மெல்ல மெல்ல உயிரைக்குடிக்கும் புற்றுநோய்.. மருத்துவமனையில் சிகிச்சைக்கிடையே வகுப்பெடுக்கும் ஆசிரியர்
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அமெரிக்க கணித ஆசிரியர் ஒருவர் மருத்துவமனையில் இருந்தபடி ஆன்லைனில் வகுப்பு நடத்தி வருகிறார்.
நியூயார்க்: அமெரிக்காவில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட கணித ஆசிரியர் ஒருவர், மருத்துவமனையில் இருந்தபடியே மாணவர்களுக்கு வகுப்பு நடத்தி முன்மாதிரியாக திகழ்ந்து வருகிறார்.
அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாகாணத்தை சேர்ந்தவர் 42 வயதாகும் வில் லோசெல். அவருக்கு 10 வயதில் சியன் மற்றும் 7 வயதில் ஏடன் என இரு மகன்கள் உள்ளனர்.
அமெரிக்காவின் பெரிய கார்ப்பரேட் நிறுவனம் ஒன்றில் உயர் பதவியில் இருந்த லோசெல், கடந்த ஆகஸ்ட் மாதம் அந்த வேலையை ராஜினாமா செய்துவிட்டார். சமூக சேவை செய்வதில் அதிக ஆர்வம் கொண்டிருக்கும் லோசெல், சார்லெட் மாவட்டத்தில் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள் அதிகம் படிக்கும் பள்ளியில் கணித ஆசிரியராக வேலைக்கு சேர்ந்தார்.
சர்வதேச செவிலியர் தினம் 2020: கொரோனா லாக் டவுனில் செவிலியர்களை கொண்டாடுவோம்
கணித ஆசிரியர்
அங்கு படிக்கும் ஏழை மாணவர்களுக்கு கணிதம் சொல்லிக் கொடுப்பதை தனது கடமையாக நினைத்து பாடம் நடத்தி வருகிறார். சம்பளம் குறைவு தான் என்றாலும், இந்த சமூகத்துக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்பதை தனது லட்சியமாக கொண்டு ஆசிரியர் பணியை அர்ப்பணிப்புடன் செய்து வருகிறார்.
தொண்டையில் புற்றுநோய்
இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் அவருக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அவரை பரிசோதித்த மருத்துவர்கள், லோசெலுக்கு தொண்டையில் புற்றுநோய் பாதிப்பு இருப்பதை கண்டறிந்தனர்.
கீமோதெரபி சிகிச்சை
இதையடுத்து கடந்த மார்ச் மாதம் முதல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அவருக்கு புற்றுநோய்க்கான கீமோதெரபி சிகிச்சை செய்யப்பட்டு வருகிறது. தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு அமெரிக்காவில் அதிகம் இருப்பதால், மருத்துவமனையிலேயே தங்கவைக்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் மகன்களால்கூட அவரை நேரில் பார்க்க முடியவில்லை.
ஆன்லைன் வகுப்பு
இத்தனை கடினமான சூழலிலும் துவண்டு போகவில்லை லோசெல். மருத்துவமனையில் இருந்தபடியே தன்னுடைய பள்ளி மாணவர்களுக்கு கணித வகுப்பு எடுத்து வருகிறார் இந்த கடமை தவறாத ஆசிரியர்.
நான் இப்படி தான்
"இப்படிப்பட்ட ஒரு நிலையிலும் உங்களால் எப்படி வகுப்பு நடத்த முடிகிறது?", என வியப்புடன் அவரிடம் பலர் கேட்கின்றனர். அதற்கு "நான் இப்படி தான்", முகத்தில் புன்னகை ததும்ப பதில் அளிக்கிறார் லோசெல்.
