இருளை இருளால் விரட்ட முடியுமா.. முடியாது.. வெளிச்சம் தேவை!
சென்னை: இருளை இருளாள் விரட்ட முடியுமா.. முடியாது.. வெளிச்சம் தேவை. அதேபோலத்தான். வெறுப்பை விரட்ட அன்பு தேவைப்படுகிறது. இதைச் சொன்னவர் யார் தெரியுமா.. மார்ட்டின் லூதர் கிங்.
இன்று நமக்கு நிறைய தேவை எது தெரியுமா.. அன்புதான். துவேஷங்களும், வேஷங்களும், விஷமங்களும் இருள் போல நம்மைச் சுற்றிச் சூழ்ந்துள்ளன. இதிலிருந்து நம்மை மீட்க நமக்குத் தேவை அன்புதான். அன்பை விட சிறந்த ஆயுதம் உலகில் ஏதாவது உண்டா.. நிச்சயம் கிடையாது.
சிறு குழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைவரும் எதிர்பார்ப்பது அன்பு மட்டும் தான். குழந்தைகள் தவறு செய்வது சகஜம். அந்த தவறுகளுக்குச் சில பெற்றோர்கள் கடுமையான தண்டனைக் கொடுக்கிறார்கள் அல்லது பிள்ளைகளைத் திட்டித் தீர்க்கிறார்கள். இது நாளடைவில் பிள்ளைகளுக்குப் பெற்றோரின் மீது வெறுப்பு ஏற்படுகிறது. அவ்வாறு தவறு செய்யும் போது பிள்கைளிடம் அவர்களின் தவறுகளை அன்போடு சுட்டிக் காட்டுங்கள். அந்த தவறுகளால் ஏற்படும் விளைவுகளை அவர்களுக்குப் பொறுமையாகக் கூறுங்கள்.
மருத்துவமனையில் வேலைப் பார்க்கும் செவிலியர்கள் நோயாிகளிடம் முகம் சுளிக்காமல் அன்போடு கவனித்துக் கொள்கிறார்கள். அன்பு என்னும் அருமருந்தால் நோய் விரைவில் குணமாகி வீடு திரும்புகிறார்கள்.
அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் என்பது போல் அனைவரிடமும் அன்போடு நடந்துக் கொள்ளுங்கள். பிறர் உங்கள் மீது வெறுப்பைக் காட்டினாலும் நீங்கள் அவர்களிடம் அன்பையே காட்டுங்கள். குழந்தைகளிடத்தில் அன்பு காட்டுங்கள். உங்கள் சுற்றத்தாரிடமும் உறவினர்களிடமும் அன்பு பாராட்டுங்கள். அன்பால் இந்த உலகையே ஆளலாம்.
உங்கள் துணையிடம் அன்பு காட்டுங்கள். அவர்களிடம் நீங்கள் காட்டும் அன்பானது பலமடங்குப் பெருகி உங்களுக்குக் கிடைக்கும். அவர்கள் மனம் கவலையில் வாடும்போது உங்கள் அன்பினால் கவலைகளை மறக்கச் செய்யுங்கள். அந்த ஆழமான அன்பே வாழ்க்கையை இன்னும் அழகாக்கும்.
நம்ம சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் பேட்ட படத்தில் லவ்வோட சமைத்துக் கொடுங்க அந்த உணவு ருசிக்கும் என்பார். உண்மை தாங்க சமைக்கும் போது அன்புடன் சமைத்தால் அதைச் சாப்பிடுபவரிடம் அன்பு அதிகமாகும். அதையே வெறுப்புடன் சமைத்தால் உங்கள் குடும்பத்தாரும் உங்களிடம் வெறுப்பைக் காட்டுவர்.
அன்பு காட்டும் இதயத்தில் இறைவன் குடியிருப்பான் என்பார்கள். எல்லோரிடமும் அன்புப் பாராட்டுங்கள். நீங்கள் அவர்களிடம் காட்டும் அன்பு அவர்களைச் சாதனையாளராக மாற கூட வழிவகுக்கும். வீட்டிலிருக்கும் பிள்ளைகளிடம் அலுவலக வேலைகளை ஒதுக்கி வைத்துவிட்டு அன்பு பாராட்டுங்கள். அன்பு அதுவே என்றும் நிரந்தரமானது.