சொக்கி போகும் பேரழகு.. வெள்ளை சட்டை, வெள்ளை வேட்டி.. மனசும் வெள்ளை.. இதுதான் சொக்ரி!
குன்னூர் மக்களிடையே பிரபலமானவராக வலம்வந்தவர் மூதாட்டி சொக்ரி ஆவார்.
Recommended Video
சென்னை: வெள்ளை சட்டை, வெள்ளை வேட்டி... பார்த்தாலே சொக்கி விழும் பேரழகி, 50 வருடமாக பிச்சையே எடுத்தாலும் குன்னூர் மக்கள் மனதில் ஏறி உட்கார்ந்து கொண்டிருக்கிறார்... அவர்தான் சொக்ரி!
இளமையும், அழகும், நல்ல மனசும் உடைய பெண்தான் சொக்ரி. சொந்த நாடு பர்மா.. சந்தர்ப்ப சூழ்நிலையால் 50 வருடங்களுக்கு முன்பு குன்னூரில் யாருமில்லாத அனாதையாய் காலடி எடுத்துவைத்தார். புது ஊர்.. யார் அறிமுகமும் இல்லை.. பாஷை தெரியவில்லை... உதவி கேட்க வழியில்லை!
அதனால் குன்னூர் பஸ் ஸ்டாண்ட், மார்க்கெட் என்று பிளாட்பாரம் வாழ்க்கையை வாழ ஆரம்பித்தார். பிச்சையெடுக்க தொடங்கினார். ஆதரவற்ற பெண்ணுக்கு உதவ மனமில்லாதவர்கள் சொக்ரியின் அழகில் சொக்கி விழுந்தார்கள். அதனால் எத்தனையோ இரவுகளில் சக பிச்சைக்காரர்களுக்கு சொக்ரி விருந்தானார். அந்த காமுகர்களிடம் சிக்கி சீரழிந்தார்.
பெட்டிக்கடை
பாதுகாப்பு தேடி வந்த இடத்திலும், இளமையையும், அழகையும் தொலைத்து கடைசிவரை பிளாட்பாரம் வாழ்க்கையே அவருக்கு விதித்தது. குறிப்பாக குன்னூர் மவுண்ட் ரோடில் கண்ணா ஸ்டோர் என்று ஒரு பெட்டிக்கடை உள்ளது. இந்த கடை அருகேதான் சொக்ரியின் இருப்பிடம்.
பிரபலமானார் சொக்ரி
யாருடனும் அறிமுகம் இல்லை.. மொழி தெரியவில்லை.. சொல்ல வழியில்லை.. தப்பிக்க வழியில்லை... வந்த இடத்தில் சின்னாபின்னமாகி போனதால் மனதளவில் பெரிய பாதிப்பு.. புகழ்பெற்ற ராமசந்திரா உணவகம் உரிமையாளர் சங்கர நாயர்தான் சொக்ரிக்கு தினமும் சாப்பாடு தருபவர். அவர் இறந்தபிறகு மலிங், ஆர் வி பேக்கிரி உரிமையாளர், எல்ஐசி ரிசோரியோ போன்றவர்கள் முகம் சுளிக்காமல் சொக்ரிக்கு தினமும் சாப்பாடு போட்டவர்கள். சொக்ரியை தெரியாதவர்களே அந்த பகுதியில் இல்லை என்ற அளவுக்கு பிரபலமானார். எதனால் தெரியுமா?
பிச்சைக்காரர்கள்
சொக்ரி பிச்சை எடுப்பார்.. ஆனால் எல்லாரிடமும் கையேந்த மாட்டார். குறிப்பிட்ட நபர்களிடம் மட்டுமே தேவையான சாப்பாடு, காசு கேட்பார். தன் தேவை போக மிச்சமிருக்கும் காசு, மற்றும் பணத்தை உடனிருக்கும் அல்லது தன்னைவிட மோசமான நிலையில் இருக்கும் பிச்சைக்காரர்களுக்கு கொடுத்து விடுவார். தினமும் இரவு நேரத்தில் பஸ் ஸ்டேண்டில் தூங்க போகும்போது தன் கையில் ஒரு பைசாகூட சொக்ரி வைத்து கொள்ள மாட்டார்.
வெள்ளை வேட்டி, சட்டை
அதேபோல, ஒரு ரூபாயை தவிர வேறு எவ்வளவு பணத்தை ஒருவர் தந்தாலும் வாங்கி கொள்ள மாட்டார். எப்பவுமே ஒரு வெள்ளை சட்டை, வெள்ளை வேட்டியை தன் உடல்மீது போர்த்தி கொண்டே இருப்பதுதான் சொக்ரியின் வழக்கம். இந்த வெள்ளை சட்டை, வெள்ளை வேட்டியின் கதை என்னவென்று இதுவரை நமக்கு தெரியாது. சொக்ரியும் யாரிடமும் இதுவரை மனம்விட்டு பேசாத காரணத்தினால் அதற்கான காரணம் தெரியவில்லை.
10 ரூபாய் நோட்டு
இப்போது சொக்ரிக்கு வயது 85. சொக்ரிக்கு வயசாக ஆக ஆக வெற்றிலை பாக்கு போடும் பழக்கம் சேர்ந்து கொண்டது. அதனால் தன்னிடமுள்ள 10 ரூபாய் நோட்டு ஒன்றில்தான் இவர் சுண்ணாம்பு வைத்து கொள்வாராம். குன்னூர் ஒரு மலைப்பிரதேசம் என்பதால், குளிர், பனி, மழை., நிலச்சரிவுகள் சகஜம். ஆனால் பிளாட்பாரத்திலேயே வாழ்ந்தாலும் இதுவரை சொக்ரி ஆஸ்பத்திரிக்கு தலைவலி, ஜூரம் என்று போனதே கிடையாதாம்.
முதியோர் இல்லம்
தற்போது உடல், உள்ளம் நலிவுற்று கிடக்கிறது. இந்த விஷயம் கேள்விப்பட்டு, டாக்டர் அப்துல் கலாம் பசுமை அறக்கட்டளை நீலகிரி மாவட்ட செயலாளர் உலிக்கல் சண்முகம், அவரது நண்பர் ரிசோரியா போன்றோர் சொக்ரியை மீட்டு ஊட்டியில் செயல்பட்டு வரும் டாக்டர் அப்துல் கலாம் கல்வி மற்றும் பசுமை அறகட்டளை முதியோர் இல்லத்தை நடத்திவரும் தஸ்தகீரிடம் ஒப்படைத்தனர்.
பாழாகிவிட்டது
85 வருடமாக பனியிலும், மழையிலும், குளிரிலும், வாழ்க்கையை கழித்த சொக்ரி, இப்போதுதான் முதன்முறையாக மெத்தையில் படுத்து உறங்குகிறார். ஆரோக்கியத்துடன் காணப்படுகிறார். இப்போதைய தோற்றத்தை பார்ப்பவர்கள் நம்ம சொக்ரியா இது என்று வியக்கிறார்கள். ஆனால் ஒரு அழகு தேவதையின் வாழ்வு பாழாகிவிட்டதை ஜீரணிக்கத்தான் முடியவில்லை!