சுதான்னு கூப்பிட்டால் திரும்பி பார்க்கிறாள்.. ஆனா பேசல.. நம்பிக்கையுடன் காத்திருக்கும் அருண்!
பைக் விபத்தில் மனைவி உயிர் பிழைத்தது குறித்து கணவர் உருக்கமான பேட்டி தந்துள்ளார்
ஈரோடு: "நான் சுதான்னு கூப்பிட்டால் என்னை திரும்பி பார்க்கிறாள்.. ஆனா ஒரு வார்த்தைகூட பேசல.. பேசவும் முடியல.. என்னையே உற்று பார்க்கிறாள்... அவள் ஏதாவது பேசிவிட மாட்டாளா என்று ஒவ்வொரு நிமிஷமும் ஏங்கி கொண்டே இருக்கிறேன்.. என்கிட்ட என் சுதா திரும்ப வந்துடுவா.. அதுக்காக காத்துக்கிட்டு இருக்கேன்" என்று விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்று வரும் தன் இளம் மனைவி குறித்து கண்ணீருடன் கூறுகிறார் அருண் என்ற இளைஞர்!
ஈரோட்டை சேர்ந்தவர் அருண்.. சீனாவில் மென்பொருள் நிறுவனத்தில் வேலை பார்ப்பவர்.. இவருக்கு சுதா என்பவருடன் கடந்த 2019 செப்டம்பர் மாதம் 11ம் தேதி கல்யாணம் நடந்தது... சுதா BE படித்துவிட்டு ஒரு மென்பொருள் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
திருமணம் முடிந்த சில நாட்களில், லீவு முடிந்து அருண் சீனாவுக்கு கிளம்பினார்.. அங்கு போய் வாடகைக்கு ஒரு வீடு எடுத்து கொண்டு இதன்பிறகு புதுமனைவியை அழைத்து கொள்வதாக கூறிவிட்டு கிளம்பி சென்றார்... அதன்படியே புது வீடும் பார்த்தாகிவிட்டது.. ஒரு வாரம் கழித்து சீனா வருவதற்கான ஃபிளைட் டிக்கெட்டையும் அருண் ரிசர்வ் செய்தார்.
பாகனுடன் விளையாடும் குட்டி யானை.. பாகனை கொஞ்சுவதற்காக செய்த காரியம்! வைரல் வீடியோ
விபத்து
சீனா செல்வதற்கு 2 நாட்களுக்கு முன்பு அதாவது அக்டோபர் 15-ம்தேதி சுதா அவரது சகோதரருடன் பைக்கில் சென்றிருக்கிறார்... ஈரோடு பஸ் ஸ்டேண்ட் அருகே செல்லும்போது திடீரென பைக்கில் இருந்து தவறி கீழே விழுந்துவிட்டார் சுதா.. பின்பக்கமாக விழுந்ததில் சுதாவின் வலது புற தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்ட ஆரம்பித்தது. இதை பார்த்ததும் அங்கிருந்த ஒரு டிராபிக் போலீஸ் ஓடிவந்து சுதாவை மீட்டு பக்கத்தில் இருந்த ஆஸ்பத்திரியில் ஆட்டோவில் ஏற்றிக் கொண்டு அனுமதிக்க செய்துள்ளார்.
தீவிர சிகிச்சை
அடுத்த பதினைந்தே நிமிடங்களில் தன் சுயநினைவை இழந்தார் சுதா.. சுதாவின் நிலைமையை பார்த்ததும், உடனடியாக ஈரோடு செந்தில் நரம்பியல் ஆஸ்பத்திரிக்கு (Senthil multispeciality hospital in Erode) அழைத்து செல்லுமாறு அங்கிருக்கும் டாக்டர்கள் சொல்லவும், சுதாவை அதன்படியே வந்து ஐசியூவில் அனுமதித்தனர்... அந்த ஆஸ்பத்திரி டாக்டர் ஹரிநிவாஸ் (MBBS., DNB (Neuro surgery),MNAM என்பவர், வேறு ஒரு மூளை ஆபரேஷன் செய்ய தயாராகி கொண்டிருந்தார்.. ஆனால் உயிருக்கு போராடி கொண்டிருக்கும் சுதாவை பார்த்ததும், அவருக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க தயாரானார்.
