அப்பப்ப அணைச்சுக்கங்க.. குட்டீஸ் படிப்பிலும், விளையாட்டிலும் கலக்குவாங்க!
சென்னை: அன்பும் அரவணைப்பும் எவ்வளவு பெரிய ஊக்க சக்தி தெரியுமா.. அதை அனுபவித்தவர்களுக்குத்தான் அதன் மகிமை தெரியும்.
இன்று அன்பு காட்ட பலருக்கும் தெரிவதில்லை. காரணம் இது அவசர உலகமாகி விட்டது. ஆனால் குழந்தைகளுக்கு இது புரியுமா.. என்ன அம்மா சரியா பேச மாட்டேங்கிறாங்க, அன்பா பேச மாட்டேங்கிறாங்க.. அட்லீஸ்ட் கட்டி பிடிக்கக் கூட மாட்டேங்கிறாங்க என்று பல குழந்தைகள் நினைக்கும் நிலை அதிகரித்து வருகிறது.
அப்பாவுக்கு எப்ப பாரு வேலை வேலை வேலைதான். என்கிட்ட அன்பா பேசத் தெரியுதா. ஒரு முத்தம் கூட கொடுப்பதில்லை என்ன அப்பாவோ என்று அலுத்துக் கொள்ளும் குழந்தைகள் அதிகரித்து விட்டனர். அப்படியாகி விட்டது இன்றைய உலகம்.. ஆனால் அன்பும், அரவணைப்பும் குழந்தைகளை மிகப் பெரிய அளவில் ஊக்கமடையச் செய்யும் என்ற உண்மையை பலரும் உணர்வதில்லை.
அன்புதான் முக்கியம்
எப்படின்னுக் கேக்கறீங்களா உங்க குழந்தை பள்ளியில் சொல்லிக் கொடுத்த பாடல் வரிகளை வீட்டில் அழகாகச் சொல்கிறதா. உடனே அக்குழந்தையிடம் அன்பாக சூப்பர் நீ நல்லா சொன்னியே வெரிகுட் மை டியர் என்று உங்கள் குழந்தையை கட்டியணைத்துக் கூறிப் பாருங்கள் அப்போது உங்கள் குழந்தையிடம் ஏற்படும் மாற்றத்தை நிச்சயம் உங்களால் உணர முடியும்.
அன்பும் அரவணைப்பும்
ஒரு குழந்தை நன்றாக வளர்வதற்கு அன்பும் அரவணைப்பும் மிகவும் முக்கியம். உடல் நிலை சரியில்லாத குழந்தை அந்த நேரத்தில் தாயின் அணைப்புக்காக ஏங்கும். அந்த தாயின் அரவணைப்புக் கிடைக்கும் போது அக்குழந்தைக்கு ஓர் பாதுகாப்பு உணர்வு கிடைக்கும். இன்று அனைவரும் வேலை முடிந்து வீட்டிற்கு வந்து உழைத்தக் களைப்பில் அமர்ந்து விடுகின்றனர்.
குழந்தைகளின் ஆர்வம்
பல பெற்றோர்களுக்குத் தங்கள் குழந்தை என்ன விளையாடும் எதில் உங்கள் குழந்தைக்கு ஆர்வம் எனத் தெரியாது. குழந்தை புதிதாக ஏதேனும் செய்தால் கட்டியணைத்துப் பாராட்டுங்கள். அந்தப் பாராட்டு நிச்சயம் உங்கள் குழந்தையை ஊக்கப்படுத்தும். அப்பாவின் அரவணைப்புக்காகவும் அம்மாவின் அரவணைப்புக்காகவும் பிள்ளைகள் காத்துக் கிடைக்கின்றனர்.
இரவில் அணைப்பு அவசியம்
இரவு தூங்கும் போது உங்கள் குழந்தைகளைக் கட்டியணைத்துத் தூங்க வையுங்கள். நீங்கள் அவர்கள் செய்யும் செயலைப் பாராட்டும் விதமாக குழந்தைகளைக் கட்டியணைத்தால் அதிலிருந்து அவர்களுக்கு ஒரு சந்தோசமும் எனர்ஜியும் கிடைக்கும் பாருங்க. அப்பப்பா அதன் சுகமே தனி தாங்க.
உங்கள் குழந்தை மனவருத்தத்தில் இருக்கிறதா. உங்கள் குழந்தையைக் கட்டியணையுங்கள். வருத்தம் போயே போய் விடும்.
டானிக்
அரவணைப்பு என்பது ஒரு எனர்ஜி டானிக் மாதிரி. கமல் சார் வசூல் ராஜா படத்தில் கட்டிப்பிடி வைத்தியத்தைப் பற்றிச் சொல்லியிருப்பார். யாராவது நம்மைக் கட்டிப்பிடித்துப் பாராட்டினால் நமக்கு எவ்வளவு மகிழ்ச்சி ஏற்படும் தெரியுமா. அந்த அரவணைப்பின் மூலம் உன்னால் முடியும் தம்பி என நம்பிக்கையூட்டுகிறீர்கள். தோல்வியில் இருக்கும் நேரத்திலும் தாய் தந்தையரின் அரவணைப்பு நம் மனதில் தைரியமூட்டும்.
அன்பு அணைப்பினிலே
எந்தக் குழந்தையும் நல்லக் குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலே அது நல்லவராவதும் தீயவராவதும் அன்னை அரவணைப்பிலே. அன்னையின் ஸ்பரிசம் குழந்தையின் மீது படும் போது உறவுகள் மேம்படுகிறது.எனவே உங்கள் குழந்தைகளை தினமும் அவங்க செய்யும நற்செயல்களைப் பாராட்டி அவர்களை அணைச்சுக்கங்க அப்புறம் பாருங்க இந்த அணைப்பிற்காகவே அவர்கள் நன்றாகப் படிப்பார்கள். உங்க குழந்தைகளை அணைச்சுக்கங்க அப்புறம் பாருங்க குட்டீஸ் எல்லாவற்றிலும் செமையா கலக்குவாங்க.