திருவாளர்களே, திருமதிகளே, செல்விகளே..இதோ வந்துவிட்டார்.. முதல் திருநங்கை வக்கீல்!
திருநங்கை சத்யஸ்ரீ சர்மிளா வக்கீல் ஆக பதிவு செய்துகொண்டார்.
சென்னை: இந்தியாவின் முதல் திருநங்கை வக்கீல், இன்று தமிழ்நாடு பார்கவுன்சிலுக்கு சென்று வக்கீலாக பதிவு செய்து கொண்டார்.
பரமக்குடியை சேர்ந்த திருநங்கை சத்யஸ்ரீ சர்மிளா. அவருக்கு வயது 36. இவர் இந்தியாவின் முதல் திருநங்கை வக்கீல் ஆவார். இவர் சேலத்தில் 2007-ம் ஆண்டே சட்டம் படித்து முடித்துவிட்டார். ஆனாலும், கடந்த 11 ஆண்டாக பார்கவுன்சிலில் வக்கீலாக பதிவு செய்யாமலே இருந்தார். திருநங்கைகளுக்கு எப்போது ஒரு அங்கீகாரம் கிடைக்கிறதோ அப்போது தான் வக்கீலாக பதிவு செய்வதாக முடிவு செய்திருந்தார்.
அவர் நினைத்ததுபோலவே, கடந்த 2014-ம் ஆண்டு உச்சநீதிமன்ற உத்தரவுக்கு பின்னர் திருநங்கைகளின் வாழ்வில் மறுமலர்ச்சி தொடங்கியது. நல்ல மாற்றங்கள் காணப்பட்டன. இதனையடுத்து, இதனால் சத்யஸ்ரீ சர்மிளா இன்று தன்னை தமிழ்நாடு பார்கவுன்சிலில் வக்கீலாக பதிவு செய்து செய்து கொண்டார். அப்போது நீதிபதிகள் மற்றும் வக்கீல்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
பின்னர் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய சத்யஸ்ரீ சர்மிளா, தனது சமூகத்தில் உள்ள மக்களின் வாழ்க்கை முன்னேற்றத்துக்காக முழு ஆதரவு தந்து உதவ போவதாக கூறினார். வக்கீலாக வருவதற்கு உதவிய தன்னுடைய அம்மா, திருநங்கை சகோதரிகள் பலருக்கு நன்றியை தெரிவித்து கொள்வதாக கூறிய அவர், தன்னைப்போல் நிறைய திருநங்கைகள் வக்கீலாக வர முயற்சிக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.
இன்று வழக்கறிஞர் தொழிலில் தானும், காவல்துறை ஆய்வாளராக பிரித்திகா யாஷினி என்ற திருநங்கையும் உள்ளதுபோல், அனைத்து துறைகளிலும் திருநங்கைகள் வரவேண்டும் என்று தாம் விரும்புவதாகவும் சத்யஸ்ரீ சர்மிளா கூறினார்.