வாழ்க்கையை விட அழகானது, சுவையானது ஏதாவது இருக்க முடியுமா?
வாழ்க்கையை விட அழகானது, சுவையானது ஏதாவது இருக்க முடியுமா.. வாழ்வின் ஒவ்வொரு துளியும் சுவையானது.. திரும்பக் கிடைக்காத அற்புத பொக்கிஷம்..
வாழும் நிமிடம்தான் நிரந்தரமானது.. கடந்த நொடியும்.. அடுத்த நொடியும் நம் கையில் கிடையாது.. வாழ்க்கையின் போக்கை போகும்போதே முழுமையாக அனுபவிக்கத் தெரிந்தவன்தான் அதிர்ஷ்டசாலி, பாக்கியசாலி.
வாழ்க்கை ஒருமுறைதாங்க.. அதை அழகாக, பிடித்தாற் போல வாழ்ந்து விட்டுச் செல்வதில் நமக்கு மாற்றுக் கருத்தே இருக்கக் கூடாது.
வாழ்க்கையை ஒவ்வொரு நொடியும் ரசித்து வாழுங்கள்.
இன்று பலர் நான் வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடக்கிறேன் ரொம்ப போரடிக்குது என்கிறார்கள். ஆனால் நீங்கள் முடங்கிக் கிடக்கவில்லை உங்களையும் உங்கள் குடும்பத்தையும் கொடிய நோயின் பிடியிலிருந்து காக்க வீட்டில் இருக்கிறீர்கள். இதை உணர்ந்தாலே போதும் தினம் தினம் கொண்டாட்டம் தான்.
சிலர் என் நண்பன் மேனேஜராக இருக்கிறான். நான் இன்னும் ஆபீசராகவே இருக்கிறேன் என்று புலம்புவதுண்டு. அவ்வாறு புலம்பாமல் நமக்குக் கிடைத்த வேலையை மகிழ்ச்சியாக செய்தாலே வாழ்க்கை சுவாரஸ்யமாக இருக்கும்.
அவன் கார் வாங்கிவிட்டான் பங்களா வாங்கிவிட்டான் என்று அடுத்தவரைப் பார்த்து பொறாமைப்படாமல் தனக்கு இருப்பதை வைத்து எவன் ஒருவன் மகிழ்ச்சியாக வாழ்கிறானோ அவனே வாழ்வில் வெற்றியடைகிறான். கிடைக்கப்போகும் பலாக்காயை விட கிடைக்கும் களாக்காயே மேல் என்று சொல்வார்கள். அது உண்மைதானே.
இன்று பலர் மூன்று வேளை உணவு சரிவர கிடைக்காமல் தவிக்கின்றனர். அவர்களைப் பார்க்கும் போது நமக்கு உணவு கிடைப்பதை நினைத்து சந்தோசப்படுங்கள். "சந்தோசம் சந்தோசம் வாழ்க்கையின் பாதி பலம் சந்தோசம் இல்லையென்றால் மனதிற்கு ஏது பலம்" என்பது போல் எப்போதும் மனநிறைவோடு நம் வேலையை மகிழ்ச்சியோடு செய்து பாருங்கள். வாழ்க்கை மிகவும் அழகாக இருக்கும்.
வாழ்க்கை என்பது ஒரு முறை தான். அதனால் அதன் ஒவ்வொரு நொடியையும் ரசித்து வாழுங்கள். நீங்களும் மகிழ்ச்சியாக இருங்கள் உங்கள் உடனிருப்போரையும் மகிழ்ச்சிப்படுத்துங்கள். பெற்றோர்களோடும் பிள்ளைகளோடும் நேரம் செலவிடுங்கள். நண்பர்களோடு அன்பைப் பரிமாறிக் கொள்ளுங்கள். நீங்க எப்பவும் மகிழ்ச்சியாக இருந்தால் வானம் மட்டுமல்ல உங்களுக்குப் பிடித்த வாழ்க்கையும் உங்கள் வசம் தான்.