வாழும் காலம் குறைவு.. வாழ நினைத்தால் வாழலாம்!
நாம் வாழும் காலம் குறைவு.. அதற்குள் அந்த வாழ்க்கையை வாழ்ந்து விட வேண்டும்.. அதுவும் நமக்குப் பிடிச்ச மாதிரி.. .மனது விரும்புவதற்கேற்ப அதை வாழ வேண்டும். மற்றவர்களுக்காக நீங்கள் உங்கள் வாழ்க்கையை வாழ முடியாது.. உங்களுக்காக வாழுங்கள்.. என்று சொல்கிறார் ஸ்டீவ் ஜாப்ஸ்.. உண்மைதானே!
உன் வாழ்க்கை உன் கையில் என்பது போல கிடைத்த வாழ்க்கையை அணு அணுவாக ரசித்து வாழ வேண்டும். உங்களுக்குப் பிடித்தவருடன் உங்களுக்குப் பிடித்தது போல் வாழும் போது அதன் சுகமே தனி தான். காலையில் எழுந்தது முதல் இரவு தூங்குவதற்கு முன் வரை ஒரு நாள் உங்களுக்குப் பிடித்தாற்போல வாழ்ந்து பாருங்களேன். அப்பொழுது தான் நம் மனம் நிறைந்திருக்கும்.
எத்தனையோ வழிகள் உண்டு நமக்குப் பிடித்தது போல் வாழ்வதற்கு ஆனால் நாம் தான் அதைக் கண்டுபிடிக்காமல் ஏதேனும் ஒன்றை நினைத்துக் கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறோம். அடுத்த வேளை உணவுக்குக் கூட வழியி்ல்லாமல் இருக்கும் மனிதனிடம் இருக்கும் நிம்மதி கூட ஏனோ மாடமாளிகைகளில் வாழும் மக்களுக்கு ஏனோ இருப்பதில்லை.
இரவுபகலாகப் பொருள் ஈட்டுவதற்காக ஓடும் நீங்கள் உங்களுக்காக மாதத்தில் ஓர் நாள் செலவிடலாமே. கிடைத்தற்கரிய உங்கள் மழலைச் செல்வங்களின் அன்பிலும் பெற்றோர்களின் அன்பிலும் நனையலாமே. உங்களுக்குப் பிடித்த உடை அணிந்து பிடித்த உணவு உண்டு பிடித்த இடத்திற்குச் சென்று மகிழ்ச்சியாக இருக்கலாமே.
மழை பாருங்கள்.. அதன் ஆன்மாவை நுகருங்கள்!
வாழ்க்கையே போர்க்களம் வாழ்ந்து தான் பார்க்கணும் என்று சோககீதம் பாடாமல் வாழ நினைத்தால் வாழலாம் வழியா இல்லை பூமியில் என்று மனதைரியத்துடனும் உற்சாகத்துடனும் பாடுங்கள். ஏதோ ஓர் காரணத்துக்காகத் தான் அனைவரும் ஓடுகிறோம். அப்படி ஓடினாலும் ஒரு நாள் ஓய்வெடுத்து உங்களுக்குப் பிடித்தாற் போல் வாழ்ந்துப் பாருங்கள். அதன் சுகமே அப்பப்பா நினைக்கும் போதே மனம் இனிக்கிறது. வாழும் காலம் குறைவு அதனால் ஹேப்பி இன்று முதல் ஹேப்பி என்று எப்போதும் மகிழ்ச்சியாக இருங்கள்.