திருநங்கை தமிழ்ச்செல்விக்கு நர்சிங் சீட்... மனித உரிமைகள் ஆணைய சபாஷ் தீர்ப்பின் பலன்!
சென்னை: 22 வயது திருநங்கை தமிழ்செல்வி வரலாற்றில் இடம் பெற்றுள்ளார். பல தடைகளைத்தாண்டி, செவிலியர் படிப்பில் சேர்ந்துள்ளார். வேலூர் அரசு
மருத்துவக்கல்லூரியில் செவிலியர் டிப்ளமோ படிப்பை தொடங்கியுள்ள தமிழ்செல்வி, சாதாரணமாக இந்த நிலையை எட்டிவிடவில்லை.
வேலூரைச் சேர்ந்த திருநங்கை தமிழ்செல்வி பிளஸ் 2 தேர்வில் 74 சதவீத மதிப்பெண் எடுத்திருந்தார். சின்ன வயதிலிருந்து செவிலியராக வேண்டும் என்ற ஆர்வத்தில் இருந்தார் தமிழ்செல்வி.
அரசு மருத்துவ கல்லூரில் ஆசைஆசையாய் டிப்ளமோ நர்சிங் படிக்க விண்ணப்பித்தார். ஆனால், அவருடைய எண்ணம் ஈடேறவில்லை. மூன்றாம் பாலினத்தவர் என்பதால், அவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. ஆனாலும், தமிழ்செல்வி சோர்ந்துவிடவில்லை. பல அதிகாரிகளை சந்தித்தும் அரசு அலுவலங்களுக்கு ஏறி இறங்கியும் உள்ளார்.
மனித உரிமைகள் ஆணையம் வழக்கு
எனினும் தமிழ்செல்விக்கு உதவ யாரும் முன்வரவில்லை. தமிழ்ச்செல்வியின் விடாமுயற்சிக்கு மாநில மனித உரிமை ஆணையம் கைகொடுத்தது. செய்தித்தாளில் வந்த தகவலைக்கொண்டு மாநில மனித உரிமை ஆணைய நீதிபதி துரை ஜெயச்சந்திரன் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
படிக்க இடம் கொடுக்க உத்தரவு
தகுதி இருந்தபோதும், மூன்றாம் பாலினத்தவர் என்பதால் நர்சிங் படிப்பில் சேர்க்கை மறுப்பது அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது என்று தீர்ப்பளித்த நீதிமன்றம், தமிழ்செல்விக்கு இடம் ஒதுக்கீடு செய்ய தமிழக அரசுக்கு பரிந்துரை செய்தது. இதையடுத்து, வேலூர் அரசு மருத்துவக் கல்லூரியில் தமிழ்செல்விக்கு இடம் ஒதுக்கி தமிழக அரசு ஆணை பிறப்பித்தது.
அலைகழிக்கப்பட்டதற்கு காரணம் என்ன?
"தனியார் கல்லூரில் இடம் கிடைத்தாலும், அரசிடம் பதிய அனுமதி அளிக்கவில்லை. இதனால் நான் தொடர்ந்து அலைகழிக்கப்பட்டேன். திருநங்கைகளுக்கு என தனியாக ஒரு அலுவலகம் இல்லை. இதனால், யாரைச் சந்தித்து முறையிடுவது என்பதில் பெரும் போராட்டமே நடந்தது" என்கிறார் தமிழ்ச்செல்வி.
தொடர் போராட்டத்தின் பலன்
தமிழகத்தில் காவல்துறை, சட்டத்துறையில் மூன்றாம் பாலினத்தவர் சேர்ந்துள்ள நிலையில், செவிலியர் துறையில் ஏன் திருநங்கை சேரக்கூடாது என்ற புறக்கணிப்பு
ஏன் என்று கேள்வி எழுப்புகிறார் தமிழ்ச்செல்வி. இந்த விவகாரம் தொடர்பாக, சென்னை உயர்நீதிமன்றத்தில் இவர் தாக்கல் செய்துள்ள வழக்கும் நிலுவையில் உள்ளது. திருநங்கைகளை புறக்கணிக்கும் சமுதாயத்தின் போக்கு மாறவேண்டும் என்றால், தமிழ்ச்செல்வியைபோல் ஒவ்வொருவரும் மாற்றத்தை நோக்கி போரிட்டுத்தான் ஆகவேண்டும் போலிருக்கிறது. திருநங்கைகளுக்கு என தனி அலுவலர் நியமிக்கப்பட்டால், மூன்றாம் பாலினத்தவர் விவகாரங்களை கவனித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க ஏதுவாக இருக்கும்.