மழைக்காலத்து வானவில்லாக இரு!
மழை பெய்யும்போது என்றாவது வேடிக்கை பார்த்துள்ளீர்களா.. நனைந்து குதூகலித்துள்ளீர்களா.. குறைந்தது வானவில்லாவது பார்தது ரசித்துள்ளீர்களா.. செய்திராவிட்டால் வாழ்க்கையில் அழகான அம்சத்தை நீங்கள் இழந்து விட்டீர்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.
மழை அழகு என்றால்.. மழைக்காலத்து வானை அலங்கரிக்கும் வானவில் ரொம்ப அழகு.. நமது வாழ்க்கைக்கு அருமையான தத்துவத்தை இந்த வானவில் உணர்த்துகிறது.
ஆமாங்க.. நமது வாழ்க்கையும் இந்த வானவில் போல அனைத்து வண்ணங்களும் கலந்ததாக இருக்க வேண்டும்.. சந்தோஷம், சவால், சோகம், கோபம், நிதானம், அமைதி, போராட்டம், போர்க்குணம் என்று எல்லாமே கலந்து இருந்தால்தான் அது அழகான வாழ்க்கை.
புத்திசாலியாக இருங்கள்.. உணர்ச்சிகளுக்கு பலியாகி விடாதீர்கள்!
துன்பம்
வாழ்க்கையைச் சுவாரஸ்யமாக்க இன்பம் துன்பம் சோகம் சவால் எல்லாம் தேவை. ஒரே மாதிரி வாழ்க்கை இருந்தால் வாழ்வு வெறுத்து விடும். நாம் எல்லாவற்றிலும் வாழ நம்மை நாம் தயார்படுத்திக் கொள்ள வேண்டும். மழையும் வெயிலும் போல் பகலும் இரவும் போல் வாழ்வில் நல்லது கெட்டதும் மாறி மாறி நடக்கும். நல்லது நடந்தால் சந்தோஷப்படுங்க. தீமை நடந்தால் வருத்தப்படாதீங்க இதுவும் கடந்து போகும் என்று நினைத்துக் கொள்ளுங்கள்.
கையில் காயம்
ஒரு முறை கிருஷ்ணதேவராயர் கத்தியால் பழம் நறுக்கும் போது அவர் கையில் காயம் ஏற்பட்டது. அதைப் பார்த்த தெனாலிராமன் எல்லாம் நன்மைக்கே அரசே என்றார். அதைப் பார்த்துக் கோபமடைந்த அரசர் தெனாலிராமனைச் சிறையிலடைக்க உத்தரவிட்டார். ஆனால் அதற்காகத் தெனாலிராமன் அஞ்சவில்லை. அன்று மந்திரிகளுடன் வேட்டைக்குச் சென்ற போது மலைவாழ் மக்களால் அரசர் சிறைப்பிடிக்கப் பட்டார்.
அரசர் விடுவிப்பு
அவர்கள் தங்கள் குலதெய்வத்திற்கு அரசரைப் பலிக்கொடுக்க எண்ணியபோது அவர் கையில் காயம் இருப்பதைப் பார்த்தனர். காயம்பட்ட மனிதர்களை நாங்கள் பலிக்கொடுப்பதில்லை எனக் கூறி அரசரை விடுவித்து விட்டனர். அப்போது தான் எல்லாம் நன்மைக்கே என்று ராமன் கூறியது அவருக்கு நினைவுக்கு வந்தது.
இன்பமாக மாற்றுவோம்
அதுபோல நாமும் நம் வாழ்க்கையில் கவலையோ துன்பமோ வரும் போது இதுவும் மாறும் இத்துன்பத்தை இன்பமாக மாற்ற முயல வேண்டும். தோல்வியைக் கண்டு சோர்வடையாமல் வெற்றியை நோக்கிப் பயணியுங்கள். வாழ்வில் நாம் சந்திக்கும்அ ஒவ்வொரு சவால்களும் நம்மை இன்னும் அழகாக்குகின்றன. தோல்வியை துடைத்தெறி வெற்றியை நோக்கி வீறுநடை போடுங்கள்.
விலகிடும் பிரச்சினைகள்
எந்த ஒரு பிரச்சினையாக இருந்தாலும் பனி போல உங்களைவிட்டு விலகி விடும் என்று நம்புங்கள். எல்லாம் நிறைந்தது தான் வாழ்க்கை. சவால்கள் இல்லையென்றால் வாழ்க்கையில் சுவாரஸ்யம் இருக்காது. நம்மை நாம் தான் மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள முடியும். இதுவும் கடந்து போகும் என்ற நம்பிக்கையோடு இருங்கள். வெற்றி நமதே.