உண்டியல் காசை தருவியா.. மாமா கேட்க.. டக்குன்னு மண்டையாட்டிய கார்விக்.. "மணப்பாறைக்குள்" ஒரு ஈர மனசு!
கொரோனா நிவாரண நிதியை 3 வயது சிறுவன் வழங்கி உள்ளான்
திருச்சி: "உண்டியல் காசை தருவியா.." என்று மாமா கேட்கவும் உடனே சரியென தலையாட்டினான் கார்விக்.. பொம்மை உண்டியலில் சிறுக சிறுக சேமித்த சில்லறை பணத்தை... கொரோனா நிவாரண நிதிக்காக தாசில்தாரிடம் வழங்கினான் 3 வயது சிறுவன் கார்விக்.. இந்த சம்பவம் மணப்பாறையை மலைக்க வைத்து வருகிறது!
உலக அளவில் மிரட்டி வருகிறது கொரோனா.. இது இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை.. குணப்படுத்த மருந்து இல்லை என்றாலும், முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கை மருத்துவ உபகரணங்களுக்கே செலவு அதிகமாகி கொண்டே போகிறது.
இதனால் கொரோனா நிவாரண நிதி வழங்க மத்திய, மாநில அரசுகள் வேண்டுகோள் விடுத்துள்ளன... இதையடுத்து, தொழிலதிபர்கள், தன்னார்வலர்கள், பொதுமக்கள் கொரோனா நிவாரண நிதிக்கு நிதி உதவி வழங்கி வருகிறார்கள்.
அந்த வகையில் 3 வயது சிறுவனும் தான் உண்டியலில் சேமித்து வைத்திருந்த பணத்தை தாசில்தாரிடம் தந்து உள்ளது சிலிர்க்க வைத்துள்ளது.. திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த பன்னாங்கொம்பு பகுதியை சேர்ந்த தம்பதி தேன்பாண்டியன்-ராதிகா. இவர்களின் மகன் கார்விக்.
ஆக்சிஜனை உறிஞ்சும்.. 5ஜி மூலம் பரவுகிறதா கொரோனா?.. சீனா, இங்கிலாந்தில் உருவான பதற்றம்.. உண்மை என்ன?
தாய்-தந்தை இருவரும் சென்னையில் வேலை பார்த்து வருவதால், பன்னாங்கொம்புவில் பாட்டி வீட்டில்தான் இந்த 3 வயது சிறுவன் வளர்ந்து வருகிறான்.. கடந்த பொங்கலுக்கு கார்விக்கின் தாய்மாமா சரவணன் அவனுக்கு ஒரு உண்டியல் வாங்கி தந்தார்.. அந்த உண்டியல் பொம்மையில் இருக்கும்.. ரொம்பவும் சிறியது.. அதில்தான் பாட்டி, தாத்தா தரும் காசை போட்டு கார்விக் சேமித்து வந்துள்ளான்.
இந்தநிலையில் கொரோனா நிதி உதவிக்காக சிறுவனிடம் சென்று தாய்மாமா உண்டியல் பணத்தை தருவியா என்று கேட்டுள்ளார்.. சிறுவனும் உண்டியல் பொம்மையை எடுத்து மகிழ்ச்சியுடன் தந்துள்ளான்.. இதை சிறிதும் எதிர்பார்க்காத தாய்மாமா, குழந்தையையும், அவனது பெற்றோரையும் மணப்பாறை தாசில்தார் ஆபீசுக்கு வந்தார்.. தாசில்தார் தமிழ்கனியிடம், கார்விக் தன்னுடைய பொம்மை உண்டியலை ஒப்படைத்தான்.
அதில், வெறும் சில்லறை காசுகள்தான் இருந்தன.. மொத்தம் ரூ.715 இருந்தது... சிறுவனின் உதவும் ஆர்வத்தை பார்த்த தாசில்தாரும், அங்கிருந்த அரசு அதிகாரிகளும் நெகிழ்ச்சி அடைந்தனர்.. பிரதமரின் நிவாரண நிதியில் இருந்து தரும் ஒரு கோடியையே ஒதுக்கீடு செய்து, அதையும் தம்பட்டம் அடித்து கொள்ளும் சில அரசியல்வாதிகள் இருக்கும்போது, சிறுவனின் இந்த செயல் மலைக்க வைக்கிறது!