பெரிய கட்சிகளே.. இவரை பாருங்க.. இதுதான் மனிதம்.. அதனால்தான் அவர் விஜயகாந்த்.. அசர வைத்த "கேப்டன்"
விஜயகாந்த் செய்த உதவி 2 நாளாக பேசப்பட்டு வருகிறது
சென்னை: "குறிப்பறிந்து உதவுதல்" என்று சொல்வார்களே.. அதற்கு சரியான உதாரணம் தேமுதிக தலைவர் விஜயகாந்த்.. எந்த நிலையிலும் ஒரு மனிதன் தன் இயல்பை விட்டு இழப்பதில்லை என்பதற்கும், விட்டு தருபவர் கெட்டு போக மாட்டார்கள் என்பதற்கும் இன்றுவரை உதாரணமாக திகழ்கிறார் விஜயகாந்த்.. இந்த இரண்டே நாளில் மொத்த தமிழகத்தையும் தன் செயலால் திரும்பி பார்க்க வைத்துவிட்டார்!!
Recommended Video
பொதுவாக தமிழக மக்களுக்கு விஜயகாந்த் மேல் தனி பாசம் உள்ளது... அவருக்கு எப்போது உடம்பு சரியில்லை என்றாலும், முதலில் கோயிலுக்கு போய் அவருக்காக வேண்டி கொள்வது நம் மக்கள்தான்!! இதற்கு காரணம் அவருடைய பிரத்யேக குணம்!
இது அரசியல்கட்சி ஆரம்பித்தவுடன் திடீரென போட்டுக்கொண்ட திரை இல்லை.. இயல்பாகவே விஜயகாந்த்துக்கு உதவும் குணம் உள்ளது.. பலவித சறுக்கல்கள், பலவித இன்னல்கள், பலவித ஏமாற்றங்களை கடந்துதான், 'விஜி' என்று செல்லமாக சினிமா உலகினரால் அழைக்கப்பட்டார்.. கண்ணுக்கு தெரியாத உதவிகள் பல அப்போதே ஆரம்பாயின.. எத்தனையோ திரைப்பட கல்லூரி மாணவர்களுக்கு பெரிய படங்களில் தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கினார்.. நூற்றுக்கணக்கான இயக்குனர்களை அறிமுகப்படுத்தினார்.
கலைத்துறை
ஆனால் அரசியலில் ஈடுபடும் முன்பே கலைத்துறையில், இவர் ஏழை மக்களுக்கு செய்த உதவிகள் சொல்லி மாளாது. தினமும் யாருக்காவது உதவிக் கொண்டே இருப்பவர் யார் என்றால் விஜயகாந்த்தான். அது கல்விக்கான பண உதவியாக இருக்கும், அல்லது நலத்திட்ட உதவிகளாகவும் இருக்கும். அவரது இரக்க குணத்திற்கு உச்சக்கட்ட உதாரணமாக சொல்ல வேண்டுமானால், பொதுமக்களுக்கு இலவச மருத்துவமனை அமைத்து கொடுத்தது. இதனால் உயிர்பெற்று நடமாடுபவர்கள் லட்சத்திற்கும் மேல்!!
பிரேமலதா
2 நாளுக்கு முன்பு ஒரு விஜயகாந்த்துக்கு பிரேமலதா ஷேவ் செய்யும் வீடியோ ஒன்று வெளியானது.. இது ஒரு சாதாரண நிகழ்வுதான்.. எல்லார் வீடுகளிலும் இயல்பாக நடக்ககூடியதுதான்.. ஆனால் இந்த வீடியோ 2 நாளாக வைரலாகி கொண்டிருக்கிறது.. இதற்கு காரணம், ரெட் கலர் கண்களை வைத்து நம்மை உருட்டி மிரட்டிய விஜயகாந்த்தை இப்போது குழந்தையாகவே நம் மக்கள் பார்க்க பழகி தொடங்கிவிட்டனர். அவரது தற்போதைய செயல்பாடுகளும் அப்படித்தான் உள்ளது!!
