தள்ளிப் போடாதே.. எதையும்.. தள்ளித் தள்ளிப் போகாதே!
சென்னை: எந்த வேலையாக இருந்தாலும் தள்ளிப் போடாதீங்க.. எதுவாக இருந்தாலும் அதை நீங்கள்தான் செய்தாக வேண்டும். பிடிக்குதோ, இல்லையோ. செய்தாக வேண்டிய வேலையை செய்துதானே ஆக வேண்டும். எனவே தள்ளிப் போடுவதை தவிருங்கள்.
தள்ளிப் போடுவதால் எதுவும் ஆகப் போவதில்லை. மேலும் சிக்கலாகத்தான் அது முடியும். எனவே தள்ளிப் போடாமல் சட்டுப்புட்டென்றுசெய்யப் பாருங்கள். அதனால் தேவையில்லாத டென்ஷனைத் தவிர்க்கலாம்.. தாமதத்தைத் தவிர்க்கலாம்.. கெட்ட பெயரை தவிர்க்கலாம்.. நிறைய குழப்பம் இருக்காது. தெளிவாகவும் இருக்கலாம்.
இந்தப் பழக்கம் குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரிடமும் உள்ளது. நாம் தள்ளிப்போடுவது நம் வேலையை அல்ல நம் வெற்றியை. உதாரணமாக தேர்வு ஆரம்பிக்க இன்னும் பத்து நாட்களே இருக்கிறது என்றாலும் நாளைப் பார்த்துக் கொள்ளலாம் என்றுத் தள்ளிப் போட்டு தள்ளிப் போட்டு இறுதியில் தேர்வுக்கு முதல் நாள் அவசரம் அவசரமாகப் படித்துப் பாஸ் மார்க் வாங்குவதற்குள் படாதபாடு பட்டு விடுகிறோம்.
பெரியவர்கள்
குழந்தைகளுக்கு வீட்டுப்பாடம் கொடுத்தால் சில பெற்றோர்கள் பள்ளிக்குச் செல்லும் வேளையில் தான் அவசரம் அவசரமாக எழுத வைத்து அனுப்புவர். இதனால் தேவையில்லாத டென்ஷன் ஏற்படுகிறது. அதை பள்ளியில் இருந்து வந்தவுடன் தள்ளிப்போடாமல் வீட்டுப்பாடத்தை முடித்து விட்டால் நாம் நிம்மதியாக இருக்கலாம்.
தள்ளிப் போடுவது ஹாபிட்
இன்றையக் காலக்கட்டத்தில் எல்லா விஷயங்களையும் தள்ளிப்போடுகின்றனர். திருமணமானவுடன் குழந்தைப் பேற்றை சில காலம் தள்ளிப் போடுகின்றனர். பின்பு போகாத கோயிலில்லை வேண்டாத தெய்வமில்லை செல்லாத மருத்துவமனை இல்லை ஆனாலும் எங்களுக்குக் குழந்தையில்லை எனப் புலம்புகின்றனர்.
எல்லாமே லாஸ்ட் மினிட்டில்தான்
சில மனிதர்கள் வீட்டின் மின்சார கட்டணம் தொலைபேசிக் கட்டணம் போன்றவற்றை இறுதி நாளன்று தான் கட்டுவர். ஒரு வேளை உங்கள் வேலைப் பளுக் காரணமாக நீங்கள் மறந்து விட்டால் சிக்கலாகி விடும். அதே சமயம் ஆன்லைன் பணப்பரிமாற்றத்தின் மூலம் பணம் செலுத்த இயலவில்லை எனில் உங்கள் நிலைமையை நினைத்துப் பாருங்கள்.
தினசரி படிங்க
ஆசிரியர்கள் நடத்தும் பாடங்களைத் தினமும் படிக்க வேண்டும். இல்லையெனில் பாடங்கள் மலையளவு குவிந்து உங்களைப் பயமுறுத்தும். அதனால் பாடங்களைத் தள்ளிப் போடாமல் படிக்க வேண்டும். அது போல விடுமுறை நாட்களில் வீட்டில் சில வேலைகள் செய்யலாம் என நினைத்துக் கொண்டிருப்போம் ஆனால் பிறகு வேலை நாட்களில் செய்துக் கொள்ளலாம் என்றுத் தள்ளிப் போடுவோம். தள்ளிப் போடுவது என்பது உங்கள் வெற்றியின் வளர்ச்சியைத் தடுக்கும்.
தள்ளிப் போடாதீர்கள்
எந்த ஒரு விஷயத்தையும் நாளை என்றுத் தள்ளிப் போடாதீர்கள். நாளை என்ற பேச்சுக்கு இல்லை என்று அர்த்தம். இன்று தூங்கும் நாம் காலையில் விழிப்போமா என நமக்குத் தெரியாது அதனால் முடிந்தவரை நம் வேலைகளைத் தள்ளிப் போடாமல் சீக்கிரம் முடிப்போம்.குழந்தைகளிடமும் அன்றாட வேலையை அன்றே முடிக்கும் பழக்கத்தை உருவாக்குவோம். அன்றாட வேலைகளை வீட்டிலும் சரி அலுவலகத்திலும் சரி எல்லா வேலைகளையும் தள்ளிப் போடாமல் உடனே செய்து முடிப்போம்.