Exclusive: இது சின்ன விஷயம் இல்லை.. எழுந்து நின்று பாராட்டுவோம் இந்த மாபெரும் ஆசிரியைகளை!
அரசு பள்ளி மாணவர்களின் திறமையை ஊக்குவிக்க ஆசிரியைகள் 4 பேர் முற்பட்டுள்ளனர்.
Recommended Video
சென்னை: "நாங்க செய்றது சின்ன விஷயம்தான்.. ஆனா அதனோட மதிப்பு அதிகம்... அதனோட மகிழச்சி அதிகம்" என்கிறார்கள் நடுநிலை பள்ளி ஆசிரியைகள் நான்கு பேர்.
யார் இந்த நான்கு ஆசிரியைகள்? என்ன விஷயம் செய்திருக்கிறார்கள் என்று விசாரிக்கும்போது, தமிழகம் முழுவதும் உள்ள அரசு நடுநிலை பள்ளி மாணவர்களின் சின்ன சின்ன திறமையை ஊக்குவிப்பதற்காக, ஒரு அமைப்பை தொடங்கி உள்ளார்கள் என்பதும், இதற்காக தங்கள் சம்பள பணத்தில் இருந்து ஒரு பகுதியையும் ஒதுக்கி இந்த புதிய அமைப்பினை மிக தீவிரத்துடன் விரிவுபடுத்தி வருகிறர்கள் என்பதும் தெரியவந்தது.
இதுகுறித்து அவர்களிடமே கேட்டு விடலாம் என தோன்றியது. "ஒன் இந்தியா தமிழ்" சார்பாக இந்த நான்கு ஆசிரியைகளிடம் புதிய அமைப்பு, அதன் நோக்கம், செயல்பாடு பற்றிய கேள்விகள் முன் வைக்கப்பட்டது. அப்போது அவர்கள் பகிர்ந்து கொண்ட விஷயங்கள்தான் இவை:
கேள்வி: உங்கள் அமைப்பின் நோக்கம் என்ன? இந்த அமைப்பை தொடங்க காரணம் என்ன?
மாற்றங்களும் ஏற்றங்களும் தன்னால் உருவாவதில்லை. உருவாக்கி கொள்வதுதான் என்று தன் பேச்சை தொடங்குகிறார் ஆசிரியை கீதா. அரசு பள்ளி மாணவர்களின் சின்ன சின்ன சாதனைகளை கூட நாம் ஊக்குவித்து விட்டால் அவர்கள் வானத்தில் வட்டமிடுவர். ஆனால் அவர்களை யார் ஊக்குவிப்பது என்ற கேள்வி எழுகிறபோது, ஆசிரியர்களாகிய நாம்தான் ஊக்குவிக்க வேண்டும் என்ற பதிலும் கிடைத்தது. இன்றைய காலகட்டத்தில் அரசுப்பள்ளிக்கு பிள்ளைகள் வருவதே சவாலான ஒன்று. அதனை கருத்தில் கொண்டுதான் அரசு பள்ளி எங்கள் முகவரி என்ற அமைப்பினை தமிழ்நாட்டில் முதல்முறையாக பெண் ஆசிரியர்கள் நான்கு பேர் ஒன்றாக சேர்ந்து உருவாக்கி இருக்கோம்.
இந்த அமைப்பின் நோக்கம் அரசு பள்ளி மாணவர்களின் தனித்திறமைகளை ஊக்குவிப்பதுதான். அது பெரிய அளவில் இருக்க வேண்டும் என்றில்லை. சின்ன சின்ன திறமைகள், அது அவர்களது கையெழுத்து திறன், அல்லது படம் வரைவது, அல்லது தனிப்பட்ட எந்த ஒரு திறமையாக வேண்டுமானாலும் இருக்கலாம். அத்தகைய திறமைகள் எங்கள் கவனத்துக்கு வரும்போது, நாங்கள் அந்த மாணவர்களை பாராட்டி எங்கள் ஊதியத்தின் ஒரு பகுதியிலிருந்து 1000 ரூபாய் அனுப்பி வைப்போம். அதனை அந்த வகுப்பின் ஆசிரியர், மாணவனுக்கு என்ன பரிசு பொருள் வேண்டுமோ அதை வாங்கி கொடுப்பார். அப்படி கொடுக்கும்போது, நீ சாதிக்க பிறந்தவன், இன்னும் நிறைய சாதிப்பாய் என்று சொல்லி அந்த பரிசு பொருளை தந்தால் மாணவர்கள் அதிக சந்தோஷப்படுவார்கள். இதன்மூலம் அந்த மாணவர்கள் தம்மால் இன்னும் அதிகமாக சாதிக்க முடியும் என்ற எண்ணம் ஏற்படும்.
கேள்வி: உங்களின் இந்த புதிய அமைப்பினை எப்படி தமிழகம் முழுவதும் செயல்படுத்துகிறீர்கள்? உங்களின் நோக்கத்தை எப்படி மற்ற பள்ளி மாணவர்களுக்கு தெரியப்படுத்துகிறீர்கள்?
