இந்தியாவின் முதல் திருநங்கை வழக்கறிஞர் சத்யஸ்ரீ சர்மிளா.. யார் இவர்..?
இந்தியாவின் முதல் திருநங்கை வழக்கறிஞராக சத்தியஸ்ரீ சர்மிளா பொறுப்பேற்றுள்ளார்.
சென்னை: இந்தியாவின் முதல் திருநங்கை வழக்கறிஞராக சத்தியஸ்ரீ சர்மிளா பொறுப்பேற்றுள்ளார்.
தமிழகத்தை சேர்ந்த திருநங்கை சத்தியஸ்ரீ சர்மிளா, வழக்கறிஞராக தமிழ்நாடு-புதுச்சேரி பார் கவுன்சிலில் பதிவுசெய்திருக்கிறார். இவரே இந்தியாவின் முதல் திருநங்கை வழக்கறிஞர் ஆவார்.
பல்வேறு கரடுமுரடான பாதைகளை கடந்த இந்த உச்சத்தை தொட்டுள்ளார் சத்தயஸ்ரீ சர்மிளா. யார் இந்த சத்யஸ்ரீ சர்மிளா? அவர் கடந்து வந்த பாதை குறித்த தகவல் இதோ..
பரமக்குடியை சேர்ந்தவர்
இந்தியாவின் முதல் திருநங்கை வழக்கறிஞரான சத்யஸ்ரீ இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி வட்டம், நயினார்கோவில் பகுதியில் பிறந்தவர். பள்ளி மற்றும் கல்லூரி படிப்பினை பரமக்குடியில் முடித்தார் சத்யஸ்ரீ.
குடும்பத்தை விட்டு விலகல்
பி.காம் வரை பெற்றோருடன் இருந்து பரமக்குடியில் கல்லூரி படிப்பை முடித்தார். பெற்றோர்களுடன் வாழ்ந்து வந்த சத்யஸ்ரீ தான் ஒரு திருநங்கை என்பதை உணர்ந்தவுடன் குடும்பத்தை விட்டு பிரிந்து சென்றார்.
பெயருக்கு பின்னால்
பின்னர் செங்கல்பட்டு அருகே உள்ள நடராஜபுரத்தில் திருநங்கை சர்மிளா என்பவரின் ஆதரவில் வாழ்க்கையை தொடங்கினார் சத்யஸ்ரீ. தனக்கு ஆதரவளித்த சர்மிளாவுக்கு மதிப்பளிக்கும் வகையில் தனது பெயருக்கு பின்னால் சர்மிளாவை சேர்த்துக்கொண்டார் என கூறப்படுகிறது.
சேலத்தில் சட்டப்படிப்பு
2007ஆம் ஆண்டு சேலம் அரசு சட்டக் கல்லூரியில் சட்டப்படிப்பினை முடித்தார் சத்யஸ்ரீ. ஒரு ஆணாகவே சட்டப்படிப்பை முடித்தார் சத்யஸ்ரீ.
கடந்த 30 ஆம் தேதி
36 வயதான சத்யஸ்ரீ தன்னை ஒரு வழக்கறிஞராக முன்னிறுத்த 11 ஆண்டுகள் காத்திருந்தார். திருநங்கைகளுக்கான அங்கீகாரம் கிடைத்ததை தொடர்ந்து கடந்த 30ஆம் தேதி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்கள் மன்றத்தில் தம்மை வழக்கறிஞராக பதிவு செய்தார்.