பாசத்தில் திளைத்திருங்கள்!
உறவுகள் எல்லாம் இன்று அருகிப் போய் விட்டன.. கூட்டுக் குடும்பங்கள் குறைந்து போய் விட்டன. இதனால் பாசம் காட்டுவோருக்கும் அதற்கு நேரம் இல்லை. பாசம் காட்டவும் ஆட்கள் அருகில் இல்லாத அவலம்.. சிட்டி வாழ்க்கையில் பாசம் என்றால் கிலோ என்ன விலை என்று கேட்கும் காலம் ஆகி விட்டது இப்போது. ஆனால் பாசத்தில் எப்போதும் திளைத்திருப்பவர்களைப் போய்ப் பாருங்கள்.. உலகத்தையே தம் வசப்படுத்தி வைத்திருப்பார்கள்... தங்களின் குணத்தால்.
இன்று பணி காரணமாக தாய் ஓரிடம் தந்தை ஓரிடம் வாழ்கின்றனர். பரபரவென்று காலையில் எழுந்து அலுவலகத்துக்குத் தயாராகி வேலைக்குச் சென்று இரவு எட்டு அல்லது ஒன்பது மணிக்கு வீடு திரும்புவது. பிறகு வந்த களைப்பில் உண்டு உறங்குவது. மனைவி மக்களிடம் மனதார பேசுவதற்குக் கூட நேரமில்லை.
பிள்ளைகளை சிலர் குழந்தைகள் பாதுகாப்பகத்தில் விடுகின்றனர். தாத்தா பாட்டியோடு வாழ்ந்த காலம் போய் இன்று அனைவரும் தனிக்குடித்தனமாய் வாழ்கின்றனர். நம் பாரம்பரியத்தையும் நற்பழக்க வழக்கங்களையும் தலைமுறைகளின் பெருமைகளையும் தம் குலத்தின் பெருமையையயும் தன் பேரப்பிள்ளைகளுக்குத் தாத்தா பாட்டி கூறுவர். தாத்தாவும் பாட்டியும் இல்லாமல் குழந்தைகள் நகர வாழ்வில் பாசத்திற்காக ஏங்குகின்றனர்.
வேலைப்பளு காரணமாக குழந்தைகளுக்கு என்ன தேவை என்பதை பெற்றோர் அறிய முற்படுவதில்லை. குழந்தைகளுக்காக எதை வேண்டுமானாலும் வாங்கித் தரும் பெற்றோர் தன் குழந்தைகளுக்காக சிறிது நேரம் செலவிடுவதில்லை. கால் வயிற்றுக் கஞ்சி குடித்தாலும் குடிசையில் தாத்தா பாட்டி உறவினர்களோடு வளரும் குழந்தைகளிடம் இருக்கும் சந்தோசம் மாடமாளிகையில் நான்கு பணியாட்கள் இருக்கும் இடத்தி்ல் வளரும் குழந்தையிடம் இருப்பதில்லை.
நகர வாழ்க்கையில் தான் அப்பா அம்மா குழந்தை என்று சிறு கூட்டிற்குள் இருக்கின்றனர் ஆனால் கிராமங்களில் இன்றும் தாத்தா பாட்டி மாமா அத்தை அண்ணா அண்ணி பெரியம்மா பெரியப்பா சித்தி சித்தப்பா அண்ணன் தம்பி தங்கை இப்படி அத்தனை உறவுகளும் ஒருவரோடு ஒருவர் அன்போடு ஒற்றுமையாக கூட்டுக் குடும்பமாக வாழ்கின்றனர்.
என்ன தான் பணம் சம்பாதித்தாலும் பாசம் காட்டும் மனிதர்கள் இல்லையெனில் நாம் வாழ்ந்த வாழ்விற்கு அர்த்தமில்லாமல் போய் விடும். உங்கள் குழந்தைகளுக்காக தினமும் குறைந்தது ஒரு மணி நேரமாவது செலவிடுங்கள். உறவினர்கள் வீட்டுக்குச் செல்லுங்கள். பெரியவர்களோடு இணைந்திருங்கள். பண்டிகை நாட்களிலாவது அனைவரும் ஒன்று சேர்ந்து கொண்டாடு்ங்கள். கூட்டுக் குடும்பத்தால் உறவுகள் மேம்படுகிறது. பாசம் அதிகரிக்கிறது. குழந்தைகளும் பண்போடும் தைரியத்தோடும் பாசத்தோடும் வளர்க்கப்படுகிறார்கள். பாசத்தில் திளைத்திருங்கள் உங்கள் வாழ்வில் மகிழ்ச்சி பொங்கட்டும்.