எளிமையை விட சிறந்த ஆடம்பரம் உண்டா?
மகாத்மா காந்தியின் அடையாளம் என்ன.. அகிம்சை, அன்பு, விடா முயற்சி, போராட்ட குணம், அமைதி ஆகியவற்றைத் தாண்டி அவரது எளிமை.. இல்லையா.. எளிமையை விட மிகப் பெரிய ஆடம்பரம் உலகில் எதுவுமே இல்லை. அதை அனுபவித்துப் பார்த்தால்தான் அதன் உண்மை புரியும்.
எளிமையாய் வாழ்வதென்பது இக்காலத்தில் அவ்வளவு எளிதானதல்ல. எளிமையாக வாழ்வதால் உங்களுடைய தரம் குறைந்து விடுவதில்லை ஆனால் இன்று பலர் அந்தஸ்து என்ற பெயரில் ஆடம்பரமான வாழ்க்கை வாழவே விரும்புகின்றனர். எளிமையாக இருப்பதே ஆடம்பரம் தானே.
நம் சுதந்திரத்திற்காகப் போராடிய தியாகிகளுள் கக்கன் என்பவரும் ஒருவர். அவர் மிகவும் எளிமையானவர். காந்தியின் கொள்கையால் ஈர்க்கப்பட்டு நம் நாட்டின் விடுதலைக்காகப் போராடினார். பின் சுதந்திரம் அடைந்த பின் காங்கிரஸ் கட்சியில் பதவி கிடைத்தப்போதிலும் இறுதிவரை எளிமையாகவே வாழ்ந்தார்.
கர்மவீரர் பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் எளிமையின் மறுஉருவம் என கூறலாம். ஆட்சி புரிகின்ற காலத்தி்ல் தன் சம்பளத்தைத் தவிர வேறு எந்தப் பணத்தையும் அவர் வாங்கியதில்லை. இறக்கும்போது கூட தனக்கென சொந்தமாக ஒரு வீடு கூட இல்லாதவர். கதர் உடுத்தி எளிமைக்கு இலக்கணமாக வாழ்ந்தவர் நம் கல்விக்கண் திறந்த காமராஜர்.
பெரியார் பாரதியார் கா்தியடிகள் போன்றோர் எளிய வாழ்க்கை வாழ்ந்ததால் தான் இன்று உலகமே அவர்களைப் போற்றுகிறது. இன்று எளிமையான மனிதர்களைப் பார்ப்பதே அரிதாகிவிட்டது. எளிமையாக வாழ்வது தவறல்ல. அது ஒரு தனி சுகானுபவம். அது அனுபவித்வர்களுக்கேப் புரியும்.
இன்று நம்மில் பலர் பகட்டாக வாழ வேண்டும் என்றெண்ணி அதற்காக உழைத்து வாழ்க்கையின் சிறு சிறு சந்தோசங்களையும் இழக்கின்றனர். வெளியூர் செல்ல வேண்டுமென்றால் ஏசி காரில் ஜன்னல்கள் அடைத்துப் பயணம் செய்வது ஆடம்பரமா அல்லது இரயிலிலோ பேருந்திலோ ஜன்னலோர இருக்கையில் அமர்ந்து இயற்கையையும் மனிதர்களையும் ரசிப்பதில் தான்ஆடம்பரம் இருக்கிறது. நமக்குக் கிடைத்த வாழ்க்கையில் நமக்குத் தேவையானதை மட்டும் வைத்துக் கொண்டு பிறருக்கும் கொடுத்து எளிய வாழ்க்கை வாழ்வோம்.
பிரதமர் மோடியிடமிருந்து திடீரென ஒரு தமிழ் ட்வீட்.. திருக்குறள் பற்றி புகழாரம்
எளிமை என்பது வறுமையல்ல அது ஒரு தவம். அதை அனுபவித்துப் பார்த்தால் தான் அதன் சுகம் தெரியும். எளிமையாக வாழுங்கள் அதுதான் உண்மையான ஆடம்பரம் என்பதை உணர்வீர்கள். எளிமையின் சிறப்பை உங்கள் நண்பர்களுக்கும் கூறுங்கள்.