மீன் விற்றதால் கேலிக்குள்ளான கேரள மாணவியின் பெருந்தன்மை.. வெள்ள பாதிப்புக்கு ரூ. 1.50 லட்சம் நன்கொடை
Recommended Video
திருவனந்தபுரம்: தனக்கு கிடைத்த அனைத்து நிதியுதவியையும் கேரளத்தில் மீன் விற்றுக் கொண்டே கல்லூரியில் படிக்கும் மாணவி ஹனான் ஹமீது அளிப்பதாக அறிவித்துள்ளார். இது கேரள நடிகர் சங்கமான "அம்மா" கொடுத்த தொகைக்கு முன்பு ஹனான் கொடுத்தது பெரிய தொகையாகும்.
திருச்சூரைச் சேர்ந்தவர் ஹனான் ஹமீது. இவர் தோடுபுழாவிலுள்ள அல் அசார் கல்லூரியில் 3-ஆம் ஆண்டு வேதியியல் படித்து வந்தார். ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதால் பகுதி நேரமாக மீன் விற்கும் தொழிலையும் செய்து வந்தார். இவர் எர்ணாகுளத்தில் உள்ள கோத்தமங்கலத்தில் தங்கியுள்ளார்.
நோட்டுகள்
இந்நிலையில் கல்லூரி சீருடையில் இவர் மீன் விற்றதை விளம்பரம் என்று கூறி சிலர் சமூகவலைதளங்களில் கேலியும் கிண்டலும் செய்தனர். இதையடுத்து அவரது வங்கிக் கணக்குக்கு ஏராளமான 500 ரூபாய் நோட்டுகளும் , 2000 ரூபாய் நோட்டுகளும் வந்தன.
எங்கும் தண்ணீர்
கேரளத்தில் 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மழை பெய்து வருகிறது. மொத்தம் 14 மாவட்டங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் மக்கள் தண்ணீரில் தத்தளித்து கொண்டு உதவியை எதிர்பார்த்து காத்து கிடக்கின்றனர். நிலச்சரிவு ஏற்பட்டதால் சாலைகள் அனைத்தும் சேதமடைந்தன.
உதவியை நாடிய முதல்வர்
கடும் வெள்ளச்சேதத்தால் பாதிக்கப்பட்ட கேரளத்துக்கு தங்களால் இயன்ற உதவியை செய்யுங்கள் என்று முதல்வர் பினராயி விஜயன் மற்ற மாநிலங்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்நிலையில் கேரளத்தில் மீன் விற்றுக் கொண்டே படித்துக் கொண்டிருக்கும் ஹனான் ஹமீது ரூ.1.5 லட்சம் நிதியுதவியை அளிப்பதாக அறிவித்துள்ளார்.
என்னால் முடிந்தது
இதுகுறித்து ஹனான் ஹமீது கூறுகையில் நான் கஷ்டத்தில் இருந்தபோது இந்த மாநில மக்கள் 500 ரூபாய் நோட்டுக்களையும் 2000 ரூபாய் நோட்டுக்களையும் வாரி வழங்கினர். தற்போது அந்த மக்கள் பெரும் இழப்பை சந்தித்துள்ளனர். எனவே அவர்கள் எனக்கு அளித்த நிதியுதவி முழுவதையும் சுமார் 1.5 லட்சத்தையும் அவர்களுக்கே திருப்பி அளிக்கிறேன்.
எப்படி நிதியுதவி
முதல்வரின் நிவாரண நிதிக்கு அனுப்ப நான் முயற்சித்துக் கொண்டிருக்கிறேன். என்னிடம் உள்ள செல்போனில் இணையதள வசதி தற்காலிகமாக துண்டிக்கப்பட்டுள்ளது. வங்கிகளும் மூடப்பட்டுள்ளன. வீட்டை சுற்றிலும் தண்ணீர் சூழ்ந்துகொண்டுள்ளதால் என்னால் வெளியேறவும் முடியாத நிலை உள்ளது. இந்த தொகையை பணமாகவோ அல்லது காசோலையாகவோ முதல்வரை இன்னும் இரு நாட்களில் சந்தித்து அளித்து விடுவேன் என்றார்.
"அம்மா" சும்மாதான்
மலையாள நடிகர் சங்கமான "அம்மா" வெறும் ரூ.10 லட்சம் மட்டும் நிதியுதவி அளித்துள்ளது. ஹனான் அளித்துள்ள ரூ. 1.5 லட்சத்தை காட்டிலும் இவர்கள் அளித்த தொகை மிகவும் சிறியது என்றே கருதப்படுகிறது. இதைத்தான் பணம் இருந்தால் மனம் இருக்காது, மனம் இருந்தால் பணம் இருக்காது என்று கூறுவர்.