என்னால இது முடியலையே.. அட புலம்பலை விடுங்க.. புத்துணர்ச்சி பெறுங்க!
இன்று நிறையப் பேருக்கு தாழ்வு மனப்பான்மை இருக்கிறது. என்னால் இது முடியலையே. என்னால் அதைச் செய்ய முடியலையே என்று புலம்புவோர் பலர் உண்டு.
அது தேவையில்லாதது. உங்களால் முடியாவிட்டால் யாராலும் முடியாது.. இதுதான் எப்போதும் நீங்கள் மனதில் பொறித்து வைக்க வேண்டிய வாசகம். உங்களை விட உலகில் வேறு யாருமே சிறந்தவர்கள் இல்லை என்று மனதில் பதிய வைத்து கொண்டு எந்தக் காரியத்திலும் இறங்குங்கள்.. நிச்சயம் வெற்றி பெறுவர்கள்.
உன்னால் முடியும் தம்பி தம்பி உனக்குள் இருக்கும் உன்னை நம்பி என்பது போல் உன்னால் முடியும் என்று முதலில் மனஉறுதி கொள்ளுங்கள். உங்களால் ஒரு செயலில் ஒரு முறை வெற்றிப் பெற முயலவில்லை என்றால் வெற்றி அடையும்வரை முயற்சி செய்துக் கொண்டே இருங்கள். எப்பொழுதும் எந்த ஒரு செயலை செய்யத் தொடங்கும் முன் இதை என்னால் சிறப்பாகச் செய்ய முடியும் என்றுப் புத்துணர்ச்சியோடு செய்யுங்கள்.
கஜினி வெற்றி
பதினாறு முறை இந்தியாவின் மீது போர் தொடுத்து தோல்வியுற்று பதினேழாவது முறை தான் கஜினி முகம்மது வெற்றி அடைந்தார்.அவர் முதல் முறை தோல்வியுற்ற போதே என்னால் முடியாது என்று நினைத்திருந்தால் அவரால் வரலாற்றில் இடம்பிடித்திருக்க முடியாது. எத்தனை முறை வீழ்ந்தாலும் நான் மீண்டு வருவேன் என்ற நம்பிக்கையோடு இருக்க வேண்டும்.
நடை பயிலும் குழந்தை
சிறுவயதில் குழந்தை நடை பயிலும் போது பலமுறை கீழே விழும். ஆனால் அக்குழந்தை மீண்டும் மீண்டும் எழுந்து நடக்க முயற்சி செய்யும். அதுபோலத்தான் வீட்டு வேலையாக இருந்தாலும் சரி அலுவலக வேலையாக இருந்தாலும் சரி அதைச் சலிப்பின்றி என்னால் திறம்பட செய்து முடிக்க முடியும் என்ற நம்பிக்கை உங்களுக்கு இருக்கட்டும்.
எடிசனின் பல்பு
எடிசன் அவர்கள் பல்பை வடிவமைக்கும் போது ஆயிரம் முறை தோல்வியடைந்த பிறகு தான் அவரால் வெற்றிக் காண முடிந்தது. அவர் அதுவரை தன்னுடைய நம்பிக்கையை இழக்காமல் இருந்தார்.அதுமட்டுமின்றி நம் வீட்டுத் தாய்மார்கள் ஓய்வில்லாமல் தினமும் வேலை செய்கின்றனர். அவர்கள் என்னால் செய்ய முடியவில்லையே என்று ஒருபோதும் நினைப்பதில்லை. என்னால் என் குடும்பத்தைக் காக்க முடியும் என்று தான் நினைக்கிறார்கள்.
அசுர வளர்ச்சி பெறும்
இன்று தொழில்துறைகள் அனைத்தும் முடங்கிக் கிடக்கின்றன. ஆனால் இந்தத் துறைகளும் வெகுவிரைவில் அசுர வளர்ச்சிக் காணும் என்ற நம்பிக்கைக் கொள்ளுங்கள். தென்காசியில் குறைந்த நபர்களுடன் ஆரம்பித்த ஐ.டி நிறுவனம் இன்று அசுர வளர்ச்சியடைந்து முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக நிற்கிறது. அந்தக் கம்பெனியின் நிறுவனரின் தன்னம்பிக்கை தான் இந்த அதிவேக வளர்ச்சிக்குக் காரணம்.
நம்புங்கள்.. முடியும்
உங்களால் எல்லாம் முடியும் என்று நம்புங்கள். இந்த நம்பிக்கையை உங்களோடு இருப்பவர்களின் மனதிலும் விதையுங்கள். என்னால் நிச்சயம் எந்த ஒரு செயலையும் செவ்வனே செய்ய முடியும் என்று உறுதிமொழி எடுங்கள். வாழ்க்கை என்பது வாழத்தானே அதை என்னால் எல்லாம் முடியும் என்று நினைத்து இன்னும் மகிழ்ச்சியாக வாழ்ந்துப் பாருங்களேன்