ஆம்புலன்ஸ் இல்லாமல் தவித்த கர்ப்பிணி.. தோளில் தூக்கிச் சென்ற போலீஸ்காரர்!
மதுரா: உத்தரப் பிரதேசத்தில் ஆம்புலன்ஸில் போக முடியாத நிலையில் தவித்த கர்ப்பிணிப் பெண்ணை ஒரு போலீஸ்காரர் தனது தோளில் தூக்கிச் சென்று மருத்துவமனையில் சேர்த்துள்ளார். அந்தப் பெண்ணுக்கு சுகப் பிரசவம் ஏற்பட்டு அழகிய மகனைப் பெற்றெடுத்தார்.
உ.பி. மாநிலம் மதுராவைச் சேர்ந்தவர் பாவ்னா பிரசவ். கர்ப்பிணியான இவர் கண்டோன்மென்ட் பகுதியில் வசித்து வருகிறார். நேற்று இவருக்கு பிரசவ வலி எடுத்துள்ளது. இவரது வீட்டுக்கு அருகில்தான் ரயில் நிலையம் உள்ளது. ஆம்புலன்ஸுக்காக பாவ்னாவின் கணவர் அலை பாய்ந்தார். ஆனால் எந்த ஆம்புலன்ஸும் கிடைக்கவில்லை.
அதற்குள் பாவ்னா வலியால் துடிக்க ஆரம்பித்தார். ரயில் நிலையப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ்காரர் சோனு ராஜாரா பாவ்னாவின் நிலையைப் பார்த்தார். உடனே ஓடி வந்த அவர் ரிக்ஷா ஒன்றில் ஏற்றி அருகில் இருந்த மருத்துவமனைக்கு கூட்டிச் சென்றார். ஆனால் அங்குள்ளவர்கள் இது பிரசவ கேஸ் இங்கு பார்க்க முடியாது என்று கூறி விட்டனர்.
அருகில்தான் பிரசவ மருத்துவமனை உள்ளது. இதையடுத்து சோனு, பாவ்னாவை அப்படியே தோளில் தூக்கி சுமந்தபடி நடந்தே மருத்துவமனைக்கு விரைந்தார். அங்கு உடனடியாக அவரை ஆபரேஷன் தியேட்டரில் அனுமதித்தனர். அங்கு அழகிய ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தார் பாவ்னா.
Mathura: Policeman carried pregnant woman in arms to help her reach hospital. SO Hathras City says, “I saw woman was in pain&her husband was asking people for help. I called for ambulance, but it wasn’t available. So I took her to hospital where she gave birth to a baby.” (14.09) pic.twitter.com/4XshUKFsil
— ANI UP (@ANINewsUP) September 15, 2018
ஒரு போலீஸ்காரர், கர்ப்பிணிப் பெண்ணை தூக்கிச் சென்றதை அங்கிருந்தவர்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர். சோனுவின் துரிதமான செயலால் பாவ்னாவுக்கும் ஆபத்து ஏற்படவில்லை, பிரசவமும் நல்லபடியாக நடந்து முடிந்தது. சோனுவுக்கு தற்போது பாராட்டு குவிந்து வருகிறது.