வாய்ப்புகளுக்கு காத்திருக்காதீர்கள்.. உருவாக்குங்கள்!
சென்னை: பலர் நமக்கான வாய்ப்பு வரும் என்று காத்துக் கொண்டிருப்பார்கள். அத்தகையவர்களால் எதிலுமே வெல்லமுடியாது. மாறாக, நமக்கான வாய்ப்புகளை நாம்தான் உருவாக்க வேண்டும். அப்படிப்பட்டவர்களுக்குத்தான் வெற்றியும் கை கூடி வரும். வெற்றியும் கிடைக்கும். வாய்ப்புகளைத் தேடி காத்திருக்காதீர்கள்.. நீங்களே உருவாக்குங்கள்.. அதுதான் புத்திசாலித்தனமும் கூட.
வாய்ப்புகள் நம்மைத் தேடி வராது நாம் தான் அதை உருவாக்க வேண்டும். உங்களுடைய இலக்குகளை அடைவதற்கான வாய்ப்புகளை நீங்கள் தான் உருவாக்க வேண்டும். நல்ல சந்தர்ப்பங்கள் வாய்க்கும் போது அதைப் பயன்படுத்தி தன்னை உயர்த்திக் கொள்பவனே சாதனையாளனாகிறான்.
இன்று பலர் கொரோனாவால் வேலையிழந்து அல்லல்படுகின்றனர். ஆனால் வேலையில்லையே என்று ஓரிடத்தில் அமராமல் காய்கறி வியாபாரம் செய்கிறார்கள். மாஸ்க் செய்ய தெரிந்தால் அதனை விற்பனை செய்து லாபம் ஈட்டலாம். உங்களிடம் நிலம் இருந்தால் இயற்கை விவசாயத்தில் ஈடுபடலாம். முயற்சி இருந்தால் எதிலும் வெற்றி நிச்சயம். வாய்ப்புகள் இல்லையே என வருந்தாதீர்கள் அதை எப்படி உருவாக்குவது என்று சிந்தியுங்கள்.
என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில் ஏன் கையை ஏந்தவேண்டும் வெளிநாட்டில் ஒழுங்காகப் பாடுபடு வயக்காட்டில் என்பது போல நம்மிடம் இருக்கும் திறமைகளைக் கொண்டு நாமே சுயதொழில் செய்யலாம். சென்னையில் ஒரு பெண் ஐ.டி கம்பெனியில் டெலி காலராகப் பணிபுரிந்தார். கொரோனாவால் வேலை இழந்தார். அவருக்கு இரண்டு பெண் குழந்தைகள். ஆனால் அவர் அதற்காகத் துவண்டு விடவில்லை. இணையதளம் மூலமாக பேக்கிங் பயிற்சி பெற்றார். ஒரு நாள் தன் குழந்தைக்குப் பிஸ்கெட் செய்வதற்காக மாவு பிசைந்து செய்தார். மீதமுள்ள மாவை ப்ரிட்ஜில் வைத்திருந்தார். ஒரு வாரம் வரை அந்த மாவு கெடவில்லை. அதனால் அதையே ஒரு தொழிலாக மாற்றினார்.
நா வறட்சி, சுவையின்மையா?.. கவலையைவிடுங்க.. இந்த 3 பொருள் போதும்.. ஈஸியா விரட்டலாம்.. டாக்டர் கவுதமன்
இன்று வீட்டிலிருந்தபடியே ஆர்டர்க்கேற்ப இன்ஸ்டன்ட் பிஸ்கெட் மாவு தயாரித்து வழங்குகிறார். அதில் மாதம் பத்தாயிரம் சம்பாதிக்கிறார். வாழ்க்கையில் வெற்றியடைய வேண்டுமென்றால் அதற்கான வழித்தடத்தை நாம் தான் திறம்பட அமைத்துக் கொள்ள வேண்டும்.
வாய்ப்புகளை எதிர்பார்த்து இருப்பவன் மனிதன் வாய்ப்புகளை உருவாக்கி அதில் வெற்றி வாகை சூடுபவன் மாமனிதன். எனவே வாய்ப்புகளை உருவாக்குங்கள் உங்கள் இலட்சியத்தை இனிதே அடைந்திடுங்கள்.