மூழ்கிய தரைப்பாலம்.. கர்ப்பிணி வீட்டை அடைய பரிசல் பயணம்.. இரு ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு சபாஷ்!
கோவை: கோவை மாவட்டம் காந்தவயல் பகுதியில் கிராமங்களை இணைக்கும் பாலம் மழைநீரில் மூழ்கியதால் ஆம்புலன்ஸ் செல்வதற்கு கூட வழியில்லாத நிலை ஏற்பட்டது.
காந்தவயல் பகுதியைச் சேர்ந்த ஒருவர் 108 ஆம்புலன்ஸுக்கு போன் செய்தார். தனது மனைவிக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளதால் அவரை மருத்துவமனையில் சேர்க்க வேண்டும் என கூறினார்.
இதையடுத்து அந்த நபர் சொன்ன முகவரிக்கு 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் ரோஜாவும், அருண்குமாரும் சென்றனர். அப்போது காந்தவயல் கிராமத்தை இணைக்கும் பாலம் மழைநீரில் மூழ்கியுள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
யோசனை
நிச்சயம் ஆம்புலன்ஸ் வாகனத்தை அந்த பாலத்தின் மீது இயக்க முடியாது என்பதை உணர்ந்தனர். மேலும் மற்றொரு வழியாக செல்லலாம் என்றால் அவ்வழியாக சென்றால் நேரம் அதிகமாகும். எனவே என்ன செய்யலாம் என யோசித்தனர்.
பெண்ணுக்கு குழந்தை
பின்னர் இருவரும் ஆம்புலன்ஸை அங்கேயே விட்டுவிட்டு பரிசல் மூலம் வெள்ள பகுதியை கடந்தனர். பின்னர் அங்கிருந்து இரு சக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு குறிப்பிட்ட இடத்தை அடைந்தனர். அங்கு சென்றபோதுதான் தெரிந்தது, அந்த பெண்ணுக்கு வீட்டிலேயே குழந்தை பிறந்துவிட்டது.
முதலில் குழந்தை
குழந்தை நலமாக இருந்த போதிலும் குழந்தைக்கும் அதிக உதிரப்போக்கு ஏற்பட்டதால் தாய்க்கும் சிகிச்சை அவசியம் என்பதை கருதினர். இதையடுத்து முதலில் குழந்தையை இவர்கள் எப்படி வந்தனரோ அதே முறையில் கூட்டிச் சென்றனர்.
பாராட்டு
அதுபோல் இன்னொரு வாகனத்தை வரவழைத்து தாயையும் மருத்துவமனையில் சேர்த்தனர். இதனால் அனைவரும் நிம்மதி பெருமூச்சு விட்டனர். சாலை சரியாக இல்லாத பட்சத்தில் உயிரை காக்க இரு ஆம்புலன்ஸ் ஊழியர்களும் புத்திசாலித்தனமாக செயல்பட்டு விறுவிறுப்புடன் பாடுபட்டது பெரும் பாராட்டைப் பெற்றுள்ளது.
வாழ்க்கையில் மறக்கமுடியாத நாள்
பரிசலில் செல்வது மற்றவர்களுக்கு வேண்டுமானால் ஜாலியான அனுபவமாக இருக்கலாம். ஆனால் இந்த இரு 108 ஊழியர்களுக்கும் வாழ்க்கையில் மறக்க முடியாத நாளாகும். கிட்டத்தட்ட இரு உயிர்களைக் காத்துள்ளனர்.