2 மணி நேரம்
ஆபரேஷனுக்கு தேவையான ஏற்பாடுகள் கடகடவென ஆரம்பமாயின.. சுதா தலையில் மொட்டை அடிக்கப்பட்டது.. சிடி ஸ்கேன் உள்ளிட்டவை எடுக்கப்பட்டன.. தலையில் பல காயங்கள், இடது புற மூளையில் ரத்த கட்டி.. என பல கோளாறுகள் இருப்பது டெஸ்ட்டில் தெரியவந்தது... இந்த விபத்து நடந்தது மாலை 5 மணிக்கு என்றால் அடுத்த 2 மணி நேரத்திற்குள் சுதா ஆபரேஷன் தியேட்டருக்கு கொண்டு செல்லப்பட்டிருந்தார்.
சக்ஸஸ்
அதாவது ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்ட அடுத்த 10 நிமிடத்திற்குள் ஆபரேஷன் வேலைகள் துரிதமாயின... மூளையில் மேல் இருந்த ரத்த கட்டி அகற்றப்பட்டது.. ஆபரேஷன் சக்சஸ்.. சுதா உயிர்பிழைத்தார்... 9 நாட்களுக்கு பிறகு கண் விழித்தார்.. ஆனால் நினைவு மட்டும் திரும்பவில்லை.. ஆம்.. சுதாவுக்கு எதுவுமே, யாருமே இப்போது நினைவில் இல்லை.. கடந்த 3 மாதங்களாக பக்கத்திலேயே இருந்து கவனித்து வருகிறார் கணவர் அருண்.
உருக்கமான பேச்சு
இந்த விபத்து குறித்தும், மனைவி மீண்டது குறித்தும் அவரிடம் பேசினோம்... எடுத்த எடுப்பிலே டாக்டர் ஹரிநிவாசுக்கு என்னுடைய கோடி நன்றி என்றுதான் தன் கண்ணீர் பேச்சை ஆரம்பித்தார்.. அருண் சொன்னதாவது: "சுதாவை நான்தான் பக்கத்தில் இருந்து பார்த்துக்கறேன்.. கொஞ்சம் கொஞ்சமா குணமாகிட்டு வர்றா.. ஆனா சுயநினைவுதான் திரும்பல.. பொங்கலுக்கு வீட்டுக்கு கூட்டிட்டு வந்தோம்.. ஃபிசியோதரபி தந்துட்டு இருக்கோம்... என் மனைவியை அவசர நிலையில் எடுத்து சிகிச்சை அளித்து, அவள் உயிரை காப்பாற்றிய டாக்டர் ஹரிநிவாஸ் மற்றும் செந்தில் நரம்பியல் மருத்துவமனைக்கும் என் நன்றி..
வாழ்த்துவோம்
நான் சுதான்னு கூப்பிட்டால் என்னை திரும்பி பார்க்கிறாள்.. ஆனா ஒரு வார்த்தைகூட பேசல.. என்னையே உற்று பார்க்கிறாள்... அவள் ஏதாவது பேசிவிட மாட்டாளா என்று ஏங்கி கொண்டே இருக்கிறேன்.. கல்யாணம் ஆகி ஒருமாசத்துலயே இப்படி ஒரு சோகம் எங்களுக்கு வந்துடுச்சு.. என் சுதாவுக்கு நான் சீனாவில் பார்த்துட்டு இருந்த வேலையை விட்டுட்டேன்.. எப்படியும் என்கிட்ட என் சுதா திரும்ப வந்துடுவா.. அதுக்காகதான் நான் காத்துக்கிட்டு இருக்கேன்" என்று ஏக்கமும் நம்பிக்கையுமாய் நா தழுதழுக்க தெரிவிக்கிறார் அருண்.. விரைவில் சுதா வீடு திரும்பி புதுவாழ்வில் அடியெடுத்து வைக்க வாழ்த்துவோம்!