ஆ.. நீங்களா.. மீட்புப் பொருட்களை தானே சுமந்து பணியாற்றி அதிர வைத்த ஐஏஎஸ்!
திருவனந்தபுரம்: கேரளாவில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டபோது மீட்பு பணிகளில் கடந்த 8 நாட்களாக தன்னை யாரென்றே காட்டிக் கொள்ளாமல் இருந்தவர் தாத்ரா நாகர் ஹவேலியை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி கண்ணன் கோபிநாத்.
கேரளத்தில் 100 ஆண்டுகளில் இல்லாத வெள்ளம் அந்த மாநிலத்தை சூழ்ந்து கொண்டது. இதனால் அணைகள் அனைத்தும் நிரம்பி கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
மொத்தம் 14 மாவட்டங்களும் தண்ணீரில் தத்தளித்தன. மக்களின் வீடுகள், உடைமைகள் என அனைத்தும் வெள்ளத்தாலும் நிலச்சரிவாலும் அடித்து செல்லப்பட்டது.
நிதியாகவோ நிவாரணமாகவோ
கடவுளின் தாய் வீடான கேரள மாநிலம் புத்துயிர் பெற வேண்டும் என்பதற்காக அனைத்து மாநிலங்களும், அதன் மக்களும் உதவி கரம் நீட்டினார். அதுமட்டுமல்லாமல் கேரளத்தில் இருந்து வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் சென்று செட்டில் ஆகியுள்ளோரும் நிதியாகவோ நிவாரண பொருளாகவோ உதவி புரிந்தனர்.
நிவாரணம்
அதுபோல் தாத்ரா நாகர்ஹவேலியின் ஆட்சியராக உள்ள கண்ணன் கோபிநாத் (32). கடந்த ஆகஸ்ட் மாதம் 26-ஆம் தேதி அந்த மாநிலத்துக்கு அலுவலக ரீதியாக சென்றார். அங்கு ரூ.1 கோடியை நிவாரணமாக முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்கினார். அப்போது அவர் 10 லாரிகளில் நிவாரண பொருட்களையும் அனுப்பியுள்ளார்.
யாரென்றே கூறவில்லை
இதையடுத்து கேரள மக்கள் படும் துன்பத்தை பார்த்து விட்டு தானும் தங்கியிருந்து மீட்பு பணிகளில் ஈடுபடுவோம் என நினைத்தார். பின்னர் அவரது மூத்த அதிகாரிக்கு நிலைமையை சொல்லி விடுமுறை கேட்டுள்ளார். அவரும் இதை நேர்மறையாக எடுத்துக் கொண்டு விடுப்பு வழங்கினார். அதன் பிறகு சுமார் 8 நாட்களாக அவர் யாரென்றே கூறாமல் மீட்பு படையினருடன் பணியாற்றினார். நிவாரண பொருட்களை ஏற்றுவதும் இறக்குவதும் வெள்ளம் பாதித்த பகுதியில் உள்ள மக்களை மீட்பதும் என பம்பரம் போல் சுழன்றார்.
உண்மையை கூறினார்
அந்த மீட்பு பணிகளை பார்வையிட எர்ணாகுளத்தில் உள்ள ஒரு மையத்துக்கு அந்த மாவட்ட ஆட்சியர் சஃபிருல்லா வந்தார். அப்போது அவர்தான் கண்ணனை அடையாளம் கண்டு கொண்டு இவர் தாத்ரா நாகர்ஹவேலியின் ஆட்சியர் என்றும் அங்கிருந்தோருக்கு அவரை அறிமுகப்படுத்தினார். இதையடுத்து 8 நாட்களாக எந்த பணிகளாகயிருந்தாலும் தான் ஆட்சியர் என்ற அதிகாரத்தனம் இல்லாமல் மிகவும் கீழிறங்கி வந்ததை அனைவரும் பாராட்டினர்.
மெச்சுகின்றனர்
கோட்டயத்தைச் சேர்ந்தவர் கண்ணன் கோபிநாத். இவர் 2012-ஆம் ஆண்டு ஐஏஎஸ் முடித்தவர். மோட்டரோலா செல்போன் நிறுவனத்தில் எலக்ட்ரிக்கல் என்ஜீனியராக பணியாற்றினார். இதையடுத்து அவர் ஐஏஎஸ் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றார். மற்ற இடங்களில் பணி நிமித்தமாகவும் இதர காரணங்களுக்காகவும் செட்டில் ஆகியுள்ள மலையாளிகளை போல் இவரும் அங்கு உதவி புரிந்துள்ளார். ஆனால் இவர் செய்தது சாதாரண உதவியல்ல என்று மாநில மக்கள் மெச்சுகின்றனர்.