நிதானித்து செயல்படுவோம்.. வெல்வோம்!
பலர் எதற்கெடுத்தாலும் கோபப்படுவார்கள்.. அவசரப்படுவார்கள்.. கோபம் அறிவுக்கு எதிரி.. அறிவிழந்து ஆத்திரப்பட்டு எதை சாதிக்கப் போகிறோம்.. எதுவுமே கிடையாது.. நிதானமாக செயல்பட்டுப் பாருங்கள்.. உங்களால் வெல்ல முடியாதது எதுவும் இல்லை என்பதை உணர்வீர்கள்.
ஆத்திரக்காரர்களுக்கு புத்தி மட்டு என்பார்கள். ஆத்திரம் வந்தால் நிதானம் இருக்காது. ஆத்திரத்தில் செய்யும் வேலை சிறப்பாக இருக்காது. கோபம் மனிதனையே அழிக்கும் வல்லமைப் பெற்றது. எந்த செயலையும் செய்யும் போது நிதானமாக செய்ய வேண்டும். கோபத்தால் கேடு விளையுமே தவிர நன்மை விளையாது. நாம் வாழ்வில் வெற்றி பெற வேண்டுமென்றால் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்.
கோபத்தில் சில நேரங்களில் நம் உறவுகளிடமோ நண்பர்களிடமோ வார்த்தையை விட்டு விட்டு பிறகு நாம் வருத்தப்படுவோம். நம்முடைய இலக்கை அடைய வேண்டுமெனில் கோபத்தை விட்டொழியுங்கள். நிதானமாக இலக்கை அடைவதற்கான வழியைச் சிந்தியுங்கள். பொறுமையாக யோசித்துப் பார்த்தால் நாம் செய்த தவறு விளங்கும். பிறகு அதை எப்படி சரி செய்து என்று யோசிங்க.
காலையில் பரபரவென அலுவலகத்திற்கு தயாராகிக் கொண்டிருக்கிறீர்கள். உங்கள் மகன் தண்ணீர் பாட்டிலில் இருக்கும் தண்ணீரைக் கொட்டி விட்டான். உடனே கோபப்பட்டு அவனை அடித்து விடாதீர்கள். அடித்தால் நாள்முழுவதும் அடித்து விட்டோமே என்று நீங்களும் அடி வாங்கியதையே நினைத்து உங்கள் மகனும் வருத்தப்படுவான். இதையே கொஞ்சம் நிதானித்து வேறு தண்ணீரை பாட்டிலில் ஊற்றி கொடுத்து விட்டு இனி இதுபோல் செய்யாதே கவனமாக இரு என்று கூறினால் அவனும் தன் தவறை உணர்ந்துக் கொள்வான்.
அமைதியை விட சிறந்த மகிழ்ச்சி வேறுண்டா!
கோபம் உடையவரால் எதையும் சாதிக்க முடியாது. நிதானமாக சூழ்நிலையைக் கையாளுங்கள். பொறுமையாக செயல்களை திறம்பட செய்யுங்கள். கோபத்தை விட்டொழித்து செயலில் தீவிரம் காட்டுங்கள். வெற்றி நிச்சயம்.