சதீஷ், சலீம், கபீர்.. பரங்கிமலை ரயில் விபத்தில் பயணிகளை காப்பாற்றிய ஹீரோக்கள்
Recommended Video
சென்னை: கடற்கரை-திருமால்பூர் நடுவே இயக்கப்படும், புற நகர் ரயிலின் படிக்கட்டில் தொங்கியபடி பயணித்த பயணிகளை பரங்கிமலை ரயில் நிலையம் அருகே இருந்த தடுப்பு சுவர் இடித்தது.
இந்த விபத்தில், 4 பேர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், 10க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள். சுவற்றில் தலை மோதியதில் சில பயணிகள் தலையே துண்டாகியுள்ளது.
சம்பவம் நடந்த இடத்தில், அடிபட்டு இறந்த மற்றும் காயமடைந்த பயணிகளின் செருப்பு, ஷூக்கள் சிதறி கிடக்கின்றன. தண்டவாளத்தில் ரத்தக் கறை படிந்து கிடக்கிறது.
இந்த சம்பவத்தின்போது, ஆம்புலன்ஸ் மற்றும் போலீசார் அங்கே வரும் முன்பாக, காயமடைந்து கிடந்தவர்களுக்கு முதலுதவி செய்து சில பயணிகள் அவர்களை காப்பாற்ற முயற்சிகளை எடுத்தனர்.
அதில் மூன்று இளைஞர்களைத்தான் படத்தில் பார்க்கிறீர்கள். சதீஷ், சலீம் மற்றும் கபீர் ஆகிய இம்மூன்று இளைஞர்களும், பயணிகளை மீட்டு ஆம்புலன்சில் ஏற்றுவது உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டனர். அவர்கள் சட்டைகளில் கூட ரத்தக்கறை அப்படியே உள்ளதை படத்தில் நீங்கள் கவனிக்கலாம்.
இருப்பினும், ரத்தத்தை பார்த்தோ, உயிர்வதையில் துடித்தவர்களை பார்த்தோ அவர்கள் பயந்து ஒதுங்கவில்லை. சில போலீசாரே தயங்கியபோதும் கூட இவர்கள் தைரியமாக உதவிகளை செய்துள்ளனர். சடலங்களை சேதம் அடையாமல் தூக்கி ஸ்ட்ரெக்சர்களில் வைத்து அனுப்பியதற்கும், இவர்கள் உதவியதாக நேரில் பார்த்தவர்கள் கூறுகிறார்கள்.
They are the heroes who rescued the accident victims at St Thomas Mount. Sathish, Saleem and Kabeer are still wearing blood soaked clothes. They are angry that nothing has been done even after countless accidents. ‘Trains don’t come on time, crowds don’t stop swelling’. pic.twitter.com/SPCtsYcFNT
— Pramod Madhav (@madhavpramod1) July 24, 2018
பத்திரிகையாளர் ஒருவர் இந்த படத்தை சோஷியல் மீடியாவில் பகிர்ந்து அவர்களை பாராட்டியுள்ளார்.
மேலும், சரியான நேரத்திற்கு புறநகர் ரயில்கள் வருவதில்லை என்பதும், போதிய ரயில்கள் இயக்கப்படுவதில்லை என்பதுமே, அதிகப்படியான கூட்டம் ஒரே ரயிலில் ஏறுவதற்கும், படிக்கட்டில் தொங்குவதற்கும் காரணமாக அமைந்துவிடுகிறது என்பது சக பயணிகள் குற்றச்சாட்டாக உள்ளது.