என் அண்ணனுக்கு சமர்ப்பணம்.. கேரளாவில் கொல்லப்பட்ட மதுவின் தங்கைக்கு போலீஸ் வேலை
கேரளாவில் சில நாட்களுக்கு முன் அடித்துக் கொல்லப்பட்ட மதுவின் தங்கைக்கு போலீஸ் வேலை அளிக்கப்பட்டுள்ளது.
Recommended Video
திருவனந்தபுரம்: கேரளாவில் சில நாட்களுக்கு முன் அடித்துக் கொல்லப்பட்ட மதுவின் தங்கைக்கு போலீஸ் வேலை அளிக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் கடந்த பிப்ரவரி மாதம் அரிசி உள்ளிட்ட சாப்பிடும் பொருட்களை திருடியதாக கூறி மது என்ற இளைஞர் அடித்து கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் இந்தியா முழுக்க பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
கொலையை செய்தவர்கள் அதை வீடியோவும் எடுத்து இருந்தார்கள். பல மாநில மக்கள் இதற்கு கண்டனம் தெரிவித்து இருந்தார்கள்.
நிவாரணம்
கேரளா அரசு அவரது குடும்பத்திற்கு நிவாரண நிதி அளித்து இருந்தது. 10 லட்சம் நிவாரணம் கொடுக்கப்படும் என்று பினராயி விஜயன் குறிப்பிட்டு இருந்தார். மேலும் அவர்களை கேரள முதல்வர் பினராயி விஜயன் சென்று சந்தித்தார். அவர் வீட்டில் இருக்கும் உறுப்பினர்களுடன் உரையாடினார்.
போலீஸ் பணி
இந்த நிலையில் கொல்லப்பட்ட மதுவின் தங்கை சந்திரிக்காவிற்கு போலீஸ் வேலை கொடுக்கப்பட்டுள்ளது. அதே சமயம் முறையாக போலீஸ் வேலைக்கான தேர்வையும் அந்த பெண் எழுதியுள்ளார். அவர் பணியில் சேர்வதற்கான ஆணையை கேரள முதல்வர் பினராயி விஜயன் நேரடியாக அவரிடம் கொடுத்தார்.
பலர்
அதேபோல் ஆதிவாசி சமூகத்தை சேர்ந்த மேலும் 73 பேருக்கு இதே நாளில் போலீஸ் வேலை வழங்கப்பட்டுள்ளது. அவர்களுக்கும் சந்திரிகாவுடன் சேர்ந்து போலீஸ் வேலைகான பணி ஆணை கொடுக்கப்பட்டது. இந்த நிலையில் மதுவின் கிராமத்தில் பெரிய மறுவாழ்வு மையம் கட்டபட உள்ளது. அங்கு இருக்கும் மனநலம் பாதிக்கப்பட்ட மக்கள் அனைவரும் இந்த கட்டிடத்திற்கு கொண்டு வரப்பட இருக்கிறார்கள்.
மதுவிற்கு சமர்ப்பணம்
இந்த வேலை வாய்ப்பு குறித்து பேசிய சந்திரிகா '' எனக்கு போலீஸ் வேலை கிடைக்கும் என்று நினைக்கவில்லை. அரசுக்கு நன்றி. இது என் அண்ணனுக்கான வேலை. இந்த வேலையை என் அண்ணனுக்கு சமர்ப்பிக்கிறேன். முதலில் இந்த வேலைக்கு போக வேண்டா என்று நினைத்தேன். என் அண்ணன் இருந்திருந்தால் நான் போலீஸ் ஆவதை பார்த்து சந்தோசப்பட்டு இருப்பார். அதனால் இந்த வேலையில் சேர முடிவெடுத்தேன்.'' என்றுள்ளார்.