எதைக் கண்டும் அஞ்சாதீங்க.. தைரியமா ஃபேஸ் பண்ணுங்க..!
சென்னை: எதற்கெடுத்தாலும் பயப்படுவது சிலருக்கு குணமாகவே உள்ளது. அதாவது சின்ன சின்ன விஷயத்துக்குக் கூட பயப்படுவார்கள். அஞ்சுவார்கள். அது மிகப் பெரிய தவறு என்பதை அவர்கள் ஒரு போதும் உணர்வதே இல்லை.
இப்போது கூட பாருங்கள். கொரோனா குறித்து பரவும் தகவல்களால் பலரும் பயப்படுகிறார்களே தவிர முன்னெச்சரிக்கையுடன், தற்காப்பு நடவடிக்கைகளை பின்பற்றுவோம் என்று நினைப்பதில்லை. மாறாக, நமக்கு வந்து விடுமோ.. வந்தால் என்னாகுமோ என்ற அச்ச உணர்வுதான் பலரிடம் உள்ளது.
இது தேவையே இல்லைங்க.. கொரோனா என்றில்லை.. எந்த விஷயத்துக்குமே முதலில் பயப்படக் கூடாது. தைரியமாக எதிர்கொள்ள வேண்டும். எது வந்தாலும் நெஞ்சை நிமிர்த்தி நிதானமாக அதை எதிர்கொள்ள வேண்டும். பிரச்சினை என்று ஒன்று இருந்தால் நிச்சயம் தீர்வு என்றும் ஒன்றும் கண்டிப்பாக இருக்கும்...நாம் ஏன் பிரச்சினைகளைப் பார்த்துப் பயப்பட வேண்டும். அதைத் துணிந்து எதிர்க்கொண்டாலே தீர்வு கிடைத்து விடும்.
பயந்தால் சாதிக்க முடியாது
பிரச்சினைகளைக் கண்டு பயப்படும் மனிதர்களால் எதையும் சாதிக்க முடிவதில்லை. அப்பிரச்சினைகளைத் துணிந்து எதிர்க்கொள்பவனே சாதனையாளனாக மாறுகிறான். உலகம் முழுவதும் உள்ள மக்கள் கொரோனாவால் அச்சமடைந்துள்ளனர். ஒரு விஷயத்தைப் பார்த்துப் பயந்தால் நமது மூளை அடுத்து என்ன செய்வது என்று யோசிக்காது. பயத்தை தூக்கியெறிந்தால் நம் முன்னே பல தீர்வுகள் கிட்டும்.
பீதி தேவையில்லை
அது போல கொரோனாவைக் கண்டு அஞ்சாமல் அதிலிருந்து உங்களைக் காத்துக் கொள்ளும் நடவடிக்கைகளை எடுங்கள். பிரச்சினைகள் நம் வாழ்க்கையின் தரத்தை உயர்த்தும். ஒவ்வொரு பிரச்சினையின் முடிவிலும் ஒரு அனுபவம் கிடைக்கிறது. எதைப் பார்த்தாலும் முதலில் அதைக் கண்டு பயப்படாதீர்கள். முதலில் அதில் என்ன இருக்கிறது என்பதை அலசி ஆராயுங்கள். அப்பொழுதே உங்களுக்கு அதற்கான தீர்வு கிட்டிவிடும்.
எல்லாத்துக்கும் தீர்வு உண்டு
உங்கள் குழந்தைகளுக்கு உடல்நிலை சரியில்லாமல் போனால் நீங்கள் பயந்துக் கொண்டே உங்கள் பிள்ளைக்கு அருகில் அமர்ந்திருப்பீர்களா அல்லது மருத்துவமனைக்குச் சென்று உங்கள் குழந்தைக்குச் சிகிச்சையளித்துக் காப்பாற்றுவீர்களா.நாம் உடனே அக்குழந்தையைக் காப்பாற்ற முயற்சி செய்வது தான் சிறந்த தீர்வு. அது போல வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சினைகளைக் கண்டு பயப்படாமல் அதிலிருக்கும் தடைக்கற்களைப் படிக்கற்களாக்கி சாதனைப் படைக்க வேண்டும்.
பயம் தேவையில்லை
பயம் என்பது ஒரு கொடிய பாம்பு போன்றது. பயம் ஒரு கட்டத்தில் மனிதனின் உயிரையே எடுத்துவிடும். இன்றுப் பல இடங்களில் நடக்கும் தற்கொலைகளுக்குக் காரணமும் பயம் தான். அதற்குத் தான் அன்றே வள்ளுவர் அஞ்சுவது அஞ்சாமை பேதைமை அஞ்சுவது அஞ்சல் அறிவார் தொழில்
என்றார். வாழ்க்கையில் பிரச்சினைகள் வேண்டும் அப்போது தான் வாழ்க்கை மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும்.எதற்கெடுத்தாலும் பயப்படாதீங்க. பயத்தைத் தள்ளி வையுங்கள். வாழ்க்கையில் வெற்றிப் பெறுங்கள்.