ஒவ்வொரு நாளும் புதிதாய்ப் பிறப்போம்!
சென்னை: ஒவ்வொரு நாளையும் புதிதாக எடுத்துக் கொள்ள வேண்டும். முந்தைய நாளின் அத்தனை நெகட்டிவ் அம்சங்களையும் அப்படியே போட்டு புதைத்து விட்டு புதிய நாளில் புதிய அவதாரமாக மாறி செயல்படும்போதுதான் முதல் நாளின் தோல்வி கூட அடுத்த நாளில் வெற்றிகரமாக முடியும்.
ஒவ்வொரு நாளையும் புதிய தொடக்கமாக கருதி செயல்படும்போது புதிய சிந்தனைகளும் கூடவே வந்து சேரும். அது இன்னும் உத்வேகத்துடன் நம்மை செயல்பட ஊக்குவிக்கும்.
பழையன கழிதலும் புதியன புகுதலும் என்பது போல நேற்றையப் பிரச்சினைகளையெல்லாம் மறந்து இன்றைய நாளைப் புதிதாக புத்துணர்ச்சியாகத் தொடங்குவோம்.
தேவை இன்முகம்
சிலர் நேற்று அலுவலகத்தில் மேலதிகாரியிடம் திட்டு வாங்கியிருப்பீர்கள் அல்லது உங்கள் துணையுடன் ஏதேனும் சிறு சண்டை ஏற்பட்டிருக்கலாம். அதையெல்லாம் இரவு தூங்கிக் கண் விழித்தவுடன் எல்லாவற்றையும் மறந்து புதிய உத்வேகத்தோடு செயல்பட வேண்டும். பெண்ணானவள் காலையில் எழுந்து வாசலை மொழுகிக் கோலமிட்டுக் காபி தயாரித்து இரவு தன் துணைக்கும் அவளுக்கும் சண்டையே நடந்திருந்தாலும் இன்முகத்தோடும் கையில் காபியோடு அவனை எழுப்புகிறாள்.
கோபம் தேவையில்லை
அது மட்டுமில்லாமல் தன் குழந்தைகள் தம்மிடம் நேற்றுக் கோபப்பட்டிருந்தாலும் அதையெல்லாம் மறந்து தன் பிள்ளைகளுக்குப் பார்த்து பார்த்து உணவுகளைத் தயாரிப்பாள். அதில் துளியும் கோபத்திற்கு இடம் கிடையாது. அது போல் ஆண்களும் தன் கோபங்களை மறந்துத் தன் துணையோடு பேச வேண்டும். நேற்று என்ன நடந்ததோ அதையே நினைத்துக் கொண்டிருந்தால் கால விரயம் தான் ஏற்படுமே தவிர வேறொன்றும் நடக்கப்போவதில்லை. நேற்று நாம் என்ன செய்தோம் என சிந்திக்காமல் இன்று நாம் நம் பணியை எவ்வாறு செவ்வனே செய்ய முடியும் என திட்டமிடுங்கள். கடந்த காலத்தைப் பற்றி நினையாமல் நிகழ்காலத்தில் சாதனை செய்பவனே அறிவாளி.
குட்டிக் கதை
ஒரு ஊரில் ராஜா - ராம் என இருவர் இருந்தனர். இருவரும் சிறுவயது முதலே நன்றாகப் படித்தனர். இருவரும் கல்லூரி இறுதியாண்டில் கேம்பஸ் இன்டர்வியூவிற்காக தங்களைத் தயார் செய்துக் கொண்டிருந்தனர். மூன்று நாட்கள் அவன் கல்லூரியில் கேம்பஸ் இன்டர்வியூ நடந்தது. முதல் நாள் கேம்பஸ் இன்டர்வியூவில் இருவருக்கும் வேலைக் கிடைக்கவில்லை. இதனால் மிகவும் மன வருத்தத்தில் இருந்தான் ராஜா.
உறக்கமிலலாமல் போச்சு
இதையே நினைத்து நினைத்து இரவு முழுவதும் உறங்கவில்லை. ஆனால் ராமுவிற்கும் மனவருத்தம் இருந்தாலும் அதையெல்லாம் மறந்துவிட்டு மறுநாள் நடக்கும் இன்டர்வியூவிற்காகத் தயாரானான். மறுநாள் ராஜா நேற்று நடந்தவற்றையே நினைத்துக் கொண்டிருந்ததால் சரிவர எழுத்துத் தேர்வு எழுத முடியவில்லை. ஆனால் ராமோ நேற்று நடந்தவற்றையெல்லாம் மறந்து காலையில் பிரஷ்ஷாகத் தயாராகி எழுத்துத் தேர்விலும் தேர்ச்சிப் பெற்று வேலையும் அவனுக்குக் கிடைத்துவிட்டது.
புதிதாக பிறப்போம்
நீங்களும் உங்களுடைய இன்றைய நாளை நேற்று நடந்ததையெல்லாம் மறந்து புதிதாக இந்த நாளைத் தொடங்குவீர்களா. அப்படித் தொடங்கினால் நிச்சயம் நீங்கள் உங்கள் வாழ்வில் வெற்றிப் பெறுவீர்கள். நேற்று என்பது கையில் இல்லை நாளை என்பது பையில் இல்லை இன்று மட்டுமே நிஜம். தினமும் நாம் புத்துணர்ச்சியாகவும் புதிதாகவும் நம் வேலையைச் செய்யத் தொடங்கினால் எல்லா நாளும் இனிய நாளே.