"7 மாத கர்ப்பம்.. அப்புறம் ஏன் டியூட்டி பார்க்கறீங்க" போலீஸ் அதிகாரி அம்ரிதாவின் அசர வைக்கும் பதில்
பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் ராய்ப்பூர் போலீசுக்கு பாராட்டு குவிகிறது
ராய்ப்பூர்: 7 மாத கர்ப்பிணி பெண் போலீஸ் அதிகாரி ஒருவர் கொரோனா லாக்டவுன் காலத்தில் ரோட்டில் நின்று பணியாற்றி வருவது மக்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது... பலரது பாராட்டையும் பெற்று வருகிறது.
உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா தொற்று காரணமாக பெரும்பாலான நாடுகளில் லாக்டவுன் போடப்பட்டுள்ளது.. நம் நாட்டிலும் மே 3 வரை ஊரடங்கு அமலில் உள்ளது.
அதனால் பொதுமக்கள் தேவையில்லாமல் வெளியே வருவதை தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். இதற்காக போலீசாரும் விழிப்புடன் இருந்து மக்களை காத்து வருகின்றனர்.
சேவை
சாலைகளில் எந்தவித அசம்பாவித செயல்களும் நடந்துவிடாமல் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.. எப்படி மருத்துவ துறை குடும்பத்தினரை மறந்து பொதுசேவையில் உள்ளனரோ, அதுபோல காவல் துறையினரும் முனைப்புடன் முழு நேரமும் பணியாற்றி வருகின்றனர். அப்படி ஒரு பெண் போலீஸ் அதிகாரிதான் மக்களிடம் பாராட்டை பெற்று வருகிறார்.
ராய்ப்பூர்
சத்தீஸ்கரின் ராய்ப்பூரில் துணை நிலை காவல்துறை கண்காணிப்பாளராக பணியாற்றும் இவர் பெயர் அம்ரிதா சோரி.. 7 மாதம் கர்ப்பிணியாக இருக்கிறார்.. வயிறு பெரிதாக காணப்படுகிறது.. இதுபோன்ற நேரங்களில் ஓய்வு என்பது அனைத்து கர்ப்பிணிகளுக்கும் தேவையான ஒன்று.. இந்நிலையிலும் சாலையில் நின்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார். இதுகுறித்து ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் அவர் சொன்னதாவது:
ஊக்கம்
"இந்த போலீஸ் பணி என்பது மிகவும் முக்கியமானது... நான் சாலையில் நிற்கும்போது என்னுடன் இருக்கும் மற்ற போலீஸார்களுக்கும் அது மேலும் ஊக்கத்தினை தருகிறது.. என்னுடன் வேலை பார்க்கும், மூத்த, இளைய காவல்துறை பணியாளர்கள் எனக்கு இந்த நேரத்தில் மிகுந்த ஆதரவாக இருக்கிறார்கள்" என்று கூறியுள்ளார். அம்ருதாவின் இந்த பதில் பலரது பாராட்டையும் பெற்று வருகிறது.
கமெண்ட்கள்
"இந்த நெருக்கடி நேரத்தில் இதுபோன்று அதிகாரிகளை பார்த்தாவது மக்கள் பாதுகாப்பாக வீட்டில் இருக்க வேண்டும் என்று பலரும் கேட்டுக் கொண்டுள்ளனர். எனினும், நெட்டிசன்கள் அம்ருதாவுக்கு அட்வைஸ் தந்துள்ளனர்.. "உங்க உடல்நிலையையும் பார்த்து கொள்ளுங்கள் மேடம்" என்று பாசமிகு கமெண்ட்களை பதிவிட்டு வருகின்றனர்.