நீயா, நானா
டாக்டரை புதைக்க இடம் தருகிறேன் என்று விஜயகாந்த் அறிவித்தது யாருமே எதிர்பாராத ட்விஸ்ட்.. காரணம், இந்த கொரோனாவை வைத்து இரு பெரும் கட்சிகள் நீயா, நானா என்று மல்லுக்கட்டிக் கொண்டுள்ளன.. ஒருவர் மீது ஒருவர் விமர்சனங்களை வீசி கொண்டுள்ளனர்.. அறிக்கை போர்கள் தொடுத்துக் கொண்டுள்ளனர்.. நோயிலும் அரசியலா என்று மாறி மாறி கேட்டுக் கொண்டிருந்தவர்கள் யாருமே இறந்த டாக்டரை புதைக்க இடம் தர உதவவில்லை.. இவர்கள் நினைத்திருந்தால் நிச்சயம் சடலத்தை புதைக்க இடம் தந்திருக்கவே முடியும்.. இந்த நேரத்தில்தான் எந்தவித அரசியலையும் இதுவரை பேசாமல் நொந்து போய் இருந்த விஜயகாந்த் திடீரென அறிவித்தார்! நேற்று முதல் மொத்த பேர் கவனமும் விஜயகாந்த் மீது திரும்பி உள்ளது.. இதற்கு காரணம் குறிப்பறிந்து உதவியதுதான்!!
மாநாடு
"என் மக்களுக்கு ஒன்னுன்னா விஜயகாந்த் பார்த்துட்டு சும்மா இருக்க மாட்டேன்.. பத்திரமா வீட்டுக்கு போய் சேரணும்.. நான் போன் பண்ணி கேப்பேன்" என்று விஜயகாந்த் இப்போது சொல்லும் வார்த்தையில்லை.. 10 வருஷத்துக்கு முன்பே தன்னுடைய மாநாட்டின் இறுதியில் பகிரங்கமாகவே மக்களிடம் சொன்னார்.. அப்படி சொன்னதுடன் இல்லாமல், அந்தந்த மாவட்ட செயலாளர்களுக்கும் போன் செய்து எல்லாரும் பத்திரமாக சென்று சேர்த்துவிடீர்களா என்றும் கேட்டவர்... அதனால்தான் கடந்த மகளிர் தினத்தன்று தட்டுத்தடுமாறி விஜயகாந்த் இந்த வார்த்தையை சொல்லும்போதுகூட அங்கிருந்தோர் கண்கலங்கினர்.. அரசியலையும் தாண்டி விஜயகாந்த் அனைவராலும் விரும்பப்படுவதற்கு காரணமும் இதுதான்... இந்த பாசம்தான்!
விஜயகாந்த்
அன்றைய காலகட்டத்தில் எவ்வளவோ பேர் உடல்நலிவுற்று விஜயகாந்த்தை நேரில் சந்தித்து நிதியுதவி கேட்பார்கள்.. அள்ளி கொடுத்தார். எவ்வளவோ பேர் அவர் கட்டி கொடுத்த இலவச மருத்துவமனையில் உயிர்பிழைத்து ஆரோக்கியத்துடன் நடமாடி வருகிறார்கள்... 2011-ல் அதிமுகவுடன் கூட்டணி வைத்தது தான் தவறு என்றாலும் சரி.. 2016-ல் திமுகவுடன் கூட்டணி வைக்க தவறியது அதைவிட தவறு என்று விமர்சிக்கப்பட்டு வந்தாலும் சரி.. நேற்று செய்த உதவிக்கு முன்பு எல்லாமே தூள் தூளாக நொறுங்கி போய்விட்டது.
அரசியல்
விஜயகாந்த் இப்படி அறிவித்ததும் அடுத்த சில மணி நேரத்திலேயே ஒரு தொழிலதிபர் உயிரிழந்தவரை புதைக்க தன் நிலத்தை தர முன் வந்துள்ளார்.. இப்படி ஒவ்வொருவராக உதவிக்கரம் நீட்ட ஆரம்பித்துவிட்டதற்கு முதல் புள்ளியை விஜயகாந்த் நேற்று விதைத்தார்!! எத்தனையோ பேரின் உயிரை காப்பாற்றிய விஜயகாந்த் என்ற நல்ல மனிதர் சீக்கிரமாக குணமடைய வேண்டும்.. இது போன்ற பல சமூகப் பணிகளை அவர் மேலும் தொடர வேண்டும்.. இந்த 2 நாட்களாக விஜயகாந்த் மொத்த தமிழகத்தையும் திரும்பி பார்க்க வைத்ததை பெரிய கட்சிகளும் கவனிக்க வேண்டும்.. எல்லா நேரங்களிலும் எல்லா விஷயமும் அரசியலாக பார்க்கப்படுவதில்லை.. அப்படியே அரசியல் ஆக்க முயற்சித்தாலும் அதை மக்கள் விரும்புவதில்லை என்பதுதான் உண்மை!