"வந்துட்டீங்களா டீச்சர்".. ஆமாடா செல்லம்.. இந்த சிரிப்பும்.. அந்த பாசமும்.. சொல்ல வார்த்தையே இல்லை!
மதிய உணவுடன் மாணவன் வீட்டுக்கு சென்றார் அங்கன்வாடி ஆசிரியை
திருவனந்தபுரம்: சொல்ல வார்த்தையே இல்லை.. பாசம் பொங்கும் டீச்சரின் சிரிப்பு - பால்மணத்துடன் குழந்தையின் சிரிப்பு.. இரண்டும் ஒருசேர கலந்து வெளிப்படும் விலைமதிப்பற்ற போட்டோ இது என்றுதான் சொல்ல வேண்டும்.. அங்கன்வாடி டீச்சர் ஒருவர், மதிய உணவுடன் தன் மாணவனின் வீட்டுக்கு சென்று அந்த குழந்தையை தூக்கி வைத்து கொண்டு பேசும்போது எடுத்த போட்டோதான் இது!
Recommended Video
கொரோனா வைரஸ் இந்தியாவுக்குள் நுழைந்துள்ளது.. 81 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு சொல்கிறது. இதில் அதிகமான பாதிப்பு கேரளாவுக்குதான் ஏற்பட்டுள்ளது... இதுவரை அங்கு 19 பேர் வரை பாதிக்கப்படுள்ளனர். அதனால் கேரள அரசும் ஏராளமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அம்மாநிலத்தில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள், அங்கன்வாடி நிலையங்கள் அனைத்துமே மூடப்பட்டுள்ளது.. குறிப்பாக பொதுமக்கள் கூடும் பல பகுதிகளை உடனே மூட வேண்டும் என்று பிரணாயி விஜயன் உத்தரவிட்டுள்ளார்.
மதிய உணவு
ஆனால் அங்கன்வாடி நிலையங்களையும் மூடிவிட்டதால், ஒரு சிக்கல் ஏற்பட்டது... அங்கன்வாடிகளைச் சேர்ந்த மாணவர்கள் ஏராளமானோர் இந்த மதிய உணவு திட்டங்களை நம்பிதான் உள்ளனர்... அதனால், மாநிலம் முழுவதும் உள்ள அங்கன்வாடி பள்ளிகளை சேர்ந்த மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவை அவர்களது வீட்டுக்கே சென்று கொடுக்குமாறு வழங்குமாறு மாநில அரசு தெரிவித்தது.
அங்கன்வாடி
அதன்படி, அங்கன்வாடி பணியாளர்கள், ஆசிரியர்கள் அனைவருமே பள்ளியில் உணவுகளை சமைத்து தங்களின் மாணவர்களின் வீடுகளுக்குச் சென்று உணவை வழங்கி வருகிறார்கள்.. அந்த வகையில் பாலக்காடு மாவட்டத்தில் அங்கன்வாடி டீச்சர் ஒருவரும் மதிய உணவை எடுத்து கொண்டு, தன் மாணவரின் வீட்டுக்கு சென்றார்.
சிரிப்பு
பொதுவாக டீச்சர்களை பார்த்தால் பயப்படுவார்கள் குழந்தைகள்.. ஆனால் தன்னுடைய டீச்சர் வீட்டுக்குள் வந்ததும் மாணவன் துள்ளி குதித்து ஓடுகிறான்.. டீச்சரும் சிறுவனை செல்லமாக தூக்கி இடுப்பில் வைத்து கொள்கிறார்.. சிறுவனுடன் பேசுகிறார்.. சிறுவனும் சிரித்துக்கொண்டே டீச்சருக்கு பதில் சொல்கிறான்.. இதை மனோரமாவை சேர்ந்த ஜின்ஸே மைக்கேல் என்பவர் போட்டோ எடுத்துள்ளார்.
அச்சுறுத்தல்
அதனை தன்னுடைய ட்விட்டரிலும் பதிவிட்டுள்ளார்... இதற்கு பல்வேறு தரப்பினர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.. "கொரோனா அச்சுறுத்தல் இருந்துவரும் நிலையில் உங்களின் சேவை எங்களது இதயங்களை வென்றுவிட்டது" என்று பலர் தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். ஒரே நாளில் டீச்சரும்-மாணவனும் ஃபேமஸ் ஆகிவிட்டனர்.
பாசம் - அன்பு
உண்மையிலேயே இந்த போட்டோவை பார்க்கும்போது, டீச்சர் - மாணவன் போலவே தெரியவில்லை... ஆசையாக அம்மா தன் குழந்தையை தூக்க கொஞ்சுவது போலவே உள்ளது... இருவரின் சிரிப்பையும் வெறும் வார்த்தைகளால் லேசில் சொல்லிவிட முடியாது... அதிலும் குழந்தையின் சிரிப்பு மொத்த உள்ளத்தையும் கொள்ளை அடித்து கொண்டு வருகிறது... கொரோனாவில் வாழ்க்கை முறை மாறலாம்.. ஆனால் மனித நேயம் மாறாது.. மங்காத அன்பு மாறாது.. இந்த சிரிப்புக்கு முன்னால் கொரோனா கொடூரம் எல்லாம் தலைதெறித்து ஓடிவிடும் என்பது மட்டும் நிச்சயம்!