"பிரட் விலை ரூ.30.. பணத்தை பெட்டியில் போடவும்".. யாருமே இல்லாத கடையில்.. தழைக்கும் மனிதம்!
கோவை அருகே உள்ள பேக்கரி கடை வைரலாகிறது
கோவை: "பிரட்'டின் விலை ரூ.30.. பணத்தை அருகில் உள்ள பெட்டியில் போடவும்" என்று எழுதப்பட்டுள்ளது ஒரு ஸ்வீட் கடை வாசலில்...!! யாருமே இல்லாத கடை வாசலில் இப்படி எழுதி போடவும், பொதுமக்களும் அதற்கு செவிசாய்த்து மனிதத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.. இந்த சம்பவம்தான் சோஷியல் மீடியாவில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது!!!
இப்போது ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது... பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வருவதில்லை.. அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டுமே வீடுகளில் இருந்து வெளியேவந்து செல்கிறார்கள்.. அப்படியே வந்தாலும் அரசின் உத்தரவுப்படி சமூகவிலகலையும் சேர்த்தே கடைபிடித்து வருகிறார்கள்.
இந்த சமயத்தில் கோவையில் ஒரு நிகழ்வு அனைவருக்கும் வியப்பை ஏற்படுத்தி வருகிறது..
கோவை ரத்தினபுரியில் உள்ள பிரிட்ஜ் அருகே ஒரு ஸ்வீட் கடை உள்ளது.. இது பேக்கரியும் கூட.. இப்போது ஊரடங்கு அமலில் உள்ளதால், இந்த கடை மூடப்பட்டுள்ளது.
எனினும் அந்த கடை ஓனர்.. பொதுமக்களுக்கு தட்டுப்பாடின்றி "பிரட்" கிடைக்க வேண்டும் என்பதற்காக கடை முன்பு டேபிள் ஒன்றை வைத்து, அதன்மேல் 'பிரட்' பாக்கெட்டுகளை அடுக்கி வைத்துள்ளார்.. கண்ணாடி டப்பாவில் சுகாதாரமாக பிரட்டுகள் அடுக்கி மூடி வைக்கப்பட்டுள்ளது.. ஆனால் அந்த பிரட்டை விற்பதற்கு யாருமே ஆட்கள் இல்லை.
அதற்கு பதிலாக "பிரட்" வைத்துள்ள பெட்டியின் அருகில் ஒரு நோட்டீஸ் போர்டு எழுதி வைத்துள்ளனர்.. அதில், 'பிரட்'டின் விலை ரூ.30 ஆகும். தேவையான அளவுக்கு 'பிரட்'டுகளை எடுத்துக்கொண்டு அதற்கான பணத்தை அருகில் உள்ள பெட்டியில் போடவும் என்று எழுதப்பட்டுள்ளது.
அந்த பகுதி மக்களும் அந்த கடைக்கு வந்து அங்கு 'பிரட்'டுகளை எடுத்துக்கொண்டு அதற்கான பணத்தை அருகில் உள்ள பெட்டியில் போட்டுவிட்டு செல்கிறார்கள்.... இதுகுறித்து கடை ஓனர் சொல்லும்போது, ஊரடங்கு உத்தரவு காரணமாக நிறைய கடைகள் மூடப்பட்டு இருக்கின்றன.. இதனால் 'பிரட்' மக்களுக்கு தடையின்றி கிடைக்க இப்படி ஏற்பாடு செய்தோம்.. ஆனால் விற்பனைக்கு ஊழியர்கள் யாரும் இல்லை.. தேவையான அளவுக்கு 'பிரட்'டுகளை எடுத்துக்கொண்டு அதற்கான பணத்தை பெட்டியில் போட்டுவிட்டு செல்ல எழுதி வைத்தோம்.. வெளிநாட்டில் இப்படிதான் செய்கிறார்கள்.
இந்த பகுதி மக்களாலதான் நான் இந்த அளவுக்கு வளர்ந்தேன்.. இப்படி எழுதி வைத்து 5 நாட்களாச்சு.. 24 மணி நேரமும் பிரட் கிடைக்க ஏற்பாடு செய்திருக்கிறோம்.. ஒரு நாளைக்கு 250 பாக்கெட் பிரட் விற்பனையாகுது.. 'பிரட்'டுகள் தீர்ந்துவிட்டால் தேவையான அளவுக்கு கொண்டு வைக்கிறோம். இதில் யாரும் 'பிரட்'டுகளை திருடுவது இல்லை... எவ்வளவு பிரட் வைத்தோமோ அதற்குரிய பணத்தை சரியாக மக்கள் பெட்டியில் போடுகிறார்கள்.. இதேபோல வேறு ஏதாவது அத்தியாவசிய பொருட்களையும் விற்பனை செய்ய முடிவு செய்து உள்ளோம் என்றார்.
தன்னை வளர்த்துவிட்ட அந்த பகுதி மக்களுக்கு இதுபோன்ற நெருக்கடி நேரத்திலும் பிரட் வைத்துள்ள ஓனரை பாராட்டுவதா? அல்லது யாருமே இல்லாத கடையில் உரிய பணத்தை பெட்டியில் போட்டு பிரட்டை எடுத்து செல்லும் மக்களின் நேர்மையை பாராட்டுவதா என தெரியவில்லை.. ஆனால் கொடிய கொரோனா நம் மக்களிடம் நிறைய மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது.. மக்களிடம் ஏற்கனவே மனித நேயம் இருந்தாலும் இப்படிப்பட்ட பதட்டமான சூழலில், நெருக்கடியான நேரத்தில் அது நிறையவே வெளிப்படுவது நம்மை சிலிர்க்க வைக்கிறது!