Monday Motivation: சன்டேன்னா ஜாலி.. மண்டே வந்தா ஜோலி.. ஆனாலும் ஹேப்பியாக்கலாம்
சென்னை: ஆஹா.. திங்கள்கிழமை வந்துருச்சா.. சே.. ஏன்தான் இந்த ஞாயித்துக்கிழமை மட்டும் இவ்வளோ சீக்கிரம் முடியுதோ.
என்னங்க ரொம்பத்தான் அலுப்பா இருக்கா.. எல்லோருக்கும் வரும் இயல்பான Monday Blues தான் இது. இது இல்லாமல் யாராலும் இருக்க முடியாது.
சன்டேன்னா ஜாலி.. மண்டே வந்தா ஜோலி என்பதே இயற்கை!.. இதை மாற்ற யாராலும் முடியாது. ஆனால் நாம் திங்கள்கிழமையை தைரியமாக எதிர்கொள்ள மனதைப் பக்குவப்படுத்தி விட்டால்.. அதை விட சூப்பரான தொடக்கம் எதுவுமே இருக்க முடியாதுங்க..
ஞாயிறு இரவே டென்ஷன்
ஞாயிற்றுக் கிழமை அன்னிக்கு இருக்கும் சந்தோசம் ஏனோ நம்மிடம் திங்கள்கிழமை அன்று இருப்பதில்லை. ஏனென்றால் திங்கள் கிழமை வந்தாலே அலுவலகத்திற்கு நேரத்திற்குச் செல்ல வேண்டுமே என டென்ஷன். ஞாயிற்றுக் கிழமையன்று வெகுநேரம் தூங்கிக் காலையில் பத்து அல்லது பதினோரு மணிக்கு எழுவோம். அதனால் திங்களன்று காலையில் ஆறு மணிக்கே எழ வேண்டும் என்றால் படுக்கையை விட்டு எழ உடலுக்கும் மனதுக்கும் தோன்றாது.
இயந்திரத்தனம்
திங்கள்கிழமை வந்தாலே இயந்திரத்தனமான வாழ்க்கை. காலையில் சீக்கிரம் எழுந்து சமைத்து பிள்ளைகளை பள்ளிகளுக்குத் தயார் செய்து அனுப்பிவிட்டு தனக்கும் தன் கணவருக்கும் உணவை லஞ்ச் பாக்ஸில் எடுத்து வைத்துத் தானும் கிளம்பிவிட்டு மணியைப் பார்த்தால் ஒன்பது ஆகியிருக்கும். பின் எலெக்ட்ரிக் ட்ரெயின் பிடித்துக் கூட்ட நெரிசிலில் சிக்கிச் சின்னாபின்னமாகி அலுவலகத்திற்குச் செல்லும் போது பத்து நிமிடம் தாமதம்.
அப்பாடா
அதற்கு மேனேஜர் பார்க்கும் பார்வை இருக்கிறதே அப்பபப்பா பின் அதையும் சமாளித்து தன் இருக்கைக்குச் சென்று அமரும் போது தான் அப்பாடா என பெருமூச்சு விடுவோம். இப்படி ஒரு நாள் இரண்டு நாள் அல்ல வாரம் ஐந்து நாட்களும் ஓட வேண்டும். அதனால் எல்லோருக்குமே திங்கள் கிழமை வந்தாலே ஒரு பயம் தான்.
டிராபிக்கைத் தாண்டி
சென்னைப் போன்ற பெருநகரங்களில் திங்களன்று காலையில் டிராபிக் அதிகமாக இருக்கும். அதற்குள் நம் வண்டியை வைத்துக் கொண்டு நீந்தி அலுவலகம் சென்றால் மணி பத்தரை.நீங்க என்ன தான் அச்சோ திங்கள்கிழமை வருதேன்னு கவலைப்பட்டாலும் வாராவாரம் திங்கள் கிழமை வந்தே தீரும். திங்கள்கிழமையை ஆகா திங்கள் கிழமை வந்துடுச்சு இனி ஜாலி தான் என்று நம்மால் மாற்ற முடியுமா. நிச்சயம் முடியும்.
முதலிலேயே திட்டமிடுங்க
ஞாயிற்றுக்கிழமையே ஒரு வாரத்திற்கான வேலைகளைத் திட்டமிடுங்கள். பிள்ளைகளின் புத்தகங்களைப் பையில் வைத்து வாட்டர் பாட்டில்களை எடுத்து வைத்து வையுங்கள். ஞாயிறு இரவு வெகுநேரம் தொலைக்காட்சியிலும் இணையத்திலும் செலவிடாமல் சீக்கிரம் உறங்கச் செல்லுங்கள். உங்கள் மெயில்களைச் செக் செய்து மறுநாள் மீட்டிங் இருந்தால் அதற்குத் தேவையானக் குறிப்புகளை எடுத்து வைத்து விடுங்கள்.
பாட்டு கேளுங்க பாடுங்க
உங்களுக்குப் பிடித்த நிற ஆடையை அணிந்துச் செல்லுங்கள். அது உங்களுக்கு இன்னும் ஊக்கமளிக்கும். சீக்கிரமே அலுவலகத்திற்குச் செல்லத் தயாராகுங்கள். உங்களுக்குப் பிடித்த பாடலைக் கேட்டுக் கொண்டே வாரத்தின் முதல் நாளை சூப்பராக ஆரம்பியுங்கள். அப்பாடலைப் பாடிக் கொண்டும் ஆடிக் கொண்டும் நீங்கள் கிளம்பும் போது புத்துணர்ச்சியோடு காணப் படுவீர்கள்.
சூப்பரா சாப்பிடுங்க
காலை உணவைத் தவறாமல் சாப்பிடுங்கள். உங்களுக்குப் பிடித்த உணவாக இருந்தால் நன்றாக ரசித்து ருசித்துச் சாப்பிடுங்கள்.அது அன்றைய நாளைச் சிறப்பானதாக்கும். சிரித்த முகத்துடன் வேலைக்குச் செல்லுங்கள் அலுவலகம் சென்றவுடன் உங்கள் நண்பர்களுக்கு உங்கள் புன்னகையைப் பரிசளியுங்கள்.
மனசை பக்குவப்படுத்துங்க
எல்லாவற்றுக்கும் மேலாக முதலில் மனசை ரெடியாக்குங்க.. நாளைக்கு திங்கள்கிழமையா என்று சலிப்பு தட்டாதபடி மனசை ஓகே.. நாளை முதல் அடுத்த ஒரு வாரத்தை அசத்த வேண்டும் என்று சொல்லி மனசை கூலாக்கி பக்குவப்படுத்தினாலே திங்கள்கிழமை பயம் வராது. மேலும் திட்டமிட்டு வேலைகளைச் செய்தாலே ஒவ்வொரு திங்களும்.. நிலவைப் போல குளிர் மண்டேவாக மாறி விடும்.. திங்கள் மட்டுமல்ல.. எல்லா நாட்களும் இப்படி இருந்தால் எல்லா டே வும் ஜாலி டே தான்.