ஊரடங்கு.. வீட்டோடு இருப்போம்.. உடல் நலம் காப்போம்.. நாட்டின் நலனையும் பாதுகாப்போம்!
நாளை மக்கள் ஊரடங்கு கடைப்பிடிக்கச் சொல்லிருக்காங்க... ஸோ மக்களுக்கு வீட்டோடு. குடும்பத்தோடு இருக்க அருமையான வாய்ப்பு கிடைத்துள்ளது. இதை எப்படி பயன்படுத்தலாம்.. குடும்பத்தாரோடு இப்படி ஒரே இடத்தில் செலவிடும் வாய்ப்புகள் இப்போது குறைந்து விட்டது.
பிரதமர் மோடி மூலமாக கிடைத்துள்ள இந்த வாய்ப்பை எப்படி பயன்படுத்தலாம்.. குடும்பத்தோடு கதைகள் பேசி மகிழலாம். குடும்பத்தினரோடு கேரம் உள்ளிட்டவை விளையாடலாம். மறந்து போன நமது பாரம்பரிய விளையாட்டுகளான தாயம் பல்லாங்குழி உள்ளிட்டவற்றை விளையாடி குழந்தைகளுக்கும் அதை கற்றுக் கொடுக்கலாம்..
வாழ நினைத்தால் வாழலாம் வழியா இல்லைப் பூமியில் என்ன மக்களே நாளைக்கு ஊரடங்கு கடைப்பிடிக்கச் சொல்லிருக்காங்க. அப்போ இந்த நாளை எவ்வளவு சிறப்பானதாக்கலாம் என்று பார்க்கலாம் வாங்க.
காலையில் எழுந்து உங்கள் துணையுடன் இணைந்து காபி குடியுங்கள். உங்கள் அன்றாடக் கடமைகளை முடித்து விட்டு இறை வழிபாட்டிற்கு நேரம் ஒதுக்குங்கள். குடும்பத்தோடு சேர்ந்து மனதார இறைவனை வழிபடுங்கள். பின் உங்கள் துணைக்கும் குழந்தைகளுக்குப் பிடித்த உணவைச் சமைத்துக் குடும்பத்தோடு அமர்ந்து உணவருந்துங்கள்.
உங்கள் குழந்தைகளிடம் மனம் விட்டு பேச நல்ல வாய்ப்பு இது. குழந்தைகளோடு சேர்ந்து வீட்டுக்குள் விளையாடும் விளையாட்டுக்களை ஆடலாம். கண்ணாமூச்சி விளையாடுங்கள். இடையிடையே மறக்காமல் கைகளைச் சுத்தம் செய்வதன் அவசியத்தையும் எடுத்துரையுங்கள். கொரோனா வைரஸ் என்றால் என்று அவர்களுக்கு விளக்குங்கள்.. விழிப்புணர்வை ஊட்டுங்கள். உங்கள் குழந்தைகளுக்குச் சத்தான ஸ்நாக்ஸ்களைச் செய்து கொடுங்கள். உங்களுடைய உறவுகளிடமும் நண்பர்களிடமும் செல்போனில் பேசி மகிழுங்கள்.
செல்போனிலும் தொலைக்காட்சியிலும் மூழ்கிக் கிடக்காமல் உங்கள் குழந்தைகளுக்கு கதைகளைக் கூறுங்கள். சிறு குழந்தைகளாக இருந்தால் உங்கள் தோளில் போட்டுத் தூங்க வையுங்கள். அந்த அரவணைப்பில் அக்குழந்தையின் அழகே தனி தான். வீட்டில் குழந்தைகளுடன் பாரம்பரிய விளையாட்டுகளான ஆடுபுலி ஆட்டம் பரமபதம் போன்ற விளையாட்டுகளை விளையாடலாம். கம்ப்யூட்டரில் கேம் விளையாடாமல் சதுரங்க விளையாட்டை விளையாடக் கற்றுக் கொடுங்கள். அது உங்கள் குழந்தையின் மூளை வளர்ச்சியை அதிகரிக்கும்.
உங்கள் துணைக்கான நாளாக இந்த நாளை மாற்றுங்கள். இந்த நாள் முழுவதும் உங்கள் துணையிடம் மனம் விட்டுப் பேசுங்கள். அவர்களுக்குப் பிடித்ததைச் செய்து அவர்களை மகிழ்வியுங்கள். உங்கள் துணையை அரவணையுங்கள். உங்களுக்குள் சண்டை ஏற்பட்டிருந்தால் அந்தச் சண்டைகளுக்கு முற்றுப்புள்ளி வையுங்கள். இந்த சான்ஸை விடாமல் ரொமான்டிக்கான நாளாக மாற்றுங்கள்.
வீட்டில் பெரியவர்கள் இருந்தால் அவர்களிடம் மனம் விட்டுப் பேசுங்கள். வேலை வேலை என்று கால்களில் சக்கரம் கட்டிக் கொண்டு ஓடும் அனைத்துத் துறையினருக்கும் நாளைய தினம் அவர்கள் குடும்பத்திற்காக நேரம் செலவிடும் நன்னாள் ஆகும். வரும் வாரத்திற்கான வேலைகளைத் திட்டமிடுங்கள். எங்கு பார்த்தாலும் கொரோனா அச்சுறுத்தலாகவே இருப்பதால் உங்கள் குடும்பத்தாருக்கும் ஆறுதலாக நாலு வார்த்தை சொல்லி அவர்களையும் இயல்பாக வைத்திருக்க உதவுங்கள்.
ஊரடங்கு தினமாக கருதாமல், நாளைய தினத்தை கொரோனா பரவல் தடுப்பு நாளாக கருதி வீட்டுக்குள்ளேயே இருந்து அரசின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு கொடுப்போம்.. அப்படியே நமது குடும்பத்தினருடனும் நல்ல முறையில் இதை கழிப்போம். வெளியே போகாமல் வீட்டிலேயே நாம் சந்தோசமாக இருக்க ஆயிரம் வழிகள் இருக்கின்றன. பிரதமர் அவர்களின் கோரிக்கையை ஏற்று நம் வீட்டிலேயே நாளை முழுவதும் இருந்து நம்முடைய நேரத்தை நம் குடும்பத்தினர்களுக்காகச் செலவிடுவோம். எல்லா நாளையும் மகிழ்ச்சியாக மாற்ற நம்மால் மட்டுமே முடியும்.