ஆசிரியை புவனா
இது முழுக்க முழுக்க அரசு பள்ளி மாணவர்கள் நலனை சார்ந்ததுதான். எங்களுக்கு எல்லாமே ஃபேஸ்புக், வாட்ஸ் அப் போன்ற சமூகவலைதளங்கள்தான் உதவுகின்றன. நாங்கள் இதற்காகவே ஒரு க்ரூப் ஏற்படுத்தி உள்ளோம். அதில் அரசு பள்ளி மாணவர்கள், மற்றும் ஆசிரியர்கள் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். தமிழகம் முழுவதும் தன்னார்வமாக அரசு பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் இருக்கிறார்களோ, அவர்களை எங்கள் குரூப்-ல் இணைத்து வருகிறோம். இதை தவிர ஒவ்வொரு மாவட்டங்களிலும் இதை தொடங்குவதற்காகவும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். இதற்காக நண்பர்கள் குழுவும் தனியாக செயல்பட்டு வருகிறது. இதை ஆரம்பித்து 3 மாதம்தான் ஆகிறது. எனவே இந்த முயற்சியை மாநிலம் முழுவது விரிவுபடுத்துவதுதான் எங்கள் நோக்கமே.
கேள்வி: இந்த அமைப்பிற்கு ஆசிரியர்கள், மாணவர்களிடம் வரவேற்பு எப்படி இருக்கிறது?
ஆசிரியை பத்மா ஸ்ரீ
நாங்கள் தருவது சிறிய தொகைதான், சிறிய பரிசுகள்தான். ஆனால் அதை அந்த பள்ளி மாணவர்கள் வாங்கும்போது அவர்கள் முகத்தில் தெரியும் மகிழ்ச்சிக்கு ஈடு இணையே கிடையாது. தனித்திறமைக்காக அந்த மாணவனை சுற்றி நின்று திறமையை பாராட்டி, கைதட்டி, ஊக்குவிக்கும்போது பூரித்து போகிறான். நம்மை ஊக்குவிக்க இத்தனை பேரா என்று வியந்து போகிறான். ஆசிரியர்களின் பிரதிபலிப்புதான் மாணவன். என்றாலும் எங்கள் நோக்கத்தை சரியாக புரிந்து கொண்டு திறமை மிகுந்த மாணவனை எங்களுக்கு அடையாளப்படுத்தும் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் நாங்கள் விருது வழங்குகிறோம். இதுவரை 12 ஆசிரியர்களுக்கு நாங்கள் விருது கொடுத்துள்ளோம். ஆசிரியர்களின் ஒத்துழைப்புதான் இதில் மிகவும் அவசியம்.
கேள்வி: உங்களின் முயற்சி பள்ளிகல்வித்துறை உள்ளிட்ட கல்வி நிறுவனங்களுக்குமா தெரியுமா? மாணவர்களின் பெற்றோர் தரப்பில் இதுபற்றி என்ன நினைக்கிறார்கள்?
ஆசிரியை சசிகலா
பிள்ளைகளுக்கு உதவுமாறு அடுத்தவர்களிடம் கேட்பதைவிட, அதை எங்களுக்குள் இருந்து முதலில் தொடங்குவதுதான் சிறந்தது என்று நினைத்தோம். அந்த உணர்வு நமக்கு முதலில் வரவேண்டும் என்றுதான் விரும்பினோம். அரசாங்கத்திடம் உதவி கேட்டாலும் நிதி இல்லை, தன்னார்வு அமைப்பை நாடுங்கள் என்று சொல்லுகிறது. எனவே ஆசிரியர்களான நாங்களே முதலில் உதவுவோம் என்று முடிவெடுத்தோம். 4 பேர் தொடங்கிய இந்த அமைப்பில் இன்று 150-க்கும் மேலான ஆசிரியர்கள் இணைந்துள்ளார்கள். அரசு பள்ளியில் எத்தனையோ பிள்ளைகள் கஷ்டப்படுவதை நாங்கள் கண்கூடாக பார்க்கிறோம். ஏழ்மையால் கல்வி தடை படக்கூடாது என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். பொருளாதார தடைகளை உடைத்து, அரசு பள்ளி மாணவர்களை ஊக்குவிப்பதே எங்களின் ஒரே லட்சியமாக இப்போது உள்ளது. எங்களின் இந்த முயற்சியை விரைவில் அரசாங்கத்தின் பார்வைக்கு கொண்டுபோவோம்.
இவ்வாறு ஆசிரியைகள் தெரிவித்தனர். அரசின் கையிலே இருந்து செயல்படக்கூடிய கல்வித்துறை இன்று தனியாரிடம் மண்டியிட்டு கிடக்கிறது. தனியார் பள்ளியின் அசுரத்திற்கு ஏற்றார்போல் அரசு பள்ளியும் அதல பாதாளத்தில் சென்று கொண்டிருக்கிறது. இப்படிப்பட்ட ஒரு நிலையில், அப்பள்ளி மாணவர்களை ஊக்குவிக்க இந்த 4 ஆசிரியைகள் எடுத்துக் கொண்ட முயற்சியையும், நோக்கத்தையும் எவ்வளவு பாராட்டினாலும் தகும்!!