எதையும் நம்பிக்கையோடு பாருங்கள்.. கை மேல் கிடைக்கும் வெற்றி!
சென்னை: எதையுமே நம்பிக்கையுடன் பார்க்கும் ஒருவர், தான் சந்திக்கும் ஒவ்வொரு கஷ்டத்தையும் தனக்கான வாய்ப்பாக மாற்றிக் கொள்ள முடியுமா என்று பார்ப்பார். அதுவே அவ நம்பிக்கை மிகுந்தவர்கள், தாங்கள் சந்திக்கும் ஒவ்வொரு வாய்ப்பையும், கஷ்டமாகவே பார்ப்பார்கள்.. இது வின்ஸ்டன் சர்ச்சில் கூறிய வாக்கு.
இன்று நிறைய பேர் இருக்காங்க.. எவ்வளவு வாய்ப்புகள் கிடைத்தாலும் அதை சரிவர பயன்படுத்திக் கொள்வதில்லை. மாறாக சோம்பேறித்தனம், முயலாமை என பல்வேறு இடையூறுகளைக் கொண்டு அந்த வாய்ப்புகளை சிதறடித்து விடுகிறார்கள்.
எந்த ஒரு வாய்ப்பு நமக்குக் கிடைத்தாலும் அதை தக்க வைத்துக் கொள்ள முடிந்தவரைப் போராட வேண்டும்.வாய்ப்புகள் எப்போதும் கிடைக்காது அது கிடைக்கும் போது நாம் அதைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
இரு பெண்கள்
ஒரு ஊரில் இரு பெண்கள் விமலா கமலா இருந்தனர். இருவரும் சிறுவயதிலிருந்தே உயிர்த்தோழிகள். ஆனால் விமலாவிற்கு தான் மிகவும் அழகு என்ற நினைப்பு எப்போதும் உண்டு. அவள் ஆடம்பரமாக வாழ ஆசைப்படுவாள். திருமண வயது வந்த போது இருவருக்கும் அவர்கள் வீட்டில் வரன் தேட ஆரம்பித்தனர்.
ரமேஷின் ஆசை
அப்போது ரமேஷ் என்பவன் விமலாவைத் திருமணம் செய்துக் கொள்ள முன் வந்தான். அவன் ஏழையதலால் அவள் அவனைத் திருமணம் செய்ய முடியாது எனக் கூறி அவனை அவமானப்படுத்தி வெளியே அனுப்பினாள். கமலாவின் வீட்டிற்க்குச் சென்று திருமணம் செய்யக் கேட்டான். அவளும் அதற்குச் சம்மதிக்கவே இருவருக்கும் இனிதே திருமணம் நடந்தேறியது.
தோட்டம்
அவள் வீட்டில் இருந்த இடத்தில் காய்கறித் தோட்டம் அமைத்தாள். அவள் டிகிரி முடித்திருந்ததால் மாலையில் பிள்ளைகளுக்கு டியூஷன் எடுப்பாள். பூ வியாபாரமும் செய்து வந்தாள். இதனால் ஓரளவு அவர்களுடையப் பொருளாதாரம் உயர்ந்தது. ஆனால் விமலாவோ பணத்திற்கு ஆசைப்பட்டு ஒரு பெரிய செல்வந்தரைத் திருமணம் செய்துக் கொண்டாள். அவன் தினமும் அவளை அடித்துத் துன்புறுத்துவான்.
குடிப்பழக்கம்
அவனுக்கு குடிப்பழக்கமும் இருந்ததால் அவர்களுடையச் செல்வமும் கரைந்து வெகுவிரைவில் ஏழையாகி விட்டாள். ஆனால் கமலாவோ தானும் அரசாங்க வேலையில் சேர்ந்து ரமேஷின் விவசாயத்திற்கும் உதவி செய்து இன்று ஊரிலேயே பெரிய பணக்காரர்களாகி விட்டனர். அவர்களைக் கண்ட விமலா தான் வாய்ப்பைத் தவற விட்டதை எண்ணி வருந்தினாள். இப்படித்தான் பலபேர் இன்று விமலாவைப் போல பெரிய பெரிய நிறுவனங்களில் வேலைக்குச் செல்ல ஆசைப்பட்டு சிறு நிறுவனங்களில் இருந்து கிடைக்கும் வேலைவாய்ப்பைத் தவற விடுகின்றனர்.
வாய்ப்பை விடாதீர்கள்
நீங்களும் கமலாவைப் போல் சிறு வாய்ப்புக் கிடைத்தாலும் அதைப் பயன்படுத்தி வாழ்க்கையில் முன்னேறலாமே. இன்று இவ்வாறு பல இளைஞர்கள் நான் ஒயிட் காலர் ஜாப்களுக்கு மட்டும் தான் செல்வேன் என்பதால் தான் நாட்டில் வேலைவாய்ப்பின்மை அதிகரிக்கிறது. ஒரு பக்கம் வேலைவாய்ப்பு கொட்டிக் கிடக்கிறது மறுபக்கம் வேலையில்லாத் திண்டாட்டம். காரணம் நான் இந்த வேலைகளை மட்டும் தான் செய்வேன் என்று நம்மிடையே இருக்கும் பிடிவாதம் தான் காரணம். அதனால் கிடைக்கும் வாய்ப்பு சின்னதாக இருந்தாலும் அதைப் பயன்படுத்திக் கொண்டு உங்கள் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொள்ள வேண்டும். வாய்ப்புகள் எப்போதும் கிடைக்காது. அதனால் வாய்ப்புகளை நம்பிக்கையோடுப் பயன்படுத்தி வெற்றியை நம் வசமாக்குவோம்.