உனக்காக செய்கிறேன்.. உனக்காக மட்டுமே செய்கிறேன்!
காதலில் விழுந்து விட்டால்.. அது செய்யும் மாஜிக் அப்பப்பா சொல்லி மாள முடியாது.. எல்லாமும் செய்யத் தோன்றும்.. அதுவும் நமக்குப் பிடித்தமானவர்களுக்காக என்று வந்து விட்டால் போதும்.. விழுந்து விழுந்து செய்யத் தோன்றும்.
உனக்காக செய்கிறேன்..
அது எனக்குப் பிடிக்காவிட்டாலும் கூட
உனக்குப் பிடிக்குமே என்பதற்காக
உனக்காக மட்டுமே செய்கிறேன்.. இப்படி கவிதை வரிகள் எல்லாம் குற்றாலச் சாரல் மழையாக கொப்பளித்துக் கொட்டும்.
நாம் நமக்குப் பிடித்தமானவருக்காக சில விஷயங்கள் செய்யும் போது அதைப் பார்த்து பார்த்து செய்வோம். உங்கள் துணைக்குப் பிடித்த உணவைச் சமைக்கும் போது நம் மொத்த கவனமும் அதில் தான் இருக்கும். அவருக்குப் பிடித்த உணவை ருசியோடு சமைத்துக் கொடுத்து அதை அவர் விரும்பி இன்னும் இன்னும் வேண்டும் என்று கேட்கும் போது மனதில் ஏற்படும் சுகமே தனி தான். நம் துணைக்காக அல்லது நமக்குப் பிடித்தவருக்காக ஒரு செயலைச் செய்யும் போது பார்த்துப் பார்த்து செய்வோம். பிறந்தநாள் பரிசு திருமண நாள் பரிசு போன்றவற்றைத் தேர்ந்தெடுக்கும் போது என் துணைக்கு இந்த கலர் பிடிக்கும் இந்த உடை பிடிக்கும் என்று தேர்வு செய்யும் போது ஏற்படும் மகிழ்ச்சி தனி தான்.
அலுவலகத்திலிருந்து வீட்டிற்கு வரும் போது உங்கள் துணைக்கு உடல்நிலை சரியில்லை என்றால் அவருடைய வேலைகளை நாம் செய்துக் கொடுக்க வேண்டும். அதில் எந்த ஈகோவும் இருக்கக் கூடாது. உனக்காகச் செய்கிறேன் என்று மனநிறைவோடு ஒரு செயலைச் செய்ய வேண்டும்.
நடிக்கத்தானே சொன்னாங்க.. பழத்தை பிழிஞ்சு விட்டா எப்படிப்பா பாலாஜி!
உங்களுக்கு ஐஸ்க்ரீம் பிடிக்காது ஆனால் உங்கள் துணைக்கு ஐஸ்க்ரீம் பிடிக்குமென்றால் அவருக்காக ஒரு நாள் ஐஸ்க்ரீம் சாப்பிடுவதில் தவறில்லை. சின்ன சின்ன விஷயங்கள் உங்கள் துணையின் சந்தோசத்திற்காகச் செய்வதில் தவறில்லை. உங்கள் துணைக்காக நீங்கள் செய்யும் செயல் உங்கள் அன்பை காதலை வெளிப்படுத்தும். இருவருக்குமிடையே நெருக்கத்தை அதிகப்படுத்தும்.
வாழ்வின் ஒவ்வொரு தருணங்களையும் அனுபவித்து வாழுங்கள். உங்களுக்குப் பிடித்தமானவருக்காக சில விஷயங்களை விட்டுக் கொடுப்பதில் தவறில்லை. நீங்கள் அவருக்காக ஒரு செயலைச் செய்கிறீர்கள் என்று அவருக்குத் தெரியும் போது சிறு சிறு பிணக்குகளும் இருந்த இடம் தெரியாமல் போய் விடும். பிறகென்ன உங்கள் துணையும் உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு என் உள்நெஞ்சு சொல்கிறது என்று பாட ஆரம்பித்து விடுவார்கள்.