கறிகள் பழங்கள் மிகவும் அவசியம். ரசாயனம் கலந்த காய்கறிகள் நம் உடலுக்குத் தீங்கு விளைவிக்கிறது. மார்க்கெட் சென்று காய்கறி வாங்கி வந்து சமைப்பதில் சுவை இருப்பதில்லை. இதுவே நம் வீட்டில் வளர்ந்த காய்கறி என்றால் அதன் மதிப்பே தனி தான்.
குட்டித் தோட்டமும் ஓகேதான்
காய்கறிகள் பழங்களை வளர்க்க நம் வீட்டைச் சுற்றிப் பெரிய தோட்டம் தேவையில்லை. சென்னை பெங்களூரு போன்ற பெருநகரங்களில் வசிப்பவர்கள் அவர்கள் வீட்டுமாடியில் தோட்டம் போடலாம். சிறு சிறு பைகளில் மண்ணை நிரப்பி விதையிட்டு சூரிய வெளிச்சத்தில் வளர்ந்து விடும்.
தக்காளி பழங்கள்
கீரைகள் பதினைந்து நாட்களிலும் தக்காளி போன்றவை வளர ஒரு மாதமும் ஆகும். அதன் சுவையில் நாம் மெய்மறந்து விடுவோம். நம் பிள்ளைகளுக்கும் நல்ல சுவையான காய்கறிகளைக் கொடுத்த நிறைவும் நமக்கு இருக்கும்.
காலை புத்துணர்ச்சி
மாடித்தோட்டம் போடுவதால் காலையில் நல்ல காற்றைச் சுவாசிக்க முடியும். பச்சைப் பசேலென செடிகளைப் பார்க்கும்போது மனம் புத்துணர்ச்சி அடைகிறது.நம் பிள்ளைகளுக்கும் இதைக் கற்றுக் கொடுங்கள். அவர்களும் செடிக்குத் தண்ணீர் ஊற்றுவது களை எடுப்பது போன்ற செயல்களைச் செய்யும் போது அவர்களுக்கு விவசாயத்தின் மீது ஆர்வம் ஏற்படும்.
உற்சாகம் கூடும்
ஒரு கிலோ வெங்காயம் நூறு ரூபாய் கொடுத்து வாங்குவதற்குப் பதிலாக நம் வீட்டிலேயே அது கிடைத்தால் அதனால் ஏற்படும் மகிழ்ச்சியை நீங்களும் அனுபவித்துப் பாருங்களேன். இந்தப் புத்தாண்டில் மாடித்தோட்டம் போடுங்கள். காய்களும் பழங்களும் காய்த்துக் குலுங்கட்டும்.