நிறையப் படிங்க.. அறிவு வளரும்.. முதிர்ச்சி பெருகும்!
வாசிக்கும் பழக்கம் நம்மில் எத்தனை பேரிடம் நிலையாக இருக்கிறது.. விரல் விட்டு எண்ணி விடலாம்.. கையில் மொபைலும், காதில் ஹெட்போனுமாகத்தான் இன்றைய தலைமுறையினர் பலரும் உள்ளனர்.
முன்பெல்லாம் வாசிப்பதை ஒரு வேள்வி போல கருதுவார்கள். நான் இந்த புத்தகம் படிச்சேன்.. நீங்களும் படிச்சுப் பாருங்க.. அதுல வர்ற இந்த பாயிண்ட் இருக்கே.. என்று சிலாகித்து நண்பர்களுடன் விவாதிப்போர் அதிகம் இருந்தனர். ஆனால் இன்றோ அப்படிப்பட்டவர்களைத் தேடிப் பார்க்க வேண்டியுள்ளது.
இன்று என்ன தான் இன்டர்நெட்டின் துணைக் கொண்டு புத்தகங்களை வாசித்தாலும் அது கையில் நிஜப்புத்தகத்தை வைத்துப் படிப்பது போல் வருவதில்லை.
அசாம் எரிவாயு கிணற்றில் பயங்கர தீ.. ராணுவம் விரைந்தது.. சிங்கப்பூர் குழு வருகை.. மக்கள் வெளியேற்றம்
முழுமையாக்கும் புத்தகம்
புத்தகம் மனிதனை முழுமையாக்குகிறது. நல்ல நல்ல புத்தகங்களைத் தேடி தேடி வாசிக்க வேண்டும். ஒரு புத்தகம் உங்களிடம் இருந்தால் ஆயிரம் நண்பனுக்குச் சமம் என்பார்கள். தனிமையில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் புத்தகமே சிறந்த நண்பர்கள். ஆயிரம் புத்தகங்களை வாசித்தவன் இருந்தால் அவனைக் காட்டுங்கள் அவனே எனது வழிகாட்டி என்பார் ஜூலியஸ் சீஸர்.
ஆழமாக பதியும்
புத்தகங்களைப் படிக்கும் போது அது நம் மனதில் ஆழமாகப் பதிந்து விடுகிறது. அதில் வரும் கதாபாத்திரங்களை நாமே கற்பனை செய்து பார்க்கிறோம். ஆனால் இன்று புத்தக வாசிப்புக் குறைந்து வருகிறது. இன்று அனைவரும் செல்போன் பயன்படுத்துவதால் புத்தகம் படிப்பதில் ஆர்வம் காட்டுவது குறைந்துள்ளது. புத்தக வாசிப்பின் அவசியத்தை சிறுவயதிலேயே பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு உணர்த்த வேண்டும்.
முல்லா கதைகள்
குழந்தைகளுக்காக தெனாலிராமன் கதைகள் முல்லா கதைகள் சிறுவர் கதைகள் இப்படிப் பல புத்தகங்கள் இருக்கிறது. அவற்றில் ஒன்றை உங்கள் குழந்தையிடம் கொடுத்துப் படிக்கச் சொல்லுங்கள். மறுநாள் அதே கதையை மறுபடியும் கூறச் சொல்லுங்கள். பிறகு அக்குழந்தையை அந்தக் கதையை அடிப்படையாகக் கொண்டு ஒரு கதை எழுதச் சொல்லுங்கள். இதனால் உங்கள் குழந்தையின் கற்பனைத் திறனும் வளரும் அவர்களுக்கு எழுத்துப்பிழை இருப்பின் அதுவும் குறையும்.
அழியாத காவியம்
பொன்னியின் செல்வன் கதை காலத்தால் அழியாத கதையாகும். அன்று முதல் இன்று வரை அக்கதைக்கு ரசிகர்கள் ஏராளம். அதில் வரும் வந்தியத்தேவன் கதாபாத்திரம் யாராலும் மறக்க முடியாது. ஆனால் இதைப் படமாக எடுக்க முயற்சித்த பலர் தோல்வியடைந்துள்ளனர். ஏனெனில் படிக்கும் நபருக்கு ஏற்ப கதையின் கதாபாத்திரங்களைப் பற்றிய கற்பனை மாறும். அதற்கேற்றார் போல் படத்தை எடுப்பது என்பது மிகவும் கடினம்.
மனசுக்குப் புத்துணர்ச்சி
புத்தகம் நம் மனதில் புத்துணர்ச்சி ஏற்படுகிறது. பாரதியார் அவர்கள இறக்கும் தருவாயிலே தன் பிள்ளைகளிடம் அப்பா எதுவும் சொத்து வைத்து வைக்கவில்லையே என வருந்தாதீர்கள். உங்கள் அறையின் மேலே இரண்டு லட்சம் மதிப்புள்ள என் புத்தகங்கள் இருக்கின்றன எனக் கூறினாராம். தோல்வியால் துவண்டு கிடப்பவன் கூட ஒரு புத்தகத்தைப் படித்தால் தோல்வி மனாேபாவத்தைக் கைவிட்டு வெற்றியை நோக்கிச் செல்வர்.
புத்தகத்தின் வாசனை
புத்தகத்தின் வாசனையே தனி தான். அந்த வாசத்தை நுகருங்கள். மனதை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள புத்தகம் படியுங்கள். உங்கள் பிள்ளைகளையும் நூலகத்திற்கு அழைத்துச் சென்று படிக்கப் பழக்கப் படுததுங்கள். தினசரி நாளிதழை வாசிக்கும் பழக்கத்தையாவது உங்கள் பிள்ளைகளிடம் கொண்டு வாருங்கள். அதனால் நல்லாப் படிங்க நிறையப் படிங்க நல்லதையே படிங்க