அஸ்தமனம் என்று வந்தால் நிச்சயம் உதயமும் பின்னாடியே வரும்!
எல்லாம் முடிஞ்சு போச்சு.. இதுக்கு மேல என்ன இருக்கு.. இப்படித்தான் பலரும் விரக்தி அடைந்து விடுகிறார்கள். ஆனால் அவர்கள் ஒரு விஷயத்தை உணர மறந்து விடுகிறார்கள்.
அஸ்தமனம் என்று ஒன்று இருந்தால் நிச்சயம் உதயமும் பின்னாடியே வருங்க. அதுதான் இயற்கையும் கூட. ஏற்றம் என்று ஒன்று இருந்தால் நிச்சயம் தாழ்வும் இருக்கும். இதைத்தான் ஒரு படத்தில் கூட வாழ்க்கை ஒரு வட்டம்டா என்று வசனம் வைத்திருப்பார்கள்.
இதை புரிந்து கொண்டால், அந்த பக்குவத்திற்கு மனசைப் பழக்கிக் கொண்டு விட்டால் பிறகு விரக்தியாவது, அயர்ச்சியாவது.. எல்லாமே ஓடி விடும்.
உடைந்து விடக் கூடாது
உள்ளம் என்றும் எப்போதும் உடைந்து போக கூடாது என்ன இந்த வாழ்க்கையென்ற எண்ணம் தோன்ற கூடாது.இன்பம் துன்பம் இரண்டுமே கலந்தது தாங்க வாழ்க்கை. இன்றைக்குக் கொரோனாவால் அனைவரும் வீட்டுக்குள்ளேயே இருக்கிறோம். இதில் பலருக்கு வேலை போகும் என்ற கவலையும் ஏற்பட்டுள்ளது. அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாதீங்க உங்களுக்கு தையல் தெரிந்தால் மாஸ்க் கையுறை போன்றவற்றை தைத்துக் கொடுங்கள்.
மறு கதவு திறக்கும்
கணினி அறிவு இருந்தால் ஆன்லைனில் வகுப்புகள் எடுங்கள். கடவுள் ஒரு கதவை சாத்தினால் நிச்சயம் மறுகதவை நமக்குத் திறப்பார். அதுபோல நாமும் காலத்திற்குத் தகுந்தார் போல் வாழ வேண்டும். உங்களுக்கு நன்றாக சமைக்கத் தெரிந்தால் இந்த லாக்டவுன் நாட்களில் விடுதிகளில் தங்கியிருப்பவர்களுக்கு சமைத்துக் கொடுத்து வருமானம் ஈட்டலாம்.
ஆர்வம் முக்கியம்
உங்களுக்கு கைவினைப் பொருட்கள் செய்வதில் ஆர்வம் இருந்தால் அதை ஓய்வு நேரங்களில் செய்யலாம். சொந்த வீடாக இருந்தால் மாடித்தோட்டம் போடுங்கள். ஒரு குட்டிக் கதை சொல்லட்டுமா.. சுரேஷ் என்பவன் தனியார் கம்பெனியில் இருபதாயிரம் சம்பளத்தி்ல் பணிபுரிந்துக் கொண்டிருந்தான். அவன் மனைவி சாந்தா தனியார் பள்ளியில் பணிபுரிந்துக் கொண்டிருந்தாள். அவன் கம்பெனியில் பொருளாதாரக் காரணங்களுக்காக பலரை வேலையில் இருந்து வெளியே அனுப்பிவிட்டனர். இதனால் அவன் மிகவும வேதனையாக இருந்தான்.
பன் மடங்கு சம்பாத்தியம்
பல நிறுவனங்களில் முயற்சி செய்தும் அவனுக்கு வேலை கிடைக்கவி்ல்லை. இதனால் மிகவும் விரக்தியடைந்தான். இதைப் பார்த்த சாந்தா அவனை ஆன்லைனில் கம்ப்யூட்டர் வகுப்புகளை நடத்துமாறு கூறினாள். முதலில் தயங்கிய அவன் பின் அதற்கான முயற்சியில் இறங்கினான். பகல் நேரத்தில் பள்ளிகளுக்கான பிராஜெக்ட்டுகளைச் செய்வான் மாலை நேரத்தில் ஆன்லைனில் டியூஷன் வகுப்புகள் எடுப்பான். இதன் மூலம் தான் அலுவலகத்தில் சம்பாதித்ததை விட பன்மடங்கு சம்பாதிக்க தொடங்கினான்.
எப்போதும் மகிழ்ச்சியே
வாழ்க்கையில் நாம நினைச்ச ஒரு வேலை நமக்கு கிடைக்கலனா அதை விட சிறப்பான ஒரு வேலை உங்களுக்குக் கிடைக்கப் போகிறது என்று அர்த்தம். எதற்கும் விரக்தி ஆகாதீர்கள் நிச்சயம் மீண்டு வருவோம் என நம்பிக்கை கொள்ளுங்கள். இன்றைய தோல்வி நாளைய வெற்றிக்கான அறிகுறி என்பதை நினைவில் கொள்ளுங்கள். பிறகென்ன எப்பவும் ஹாப்பி தான்.