Only I can change my life என்னால் மட்டும்தான் முடியும்.. இதை நம்புங்க.. எல்லாமே சுபம்தான்!
சென்னை: Only I can change my life..
இப்படி ஒரு வார்த்தை உண்டு.. இது சாதாரண வார்த்தை இல்லை. ஒரு வேதமாகவே எடுத்துக் கொள்ளப்பட வேண்டிய ஒன்று. உண்மையிலேயே, நமது வாழ்க்கை நமது கையில்தான். அதை மாற்றும் அத்தனை சக்தியும், அதிகாரமும், வல்லமையும், உரிமையும் நமக்கு மட்டுமே உண்டு. நிறையப் பேர் இதில் குழம்பிப் போய் விடுகிறார்கள்.
யாராவது வந்து நம்மை மாற்றுவார்கள், மாற்றத்தைத் தருவார்கள் என்ற மூட நம்பிக்கையிலேயே வாழ்வோர் பலர் உண்டு. ஆனால் அது உண்மை இல்லை.. உண்மையில் நாம்தான் நமது வாழ்க்கையின் அத்தனை அம்சங்களுக்கும் மூல காரணம். நாம் எப்படி இருக்க வேண்டும் என்பதை நாம்தான் முடிவு செய்ய வேண்டும்.
ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு கனவு இருக்கும். அந்த கனவுகளை நனவாக்க நம் அனைவருக்கும் தேவை தன்னம்பிக்கை. என்னால் நிச்சயம் முடியும் நான் என் கனவை அடைந்தே தீருவேன் என்று நம் திறமையின் மீது நம்பிக்கை வைத்தால் நிச்சயம் சாதிக்க முடியும். மனிதனின் அசைக்க முடியாத நம்பிக்கை தன்னம்பிக்கை. எந்த ஒரு சூழ்நிலையிலும் நாம் தன்னம்பிக்கையை மட்டும் விட்டுவிடக் கூடாது.
தவழ்தல் முதலில்
எந்தக் குழந்தையும் பிறந்தவுடன் நடப்பதில்லை. முதலில் தவழ ஆரம்பிக்கிறது. பின் பிடித்துக் கொண்டு நடக்கிறது. சின்னஞ்சிறு குழந்தை முதன்முதலில் அடி எடுத்து வைக்கும் போது கவனிக்கும் தாய் அந்தக் குழந்தை அடுத்த அடி எடுத்து வைக்கும் போது அக்குழந்தையை உன்னால் முடியும் நீ முயற்சி செய் என்று ஊக்கப்படுத்துவாள். ஆசிரியர்களும் குழந்தைகள் பள்ளிக்கு வந்தவுடன் அவர்களுடைய ஒவ்வொரு செயலையும் பாராட்டித் தன்னம்பிக்கையை வளர்க்கின்றனர்.
நம்பிக்கை
அவர்கள் கூறும் தன்னம்பிக்கை மிக்க வார்த்தைகளால் அக்குழந்தை நம்மால் திறம்பட செயலாற்ற முடியும் என்று எண்ணி தன் கனவுகளில் வெற்றி அடைகிறது. விளையாட்டு ஆசிரியர் நன்றாக விளையாடப் பயிற்சி அளிக்கிறார். உன்னால் முடியும் என்று ஊக்கப்படுத்திக் கொண்டே இருப்பார் விளையாட்டு ஆசிரியர்.
சிலந்தி வலை
தோல்வியால் துவண்டு போயிருந்த ராபர்ட் ப்ரூஸ் அவர்கள் ஒரு சிலந்தி வலைப் பின்னுவதைக் கண்டார். அது அம்முயற்சியில் தோற்றுப் போனாலும் மீண்டும் மீண்டும் முயற்சி செய்து அந்த வலையை அழகாகப் பின்னி முடித்தது. இதைக் கண்ட அவர் மனதில் நம்மாலும் வெற்றிப் பெற முடியும் என்ற தன்னம்பிக்கைத் துளிர் விட்டது .
முடியாதது எதுவுமில்லை
முயன்றால் முடியாதது எதுவுமில்லை. மனிதர்களே நீங்கள் தினமும் உங்களை ஊக்கப்படுத்துங்கள் மற்றவர்களையும் ஊக்குவியுங்கள்.உங்களது ஒரு பாராட்டு அவர்களின் எதிர்காலத்தை மாற்றும் வல்லமைக் கொண்டது. எந்த ஒரு கஷ்டமான சூழ்நிலையிலும் நம் நம்பிக்கையை மட்டும் விட்டுவிடக் கூடாது. வீழ்வேன் என்று நினைத்தாயோ என்ற பாரதியின் வரிகளுக்கேற்ப தோல்வியைக் கண்டுத் துவளாமல் தடைக்கற்களையும் படிக்கற்களாக மாற்றிச் சாதனைப் படைக்க வேண்டும்.
குறைபாடுகள் இருந்தாலும்
எத்தனையோ உடலில் குறைபாடுகள் இருந்தாலும் அவற்றையெல்லாம் தகர்த்தெறிந்து மாற்றுத்திறனாளிகள் சாதிக்கின்றனர். அவர்களையெல்லாம் பார்த்து நாம் கற்றுக் கொள்ள வேண்டியது தன்னம்பிக்கை. அது மட்டும் உங்களிடம் இருந்தால் அகிலத்தை ஆளலாம். இன்று வேலையில்லாமல் பலர் திண்டாடுகின்றனர். அவர்கள் வேலைத் தேடி அலையாமல் அவரவர் திறமைக்கேற்ப ஒரு தொழிலை உருவாக்கிக் கொண்டு தன்னம்பிக்கையோடு அதில் கவனம் செலுத்தினால் வெற்றி நிச்சயம்.
கடும் உழைப்பு
மாணவர்களும் எனக்கு இந்தப் பாடம் படிக்க சிரமமாக உள்ளது என்று எண்ணாமல் கண்டிப்பாக என்னால் அந்தப் பாடத்தில் நல்ல மதிப்பெண் எடுக்க முடியும் என்ற நம்பிக்கையோடுப் படித்தால் வெற்றி நிச்சயம். யானைக்குப் பலம் தும்பிக்கையில் மனிதனுக்குப் பலம் நம்பிக்கையில் என்பார்கள். சிறு வயதில் சைக்கிள் ஓட்ட நாம் கற்கும் போது கீழே விழாமல் கற்கவே முடியாது. அவ்வாறு கீழே விழும் குழந்தையை தூக்காமல் உன்னால் முடியும் நீயே எழுந்து மீண்டும் சைக்கிளை ஓட்ட முயற்சி செய் என்று கூறுவது அக்குழந்தையின் தன்னம்பிக்கையை வளர்க்கும்.
தட்டிக் கொடுங்கள்
நம் கைகளால் நம் முதுகில் தினமும் தட்டிக் கொடுங்கள். அதுவே உங்களை இன்னும் ஊக்கப்படுத்தும். எந்தக் குழந்தையும் நல்லக் குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலே அவன் நல்லவராவதும் தீயவராவதும் அன்னை வளர்ப்பினிலே என்பார்கள் அது போல ஒரு குழந்தை தோல்வியைக் கண்டு அஞ்சாமல் அதை முறியடித்து சாதனை அடைவதற்கு தன்னம்பிக்கை அவசியம். அதனால் நம்மை நாமே ஊக்கப்படுத்துவோம் மற்றவர்ளையும் ஊக்குவிப்போம். நம்மால் நம் வாழ்க்கையை மாற்ற முடியும் என்ற நம்பிக்கையை குழந்தைகளின் மனதில் விதைப்போம்.