ஓவர்... ஓவர்... ஊரெங்கும் நிசப்தம்.. நடுராத்திரி... காற்றில் பறந்து வந்து விழும் அந்த கவிதை வரிகள்!
வாக்கி டாக்கியில் இன்ஸ்பெக்டர் கணேசன் கவிதை சொல்கிறார்.
Recommended Video
சென்னை: ஓவர்... ஓவர்... இப்படிதான் நமக்கு கேட்டு பழக்கம். ஆனால் ஊரெங்கும் நிசப்தம்.. நடுராத்திரி... மெல்லியதாக வீசும் காற்றில் பறந்து வந்து வாக்கி டாக்கியில் விழுகிறது அந்த கவிதை வரிகள்!!
பொதுவாக இரவு நேரங்களில் போலீசார் ரோந்து பணியில் இருப்பார்கள். அப்போது அவர்களது எல்லாருடைய கையிலும் வாக்கி டாக்கி கொடுத்திருப்பார்கள். இது எதற்கு என்றால், எங்கு பணி செய்கிறார்கள், அப்போதைக்கு என்ன முக்கிய சம்பவம், எங்கே நடக்கிறது, இதைப்பற்றியெல்லாம் அதில் பரிமாறப்படும்.
இப்படித்தான் கடந்த 24-ம் தேதி எல்லோரும் வாக்கி டாக்கியில் பிசியாக இருந்தார்கள். அன்றைய தினம் வடசென்னை துணை ஆணையர் ஜெயலட்சுமி வாக்கி டாக்கி ஆய்வினில் ஈடுபட்டிருந்தார்.
எதிர்பார்க்கவில்லை
அந்த நேரத்தில்தான் கவிதை வரிகள் அதில் பாடப்பட்டது. பரபரப்பும், தீவிரமானதுமான சம்பவங்கள் மட்டுமே தெரிவித்து வரும் அந்த வாக்கி டாக்கியில் திடீரென ஒரு கவிதை மழையை அந்த ராத்திரி நேரத்தில் அவர் எதிர்பார்க்கவில்லை.
யார் இவர்?
கவிதைகள் ஒவ்வொன்றும் அற்புதம்.. எல்லாமே கம்பீர வார்த்தைகள் நிறைந்த கவிதைகள். உத்வேகம் தரக்கூடிய வரிகள்! வாக்கி டாக்கியில் இவ்வளவு தைரியமாக, கவிதையை சொன்னது யார் என விசாரித்தபோதுதான் தெரிந்தது, அந்த கவிதையை வாசித்தது சென்னை உயர்நீதிமன்ற வளாக காவல் நிலையத்தின் ஆய்வாளர் கணேசன் என்பது. உடனடியாக அவரை கூப்பிட்டு ஒரு பெரிய பாராட்டை தெரிவித்தார் துணை ஆணையர் ஜெயலட்சுமி.
20 வருடங்கள்
இன்ஸ்பெக்டர் கணேசனுக்கு வயது 49 ஆகிறது. 20 வருடங்களாகவே இவர் இப்படித்தான் வாக்கி டாக்கியில் கவிதை சொல்லி வருகிறாராம். எல்லாமே நைட் டியூட்டி நேரத்தில்தான் கவிதை சொல்லுவாராம். தமிழ் மீது நிறைய காதலாம். பல நூல்களையும் எழுதி இருக்கிறாராம். இவரது கவிதை மொழி, சமூகவலைதளங்களிலும் வைரலாக பரவி வருகிறது.
மன அழுத்தம்
இதை பற்றி இன்ஸ்பெக்டர் கணேசன் சொல்லும்போது, "நைட் நேரத்தில் போலீசார் பணிசுமை காரணமாக சோர்வாகி விடுகிறார்கள். கூடவே அவர்களுக்கு பணி அழுத்தமும் இருக்கிறது. நைட் டியூட்டி நேரத்தில் களைப்பில் தூங்கியும் விடுகிறார்கள்.
குவிகிறது பாராட்டு
அதனால சூழலுக்கு ஏற்ப கவிதை எழுதி அதை வாக்கி டாக்கி மூலம் சொல்வேன். எனக்கு எப்போவெல்லாம் நைட் டியூட்டியோ, அப்போதெல்லாம் என் குழுவினரை மைக் மூலமாக கவிதை சொல்லி தூங்காமல் விழிப்புடன் வைத்திருப்பேன். இதனால் என்னை நிறைய பேர் பாராட்டி வருகிறார்கள்" என்றார்