நம்பிக்கை
"நான் உடல்நலம் பாதிக்கப்பட்டபோது முதலில் என் நினைவுக்கு வந்தது எனது இரு மகன்கள். அதற்கு அடுத்து என்னிடம் படிக்கும் 117 மாணவர்கள் தான் என் நினைவுக்கு வந்தனர். அவர்கள் என்னை நம்பி இருக்கிறார்கள். கடந்த ஆறு மாதங்களாக அவர்களுக்குள் நான் நம்பிக்கையை விதைத்திருக்கிறேன். அதை நான் காப்பாற்ற வேண்டும். என்னை பொறுத்த வரை ஆசிரியர் பணி என்பது அது தான்", எனக் கூறி நெகிழ வைக்கிறார் லோசெல்.
சிரிக்க வைக்கிறார்கள்
"தினம் தினம் அவர்கள் என்னை சிரிக்க வைக்கிறார்கள். அழ வைக்கிறார்கள். நான் பள்ளியில் வகுப்பு நடத்திய போது, என்னிடம் மோசமாக நடந்துகொண்ட மாணவர்கள் தான், நான் புற்றுநோயால் பாதிக்கப்பட்டதும் முதல் ஆளாக வந்து ஆறுதல் கூறினர். நான் விரைவில் குணமடைய பிராத்தனை செய்வதாகவும், என்னை மிகவும் நேசிப்பதாகவும் கூறினர்.
உந்து சக்தி
எனது நிலையை நினைத்து அழுதுகொண்டிருந்தால் மட்டும் எல்லாம் மாறிவிடுமா என்ன?.. எனக்கு நிறைய கடமைகள் இருக்கின்றன. அதுவே எனக்கு இந்த நிலையில் இருந்து மீள்வதற்கு உந்து சக்தியாக இருக்கிறது.
எனக்குள் எழுந்த கேள்வி
என்னுடைய 40வது வயதில் எனக்குள் ஒரு கேள்வி எழுந்தது. நான் ஒரு பெரிய நிறுவனத்தில் நல்ல சம்பளத்தில் வேலை செய்கிறேன். ஆனால் எனது குடும்பத்தை பொருளாதார ரீதியாக உயர்த்தியதை தவிர, நான் வேறு என்ன சாதித்துவிட்டேன் என யோசித்தேன். அதன் பிறகு தான் எந்தவித அடிப்படை வசதியும் இல்லாத மாணவர்களுக்கு கல்வி கொடுக்க முடிவு செய்வேன். வேலையை தூக்கி எறிந்துவிட்டு ஆசிரியராக மாறிவிட்டேன்", என தான் ஆசிரியரான கதையை சொல்கிறார் லோசெல்.
மன தைரியம்
"அந்த மாணவர்களுக்கு என்னால் முடிந்த அளவு கல்வி உதவியும், மனதைரியமும் தருகிறேன் என நம்புகிறேன். அதைவிட அவர்கள் எனக்கு அதிகம் தருகிறார்கள்.
வாழ்க்கை பாடம்
வாழ்க்கை நமக்கு பல பாடங்களை கற்று தருகிறது. எனக்கு இப்போது புற்றுநோய் இருக்கிறது. மருத்துவமும் அறிவியலும் தான் அதை குணப்படுத்தும். இதில் இருந்து கூடிய விரைவில் மீண்டு வந்துவிடுடேன். மீண்டும் எனது பள்ளிக்கு சென்று மாணவர்களுக்கு பாடம் நடத்துவேன்", என நம்பிக்கையுடன் கூறுகிறார் லோசெல் எனும் மாமனிதர்.
சமூகத்தின் தேவை
லோசெல் போன்ற ஆசிரியர்கள் தான் இன்றைய சமூகத்துக்கு தேவையான அற்புத மனிதர்கள். அவரையே நம்பியிருக்கும் அந்த ஏழை மாணவர்களுக்காகவாவது புற்றுநோயில் இருந்து சீக்கிரம் மீண்டு வர வேண்டும். மீண்டும் வாருங்கள் லோசெல்.
நாமும் உதவலாமே
லோசெலுக்கு நிதியுதவி அளித்து உதவ நினைப்பவர்களுக்காக GoFundMe எனும் இணையதளத்தில் பக்கம் ஒன்றை அவரது உறவினர்கள் உருவாக்கியுள்ளனர் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.