நற்பண்புகளே உங்களை முழுமையாக்கும்.. அதுதான் வரலாறு படைக்க தூண்டும்
சென்னை: ஒரு மனிதனை முழுமையாக்குவது அவன் அல்லது அவளின் நற்புண்புகள்தான். அதுதான் வரலாறு படைக்கத் தூண்டும்.. வாழ்க்கையில் சிறந்த நிலைக்கும் அவர்களைக் கொண்டு செல்லும்.
நல்ல பண்புகள் இல்லாத எவரும் உயரிய நிலையை அடைய முடியாது.. அப்படியே அடைந்தாலும் அதில் நீடித்திருக்க முடியாது. இதுதான் எதார்த்தம். நிறையப் பேர் குறுக்கு வழியில் மேலே வர முயல்வார்கள்.. சில நேரங்களில் அவர்களுக்கு வெற்றியும் கிடைக்கும். ஆனால் அது எப்போது வேண்டுமானாலும் சரிந்து தரை மட்டமாகும்.
ஒருவர் நமக்கு உதவி செய்தால் நாம் அவருக்கு நன்றி கூறுவோம். அவ்வாறு நன்றி கூறுவதும் நற்பண்பே. நற்பண்புகள் உடைய மனிதன் சமூகத்தால் போற்றப்படுகிறான். உங்கள் குழந்தைகளுக்குப் பெரியோரை மதிக்கக் கற்றுக் கொடுங்கள். பால் விற்பவர் ஆகட்டும் உங்கள் வீட்டில் வேலை செய்பவர் ஆகட்டும் அனைவரையும் மரியாதையுடன் அழைக்க உங்கள் பிள்ளைகளுக்குக் கற்றுக் கொடுங்கள்.
ஹலோ ஹலோ.. எப்படி இருக்கீங்க.. நேத்து என்ன நாள் தெரியுமா?
குறுக்கு வழி கூடாது
குறுக்கு வழியில் நாம் அடையும் புகழ் குறுகிய கால புகழ் ஆகும். ஒரு ஊரில் ரமா பூமா என்று இரு பெண்மணிகள் இருந்தனர். இருவரும் மாம்பழம் வியாபாரம் செய்தனர். அவர்களுடைய கிராமத்திலிருந்து கடைவீதிக்குச் செல்லும் நடுவில் ஒரு காடு இருந்தது. ஒரு நாள் அவ்வழியாக ரமா சென்றுக் கொண்டிருந்தாள்.வெயில் அதிகமாக இருந்ததால் அங்கிருந்த ஆலமரத்தின் கீழ் சிறிது களைப்பாறினாள். அப்படியே சிறிது கண்ணயர்ந்துவிட்டாள். கண் விழித்துப் பார்த்த போது அவளுடைய மாம்பழக் கூடையைக் காணவில்லை.
என் கூடை எங்கே
கடவுளே என் கூடையைக் காணவில்லையே நான் என்ன செய்வேன் என்று அவள் அழுதுக் கொண்டிருந்தாள். அவள் அழகுரலைக் கேட்டு ஆலமரத்திலிருந்து ஓர் பூதம் வெளிப்பட்டது.அந்த பூதம் ஏன் அழுகிறாய் பெண்ணே என்னாயிற்று என்று கேட்டது. அதற்கு அவள் என்னுடைய மாம்பழக் கூடையைக் காணவில்லை அதை விற்று தான் என் குடும்பத்தைக் காக்க வேண்டும் என்றாள்.
மறைந்தது பூதம்
சரி நான் இதோ வருகிறேன் என்று அந்த பூதம் மறைந்தது. சிறிது நேரத்தில் தங்க மாம்பழக் கூடையோடு வந்தது. இது உன் கூடையா என்று கேட்டதற்கு இது என்னுடையதல்ல என்றாள்.சிறிது நேரத்தில் வெள்ளி மாம்பழக் கூடையோடு வந்தது. அதுவும் தன்னுடையது இல்லை என்றாள். மூன்றாவது முறை பூதம் அவளுடைய கூடையுடன் வந்தது. உடனே அவள் மகிழ்ச்சியுடன் தன் கூடையை எடுத்துக் கொண்டு புறப்பட்டாள்.அப்போது அவளை அழைத்தப் பூதம் அவள் நேர்மையைப் பாராட்டி தங்க மாம்பழக்கூடையையும் வெள்ளிக் கூடையையும் கொடுத்தனுப்பியது.
மாம்பழக் கூடை
இதை வீட்டுக்கு வந்தவுடன் ரமா அனைவரிடமும் கூறினாள். இதைக்கேட்ட பூமா மறுநாள் தன் கூடையை எடுத்துக் கொண்டு வந்தாள். அந்த ஆலமரத்திடம் வந்தவுடன் தானும் தன் மாம்பழக் கூடையை வைத்து விட்டுக் கண்ணயர்ந்தாள். கண் விழித்துப பார்த்தப்போது அவள் கூடையும் காணாமல் போகவே அவளும் தன் கூடையைக் காணவில்லை என புலம்பினாள். அவள் முன் ரமாவின் முன் தோன்றிய அதே பூதம் தோன்றியது. அந்தப் பூதம் ஏன் அழுகிறாய் பெண்ணே எனக் கேட்க நடந்ததை அனைத்தையும் கூறினாள்.
தங்க மாம்பழக் கூடை
உடனே பூதம் சிறிது நேரம் கழித்து தங்க மாம்பழக் கூடையுடன் வந்தது. அதைப் பார்த்த அவள் ஆம் இதுதான் என் கூடை என்றாள். பூதமும் அக்கூடையை அவளிடம் கொடுத்தது. அக்கூடையுடன் வீட்டிற்கு மகிழ்ச்சியுடன் வந்தாள். வீட்டில் வந்து கூடையைத் திறந்தால் அதில் குப்பைகள் தான் இருந்தது. அவளுடைய பேராசை என்னும் கெட்ட பண்பினால் மாம்பழங்களை இழந்தாள்.
நல்லதே செய்யுங்கள்
கடவுள் நல்லவர்களுக்கு நிறைய துன்பம் தருவார் ஆனால் கைவிடமாட்டார் கெட்டவர்களுக்கு கடவுள் அள்ளிக் கொடுப்பார் ஆனால் கைவிட்டுவிடுவார் என்பது போல நற்பண்புகள் மிக்க மனிதன் முதலில் சிரமப்பட்டாலும் பின்னால் நீங்காப் புகழ் அடைவார். எனவே அனைவருக்கும் நல்லதே செய்யுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் நற்பண்புகளைக் கற்றுக் கொடுங்கள். நற்பண்பினால் ஏற்படும் நன்மைகளைச் சொல்லுங்கள். நற்பண்புகளை உடைய மனிதன் வெற்றியாளனாகிறான். நீங்களும் அது போல் உங்கள் வாழ்வில் வெற்றியடைய வாழ்த்துக்கள்