தந்தைக்கு நரம்பு தளர்ச்சி.. வறுமையை போக்க.. 10 கி.மீ. சைக்கிள் மிதித்து வடை விற்கும் தஞ்சை சிறுவன்
தஞ்சை: தஞ்சாவூரில் கொரோனா ஊரடங்கு வருமானமின்றி முடங்கிய தன் குடும்பத்தை காப்பதற்காக 12 வயது சிறுவன் தினமும் 10 கிலோ மீட்டர் வரை சைக்கிளிலேயே சென்று வடை, சமோசா உள்ளிட்ட பலகாரங்களை வியாபாரம் செய்து வருகிறார். அதன் மூலம் அந்த சிறுவனின் குடும்பம் வாழ்ந்து வருவதுடன் சின்ன சிறுவனின் பொறுப்புணர்வு தஞ்சையில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video
தஞ்சாவூர் அருகே உள்ள மானோஜிப்பட்டி கிராமம் உப்பரிகை என்ற பகுதியை சேர்ந்தவர் வரதராஜன் கொத்தனாராக வேலை செய்து கொண்டிருந்தார். இவரது மனைவி சுமதி. இவர்களுக்கு 10ம் வகுப்பு படிக்கிற மகள், 6 ம் வகுப்பு மற்றும் 4ம் வகுப்பு படிக்கின்ற இரண்டு மகன்கள் என மொத்தம் மூன்று பிள்ளைகள் உள்ளனர்.
இந்த நிலையில் நரம்பு தளர்ச்சி நோயால் பாதிக்கப்பட்ட வரதராஜனால் சில வருடங்களாகவே வேலைக்கு செல்ல முடியவில்லை. இதனால் குடும்பம் வறுமையில் தவித்துள்ளது.
இதையடுத்து அவரது மனைவி சுமதி வீட்டிலிருந்தபடியே நூல் கண்டு தயாரிக்கும் கூலி வேலை செய்து வந்தார்.
புது கொடுமை.. தமிழகத்தில் ஆப்பிரிக்க மாவுப்பூச்சி தாக்குதல்.. முதல்வர் முக்கிய அறிவிப்பு
பிள்ளைகள்
அதில் கிடைத்த சொற்ப வருமானத்தை கொண்டு தன் பிள்ளைகள் மற்றும் கணவரையும் கவனித்து வந்துள்ளார். இந்த நிலையில் கொரோனா ஊரடங்கு உத்தரவு சுமதியை கடுமையாக பாதித்தது. ஒரு பக்கம் முடங்கி கிடக்கும் கணவன் மறும் பக்கம் 3 பிள்ளைகள் என பரிதவித்தபடி இருந்துள்ளார்.
வேலைக்கு செல்கிறேன்
மேலும் தன் நிலையை நினைத்து கலங்கியிருக்கிறார். அம்மாவின் அழுகையை தாங்க முடியாத மகன் விஷ்ணு "நான் வேலைக்கு போய் உங்களை பார்த்துக்குறேம்மா" என சொல்ல அப்படியே மகனை வாரி அணைத்து கொண்டுள்ளார் சுமதி. இதையடுத்து சுமதியோ தன் மகனிடம் " நீ வேலைக்கெல்லாம் போக வேண்டாம், போண்டா, வடை எல்லாம் செய்து தருகிறேன். அதை விற்பனை செய்துவிட்டு வா என கூறியுள்ளார்.
வடை விற்பனை
பின்னர் அவர் தினமும் வடை, போண்டா சுட்டு கொடுக்க அதனுடன் கடைக்கு சென்று மொத்தமாக சமோசா வாங்கி கொண்டு வியாபாரத்திற்கு சென்று அவற்றை விற்று வருகிறார் விஷ்ணு. இதில் தினமும் ரூ. 100 வருமானம் கிடைக்கிறது. அதனை கொண்டு கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக சுமதி குடும்பத்தை நடத்தி வருகிறார்.
தவிக்கும் அம்மா
இதுகுறித்து விஷ்ணுவிடம் நமது ஒன் இந்தியா தமிழ் தளம் சார்பாக பேசினோம். அவர் கூறுகையில் "அம்மா பலகாரம் சுட்டு கொடுப்பாங்க. நான் சைக்கிளில் எடுத்து கொண்டு 10 கிலோ மீட்டர் வரை சென்று விற்று வருகிறேன். காலை எட்டு மணிக்கு கிளம்பினால் மதியத்திற்கு மேல் தான் வீடு திரும்புவேன். எனக்காக அம்மா தவிப்போடு காத்திருப்பாங்க.
நினைப்பு
ஒவ்வொரு நாள் நான் கொண்டு செல்லும் எல்லா பலகாரமும் விற்று விடும். சில நாள் அப்படியே இருக்கும் அந்த சமயத்தில் அம்மாவை நெனச்சு அழுகையா வரும். வடை, சமோசா என கூவிக் கொண்டே செல்வதால் தொண்டையும், சைக்கிள் மிதிப்பதால் கால்களும் பயங்கர வலியா இருக்கும். இதை பார்த்தா குடும்பமே பட்டினி கிடக்குமே என்ற நினைப்பு என்னை ஓட வைக்கும்.
டாஸ்மாக்
கடந்த ஒரு மாதமாக இந்த வியாபாரம் செய்து வருகிறேன். இப்ப பரவாயில்லை ஸ்கூல் திறந்ததும் படிக்க போய்டுவேன். அப்ப அம்மா என்ன செய்ய போறாங்கன்னு தெரியலை என சொல்லிவிட்டு முழுசா வித்து முடிச்சாத்தான் ரூ 100 கிடைக்கும் என்று சைக்கிளை எடுத்து கொண்டு பரபரப்பாக கிளம்பினார் விஷ்ணு. டாஸ்மாக் திறந்தவுடன் சேர்த்து வைத்த பணத்தையெல்லாம் பாட்டில் மீது போட்ட சிலருக்கு மத்தியில் குடும்பத்தை காக்க வேண்டும் என்ற பொறுப்புணர்வு கொண்டு பயணிக்கும் இந்த சிறுவனின் கதை நெகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது.