குவார்ட்டர்லிக்குக் கூட மூக்கால் அழும் பசங்களா.. இந்த தாத்தாவைப் பார்த்து கத்துக்கங்க!
தார்வாட்: கர்நாடக மாநிலம் கொப்பல் நகரைச் சேர்ந்த 89 வயதாகும் சுதந்திரப் போராட்ட வீரர் ஒருவர் பிஎச்டி படிப்புக்காக களம் குதித்திருப்பது அப்பகுதியில் பெரும் ஆச்சரிய அலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இப்பெல்லாம் படி என்று சொன்னாலே மாணவர்களுக்கு கடுப்பாகி விடுகிறது. எப்பப் பாரு படி படின்னு என்று நம்மையே எரித்து விடுவது போல பார்க்கிறார்கள். அதிலும் பிராஜக்ட் என்று வந்து விட்டால் போதும்.. பெத்தவங்கதான் விழுந்து விழுந்து இடுப்பு ஒடிய முதுகு வளைய செய்து முடிக்க வேண்டியுள்ளது.. குட்டீஸ்கள் செல்போனை நோண்டிக் கொண்டும், டிவி பார்த்துக் கொண்டும் ஹாயாக திரிகிறார்கள்.
ஆனால் இந்த தாத்தா அசத்துகிறார், ஆச்சரியப்படுத்துகிறார்.. இவருக்கு வயது 89. பெயர் ஷரணபசவராஜ் பிசரஹள்ளி. கர்நாடக மாநிலம் கொப்பல் பகுதியைச் சேர்ந்தவர். சுதந்திரத்திற்காக போராடியவர். அனைவருக்கும் மிகச் சிறந்த முன்னுதாரணமாக, ஊக்க சக்தியாக இருக்கிறார் இந்த தாத்தா.
இந்த தள்ளாத வயதிலும் படிப்பார்வம் இவருக்கு சற்றும் குறையவில்லை. பிஎச்டி ஆய்வு படிப்பை மேற்கொள்ள ஆயத்தமாகி வருகிறார் பிசரஹள்ளி. ஹம்பி பல்கலைக்கழகத்தில் கன்னட சாஹித்யா (கன்னட இலக்கியம்) பிரிவில் பிஎச்டி ஆய்வை மேற்கொள்ள முடிவு செய்தார். சமீபத்தில் இதற்காக நடந்த நுழைவுத் தேர்வையும் எழுதியுள்ளார்.
இதுகுறித்து பிசரஹள்ளி கூறுகையில், கடந்த ஆண்டு முயற்சி செய்தேன். ஆனால் தேர்வாகவில்லை. ஆனால் இந்த முறை விட மாட்டேன். நன்றாக எழுதியுள்ளேன். நிச்சயம் பாஸ் ஆகி விடுவேன்.
எனக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது. கன்னட இலக்கியம், கவிதைகள் குறித்து நூல் எழுதவும் விருப்பமாக உள்ளேன் என்றார் பிசரஹள்ளி. பிசரஹள்ளி தார்வாட் பல்கலைக்கழகத்திலிருந்து முதுகலை சட்டப் படிப்பை முடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சூப்பர் தாத்தா!