அரசியல்வாதிகளே.. கடலூர் அண்ணாமலையிடம் வந்து கத்துக்கங்க.. மனித நேயத்தை!
கடலூர்: கொரோனா வைரஸிலிருந்து பொதுமக்களை பாதுகாக்க கடலூரைச் சேர்ந்த தையல் கலைஞர் ஒருவர் ஏழை, எளிய மக்களுக்கு கதர் துணியாலான முக கவசத்தை இலவசமாக தைத்து வழங்கி வருகிறார்.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் மண்வெட்டி பக்கிரி சந்து தெருவை சேர்ந்தவர் அண்ணாமலை (60). இவர் கடந்த 40 ஆண்டுகளாக தையல் தொழிலில் ஈடுபட்டு வருகிறார்.
பள்ளி மாணவ, மாணவிகளின் சீருடைகள், டாக்டர் கோட்டுகள் முதலான ஆடைகளைத் தயாரித்து தருவதில் வல்லவர். இவரிடம் ஐந்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர்.
மாஸ்க்
இந்நிலையில் கொரோனா வைரஸிலிருந்து பாதுகாக்க முக கவசம் அணிவதன் அவசியத்தை ஊடகங்கள் வாயிலாக அறிந்துகொண்ட அண்ணாமலை, முக கவசத்தை ஏழை, எளிய மக்களுக்கு கதர் துணி மூலம் இலவசமாக தைத்து கொடுக்க முடிவு செய்தார். அதன்படி கடந்த சில நாட்களாக சுமார் 500 க்கும் மேற்பட்ட முக கவசங்களை தயாரித்து தனக்கு தெரிந்த நபர்களுக்கும், ஏழை எளிய மக்களுக்கும் இலவசமாக கொடுத்து வருகிறார்.
அருமையான சேவை
தையல் கலைஞர் அண்ணாமலையின் இந்த செயலை தற்போது அனைவரும் பாராட்டி வருகின்றனர். பட்டி தொட்டியெங்கும் இவரது சேவை மனப்பான்மை பரவி பலரின் வாழ்த்துகளையும், பாராட்டுக்களையும் குவித்துள்ளது. இதுகுறித்து தையல் கலைஞர் அண்ணாமலை கூறுகையில், கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாத்துகொள்ள முக கவசங்களை அணிய வேண்டுமென மத்திய, மாநில அரசுகள் அறிவுறுத்தி வருகின்றனர்.
மக்கள் எங்கே போவார்கள்
ஆனால் கிராமப்புறத்தில் உள்ளவர்களுக்கு முக கவசங்களை வாங்கி உபயோகிக்கும் அளவிற்கு பொருளாதாரம் கிடையாது. இதனால் ஏழை, எளிய மக்களுக்கு முக கவசங்களை இலவசமாக தைத்து கொடுக்கலாம் என முடிவெடுத்து, தற்போது 500 க்கும் மேற்பட்ட முக கவசங்களை தைத்து கொடுத்துள்ளேன். கொரோனா வைரஸ் பாதிப்பு குறையும் வரை முக கவசங்களை இலவசமாக தருவதற்கு முடிவெடுத்துள்ளதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
பாராட்ட வார்த்தையில்லை
தற்போதுள்ள சூழ்நிலையில் முக கவசங்களுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாட்டை பயன்படுத்தி, அவற்றை பதுக்கல் செய்து, அதிக விலைக்கு விற்பனை செய்து வருபவர்களுக்கு மத்தியில், அண்ணாமலை போன்றோரின் செயல்கள் பாராட்டுக்கும், போற்றுதலுக்குமுரியதே. இதுபோன்ற சேவை இதயங்கள்தான் உண்மையான கடவுள். அரசியல்வாதிகள், எம்பிக்கள், எம்பிக்கள், பெரும் பணக்காரர்கள் கூட செய்யத் தவறிய சேவை இது.. பாராட்டுவோம் அண்ணாமலையை மனமார!